புதன், 30 டிசம்பர், 2009

பிறப்பு.




இறப்பிற்கும் சிறப்பிற்கும்
திறக்கப்பட்ட முதல் கதவு


இல்லற வினாவின்
விடை தெரியாத விடை


பூமிப்பந்தை உதைக்க
வந்த மனிதசக்தி


அனாதை இல்லங்களுக்கும்
ஆரம்பிக்கப்பட்ட திறப்பு விழா


வாடகைத் தாயின் வசூலால்
குப்பைத் தொட்டிக்கும் கிடைத்த வட்டி


இல்லாமையை இனிப்பாக்கும்
இனிமையான வரவு


ஆதாயம் படைத்தவருக்கு
ஆண்டுதோறும் கொண்டாட்டம்


வறுமைக்கும் சிலசமயம்
வாய்ப்புகள் கொடுக்கும் பெருமை


மந்தை மந்தையாய் பிறந்தாலும்
விந்தையாகவும் சில மனிதநேய பிறப்புகள்.

சிங்கை .


சிங்கை என்பது போதிமரம்
சிருங்காரம் நிறைந்திட்ட சீர்நகரம்


உழைப்பினால் உயர்ந்திட்ட அலைநகரம்
உயர்வுக்கு ஏற்றத் தலைநகரம்


பலஇன மொழி நிறைந்திட்ட கலைநகரம்
பாட்டாளி மக்களின் உழை(லை)நகரம்


புதுமைக்குப் பெயர்போன புதுநகரம்
வறுமைக்கு விடை சொல்லும் வளநகரம்


பூச்சோலை நிறைந்திட்ட பூ நகரம்
பாச்சோலை நிறைந்திட்ட பா நகரம்


தமிழுக்கு இடம் தந்த தமிழ்நகரம்
தரணியில் உயர்ந்திடும் தளிர்நகரம்


வணிகச் சந்தையினால் பணநகரம்
வளர்ந்து வரும் நாடுகளுக்கு முன்னுதாரணம்

வாய்ப்பிருந்தால் நீங்கள்
ஒருமுறையேனும் வரவேண்டும் .

வரப்பிரசாதம்.


தவங்கள் வேண்டி தனிமையில் தனித்திருந்தேன்
தரிசனம் கிடைத்ததால் தவம் கலைந்தேன்


புன்னகை இதழ்மலர பூரித்திருந்தேன்
பூவாய் மொழிகேட்டு தினம் மகிழ்ந்தேன்


குறுநகைப் பார்வையில் குதுகளித்தேன்
கூந்தல் போர்வையில் துயில் களைந்தேன்


இதழ்வழித் தேனில் நனைந்திருந்தேன்
இளமையைப் பரிமாற உயிர்த்தெழுந்தேன்


வசந்தத்தின் வாசலை அடைந்திருந்தேன்
வளமெல்லாம் பெருகிட வாழ்ந்திருந்தேன்


மெளனமாகிப் போனதால் உயிர்இழந்தேன்
வாழ்வியல் அர்த்தத்தை இன்றுணர்ந்தேன்


சுகமானது மட்டுமே சுகப்பிரசவம் அல்ல
வலிகள் கூட வரப்பிரசாதம்தான்.

புதன், 23 டிசம்பர், 2009

கடவுள் .

இருக்கிறது இல்லை
இன்றுவரை நடக்கும்
இ(ம)றை விவாதம் .


அன்பென்ற படகினால்
மட்டுமே கடந்திடும்
அற்புதக்கடல் .


கருணை உணர்வினால்
கண்களைத் திறக்கும்
களங்கமில்லா ஊற்று.


பக்திப் போர்வைக்குள்
பதுங்கிக் கொண்டிருக்கும்
தத்துவ ஞானி.


ஏழைகளின் சிரிப்பில்
பூத்துக் குலுங்கும்
புனித மலர் .


கடந்து உள்ளே
செல்பவர் மட்டும்
அறிந்திடும் காரிய
ச(மு)க்தி.


கலவரங்களுக்குக் காரணமான
களங்கமில்லாத காலத்தின்
காரணி .


அறிந்திடத் துணிபவருக்கு
மட்டுமே வாய்த்திடும்
அரூபமான காட்சி .


உதவிடும் குணத்தில்
உலவிக் கொண்டிருக்கும்
உன்மத்தன்.


தூய்மை உள்ளங்களில்
குடிகொண்ட தொலைந்திடாத
இன்பம் .

பள்ளிக்கூடம்.

இளமைப் பட்டாம் பூச்சிகள்
சிறகுகள் விரிக்கும்
வ(எ)ண்ணமிகுத் தோட்டம் .


அறிவை விருத்தி
செய்யும் ஆற்றல்மிகு
அனுபவச் சாலை .


ஒழுக்கம் உயர்வைப்
போதிக்கும் உன்னதக்
கலைக்கூடம்.


நாளைய தலைமுறைகளை
நடவு செய்யும்
நம்பிக்கை வயல்கள் .


கல்விக் கடவுளை
கண்களுக்குக் காட்டும்
கருணை ஆலயம் .


வியாபாரச் சந்தையாகவும்
மாறிவிட்ட விந்தைமிகு
விற்பனை .

வியாழன், 3 டிசம்பர், 2009

சோ(ஆ)று

மண்ணில் பூத்த
மணிநீர் இந்த சோறு
மானிட வாழ்வில்
மாபெரும் வரலாறு


நிலவு காட்டி
அன்னை ஊட்டிய
நிலாச் சோறு


நினைவு காட்டி
தந்தை ஊட்டிய
பலாச் சோறு


பால்ச்சோறு தயிர்சோறு
நெய்ச்சோறு இருப்பவர்
வாழ்வில் பலநூறு



கண்ணீரு செந்நீறு
கால்வயிறு இல்லாதவர்
வாழ்விற்குக் காரணம்யாரு



மனைவி உண்ட
மண்சோறு மணிமேகலை
கண்ட மந்திரச்சோறு

அரியும் சிவனும்
இணைந்த சோறு
அரிதாகி வருகிற
அவலத்தைப் பாரு


சோமாலியாவிலும்
ஓடியதோர் ஆறு
சோகங்கள் நிறைந்த
பஞ்சத்தின் ஆறு


பஞ்சங்கள் மறைவதற்குப்
படைக்கப்பட்ட ஆறு
மஞ்சத்திலே திளைத்திருந்தால்
மகிமை புரியாது


பாலாறு தேனாறு
பலப்பல ஆறு
காணாமல் போனது
யார்செய்த கோளாறு



வைத்த கை எடுத்ததால்
வைகை ஆறு
வறண்டு போய்
வடிக்கிறது கண்ணீறு


கா விரிந்து ஓடியதால்
காவிரி ஆறு
கலகத்திற்குக் காரணமான
கானல் நீறு


வடக்கிலே ஓடிவரும்
மூவாறு வற்றாது
வலம்வந்த வானாறு
நாகரீக நலப்பாட்டால்
நலிந்ததைப் பாரு


நதிகள் இணைப்பை
நவில்ந்தவர் நம்ம
பாரதியாரு

ஆறில்லா ஊருக்கு
ஆழகு பாழ் என்பது
ஔவை மொழி


சோறில்லா ஊருக்கு
சுகமில்லை என்பது
சோகத்தின் வ(ஒ )லி .

செவ்வாய், 1 டிசம்பர், 2009

தியாகம் .

தன்வாழ்வை இரையாக்கி
நடக்கின்ற யாகம்
தளராமல் குறைபோக்கி
சுரக்கின்ற வேகம்


கண்ணீரைத் தனதாக்கி
கடக்கின்ற மேகம்
செந்நீரைப் புனிதாக்கி
சிறக்கின்ற தேகம்


தமக்கெனவே உரித்தாக்கி
பிறக்கின்ற சோகம்
பிறர்கெனவே துயர்போக்கி
கிடைக்கின்ற யோகம்


எந்நாளும் நினைவாக்கி
வளர்கின்ற மோகம்
சொன்னாலும் மனம்தாக்கி
கிளர்கின்ற ராகம்


நல்வாழ்வை உரமாக்கி
செழிக்கின்ற போகம்
இல்வாழ்வை மரமாக்கி
இனிக்கின்ற பாகம்


யாவரையும் உறவாக்கி
கரைகின்ற காகம்
ஊணுயிரை நீராக்கி
நிறைகின்ற தாகம்

செய்தவருக்கு உயிராகி
நிலவுகின்ற அகம்
உய்தவருக்கு பெயராகி
உலவுகின்ற சுகம்


மனிதருக்கு மருந்தாகி
மகிழ்கின்ற தவம்
மாண்புகளில் சிறந்ததாகி
மலர்கின்ற தியாகம் .

உலகியல் வெப்பம் .


உலகியல் வெப்பத்தை
உலகமெல்லாம் உரைத்திடவே
அழகியல் மாற்றத்தால்
அழிந்துவரும் பூமியில்


நிலவியல் தேற்றத்தில்
நிபுணத்துவம் பெற்றவரும்
உளவியல் மாற்றத்தால்
உணர்ந்துவிட்டார் இப்பொழுது


அலைகடலின் நீருயர
அழிவைநோக்கி மாலத்தீவு
விலைபலவும் கொடுத்தோமே
வேதனைக்கு ஏதுதீர்வு


கலைபலவும் தான்வளர
மலைபலவும் மண்உடைத்தோம்
சிலைபலவும் செய்துவித்தோம்
சிந்தைகளால் மலைகொய்தோம்


உலைபலவும் அமைத்துவைத்து
உயிருக்குலை தினம்வைத்து
கொலைபலவும் புரிகின்றோம்
கொதிக்காதா இந்தபூமி



முல்லைக்குத் தேர்ஈந்த
முன்னோனும் இன்றிருந்தால்
முழம்முல்லை மூன்றெண்டா
விலைபேசி விற்றிருப்பான்


இயற்கையின் கொடியிலே
இதயத்தைக் காயவைத்தால்
செயற்கையெல்லாம் ஓடிவிடும்
செழும்பசுமை வேர்தழைக்கும்


வளமைமிகு வாழ்வென்றால்
வசந்தங்கள் வந்துசேரும்
வாழ்வுமட்டும் போதுமென்றால்
வளம்அழிந்து பார்மாளும்


சூடாகித் தெரித்தானே
சூரியனும் சிதறுண்டு
சுற்றிவரும் பூமியும்
சூடானால் பிளவுண்டு


காடாகிப் போனமண்ணில்
காணவில்லை பசுமையின்று
மேடாகிப் போகிறது
மேகம்கூட நீர்வறண்டு


காத்திடுவோம் தலைமுறைகள்
காலமெல்லாம் பசுமைகாண
பூத்திடுவோம் பசுமையாக
பூவுலகம் புதுமைகாண .

திங்கள், 30 நவம்பர், 2009

உயிர்வலி.


அன்னை பெற்றெடுத்த அன்பின்வலி
ஆண்மையை வென்ற பெண்மையின்வலி
இன்பத்தில் நின்ற உண்மையின்வலி
ஈன்ற பொழுதில் உவகையின்வலி
உயிர்பெற்று வந்த ஊணுடலின்வலி
ஊர்போற்ற வேண்டிய மானுடலின்வலி
எவ்வலியும் அறியாத பூ மடலின்வலி
ஏந்திழையால் நீர்சொரிய உயிர்தலின்வலி
ஐம்பெரும் பூதங்களை அறிதலின்வலி
ஒப்பனைகள் இல்லாத முகிழ்தலின்
ஓர்நாளும் சொல்லாத பகிர்தலின்வலி
ஔவியம் பேசாத நெகிழ்தலின் வலி .

ஞாயிறு, 29 நவம்பர், 2009

பரிமாற்றம்.

வள்ளுவன் சொல்லாத
வாழ்வியல் நெறியா
ஔவை சொல்லாத
அமுதமான மொழியா

கம்பன் இயற்றாத
காவிய ரசமா
பாரதி பாடாத
பார்யுகப் புரட்சியா

படைத்தவைகள் இங்கே
பரிமற்றம் பாத்திரத்திற்கு
ஏற்ற உருமாற்றம்

நடையை மாற்று
என்றொரு நண்பர்
அடியை மாற்று
என்றொரு அன்பர்

பரிமாற வந்த
பதார்த்தங்களே
படைத்தவைகள் எல்லாம்
எதார்த்தங்களே

அன்னப் பறவையின்
நடையொரு அழகு
சின்னப் பறவையின்
சிறுநடை அழகு


வண்ணக் கிளியின்
வாய்மொழி அழகு
சின்னக் குழந்தையின்
தேன்மொழி அழகு

எண்ணக் குவியலின்
எல்லாமே அழகு
முதலில் நீ பரிமாறப் பழகு.

தாய் முகம் .

கற்றைக்குழல் முடித்துக்
காலையிலே விழித்திடுவாள்
சற்றேனும் ஓய்வின்றி
சலசலத்து உழைத்திடுவாள்


பற்றவைத்த அடுப்பினிலே
பலகாரம் செய்திடுவாள்
விற்றஒற்றைப் பணத்திலே
விறகுகளை வாங்கிடுவாள்


கற்றவித்தை எதுவென்றால்
கண்ணீரைச் சொரிந்திடுவாள்
குற்றமற்றத் தாயுள்ளம்
குறையேதும் கண்டதில்லை


அற்றைத்திங்கள் வெண்ணிலவும்
ஆழகில்லை அந்நாளில்
ஒற்றை நிலவாகி
ஒளிவீசிச் சென்றாயே


நெற்றியில் நீர்வடிய
நெருப்பூட்டிச் சமைத்தாயே
வெற்றியைக் காணுமுன்னே
வெந்தணலில் வெந்தாயே


பட்டதுயர் கொஞ்சமல்ல
பட்டபாடு என்னசொல்ல
சுட்டெரிக்கும் அகல்விளக்கில்
சூடுபட்டு நின்றபோது


பட்டறிவு வேண்டுமென்று
பாடம்சொல்லிச் சென்றாயே
சட்டமிட்டு உன்வடிவை
சாமியென வணங்கும்போது



எரிகின்ற எள்விளக்கில்
என்தாயின் ஆழகுமுகம்
தெரிகின்ற தேவதையின்
தேன்சிந்தும் நிலவுமுகம்.

வெள்ளி, 27 நவம்பர், 2009

தொலைந்த நாட்கள் .


நிலவொளியின் முற்றத்தில்
நீலவானம் பார்த்திடவே
பலகதைகள் பேசிவந்த
பசுமையான காலமது


இருள்வந்து மூடிவிடும்
இனிமையான பொழுதினிலே
அருள்பொங்க அந்தரத்தில்
அழகுநிலா பவனிவரும்


ஒளிவீசும் அம்புலியை
ஒப்பனைகள் செய்திடவே
வெளியெங்கும் வீதியிலே
வெள்ளிகளும் ஊர்வலமாய்


கருமைபூண்ட இரவதுவும்
காண்பதற்கே ஆவல்தூண்டும்
வருமைகொண்ட மண்வீட்டில்
வாய்க்கவில்லை மின்சாரம்

மண்ணெண்ணை விளக்கொளியில்
மகிழ்வோடு கதைபடிப்போம்
தன்னொளியைக் குறைக்குமட்டும்
தளராமல் விழித்திருப்போம்


துன்பமில்லை அந்நாளில்
தொலைதிருந்தோம் கவலையெல்லாம்
இன்பமான அனுபவத்தை
இதயத்தில் சுமந்திடவே


பொருள்தேடி புறப்பட்ட
புதுயுக வாழ்வினிலே
இருள்தந்த அவ்வெளிச்சம்
இன்னாளில் கிடைத்திடுமா .

வியாழன், 26 நவம்பர், 2009

மாவீரர் நாள் .




அகிம்சை வழிகண்ட
அண்ணலின் வழிநின்று
உண்ணாமல் விரதமிருந்து
உயிர்நீத்த உத்தமனாம்


திலீபனின் நினைவாக
ஏற்றிவைத்த தீபமிது
கொழுந்துவிட்ட சுடரதுவும்
குளிரவில்லை இன்றுவரை


உரிமையென்ற உணர்விற்காக
தியாகமாகத் தன்னுயிரை
தாரைவார்த்த வேங்கைகளின்
நினைவுபோற்றும் நாளிதுவே



அண்ணனவர் உரையாற்ற
ஆண்டாண்டு எழுச்சியுற்று
மாண்டவர்கள் புகழ்பாடும்
மாண்புமிகு பெருநாளாம்


புதைக்கப்பட்ட மனிதரெல்லாம்
புகழோடு மறைவதில்லை
விதைக்கப்பட்ட இவர்தியாகம்
வீணாகப் போவதில்லை


வரலாற்றுப் பக்கங்களும்
வன்னிநிலப் புகழ்பாடும்
வணங்கிடுவோம் இன்னாளில்
எழுந்துவரும் எம்மினமே

துடைத்தொழிக்கத் துணிந்துவிட்ட
துன்மார்க்கக் குணம்படைத்த
தருக்கர்களின் தலைநெரித்துத்
தளைத்திடுவோம் ஓர்நாளில்

பொறுத்திருப்போம் புலிசீரும்
பொய்யாகப் போவதில்லை
போற்றிடுவோம் வீரர்களை
மாவீரர் திருநாளில்.

வெள்ளி, 20 நவம்பர், 2009

மொழியும் விழியும் .


கண்ணிருந்தும் குருடரென கல்லாதார் நிலைபோக்க
எண்ணிரெண்டு வயதினிலே ஏற்காத இளங்கல்வி
தமிழ்வழியே நாம்கற்றால் தன்மானம் வளருமென்று
தமிழவேந்தர் புரட்சிக்கவி தரணிக்கே முழங்கிட்டார்

விழிபோல எண்ணிடவே விழிப்புடன் மொழிகாத்தால்
பழிபோகும் நடைபோட பாதையிலே பூமலரும்
யாமறிந்த மொழிகளிலே யாரறிந்தார் இதுபோன்று
பாமரனும் அறிந்திடவே பாரதியும் இனிதென்றார்


முருகென்றால் அழகென்று முருகவேல் முன்னிறுத்தி
அருகிடவே அந்நாளில் அழகுதமிழ் செய்வித்தார்
கடைவிரித்து காசுஎண்ணும் கலிகால உலகத்தில்
குடைவிரித்து மறைத்தாலும் குலம்காத்துத் தமிழ்வளரும்


பொய்யாமல் போற்றுவித்த பொதுமறையாம் வள்ளுவத்தை
கொய்யாத மனங்களில் கொழுந்தாக துளிர்வித்தால்
மொழிவளரும் விழிபுலரும் மேன்மையுறும் தமிழினமே
மொழிதானே முகவரிகள் விழித்துக்கொள் தமிமனமே .

புதன், 18 நவம்பர், 2009

நீர்க் கூத்து.





பொன்னியவள் நடைபயின்று
பூமியெல்லாம் வளம்கொழிக்க
கன்னியவள் வலம்வந்தால்
கருணையுடன் நிலம்செழிக்க

பஞ்சமில்லை தமிழகத்தில்
பாவையவள் பாயும்வரை
கொஞ்சுமலை குடகதனின்
கொடுமுடியில் பிறந்தவளை

சினங்கொண்டு குறுமுனியும்
சிறைபடுத்திச் சென்றதாலே
மனமொடிந்து போனவளை
மாமருகன் அண்ணனவன்


தடம்மாறித் தவழவிட்டான்
தரணியிலே நீர்விரிய
குடமுனியின் கோபத்தாலா
கோட்டைவிட்டோம் காவிரியை


முன்னையொரு காலத்தில்
முகிழ்த்துவிட்ட தவறினாலா
பென்னிகுக் பிறப்பெடுத்து
பேறுபெற்றான் பூமியிலே


கொண்டபல செல்வமெலாம்
கொடுத்தானே அணைஎடுக்க
கண்டுமிவர் திருந்தவில்லை
காரணத்தை அறியவில்லை

இரக்கமில்லா இழிமனத்தார்
இயலாது என்றுரைக்க
மறத்தமிழன் என்றுசொல்லி
மாமாங்கம் இவர்நடிக்க


அடுக்கடுக்காய் ஆண்டுதோறும்
அரங்கேறும் நீர்க்கூத்து
தடுக்காமல் வந்திடுமா
தாகம்தீர்த்துச் சென்றிடுமா .

புயலான பூ.


கொடிகளில் பூத்து
கொய்து தொடுத்த
கொற்கை மலரல்ல


கொடியிடைக் கண்ணகி
கொற்றவை சூடிட
கோபமும் இதற்கில்லை


பணிந்த கால்களில்
அணிந்த போதும்
துணிந்திட மனமில்லை


நிலைகெட்ட போதிலும்
விலையிட்ட நிலையிலும்
வேதனை கொண்டதில்லை


உயிர்கொண்டு போனதால்
மயிர்கலைந்த மையினால்
ஏந்திய வேளையிலே


மகரந்தப் பரல்களாய்
மாணிக்கம் சிதறையில்
புயலான புரட்சிப் பூ

காப்பிய வடிவினில்
காலங்கள் போற்றிடும்
கண்ணகி காற்சிலம்பு .

மகாகவி பாரதியார் .




மகாகவி
பாரதியார்
பாரதி யார்?

பாலக வயதில் கலைமகள் பட்டம் பெற்றவர்
பார்ப்பன வீதியில் பகலவனாகிச் சுட்டவர்

எட்டைய புரத்திலே மொட்டாக மலர்ந்தவர்
எட்டாத உயரங்களை எட்டிவிட்டு உயர்ந்தவர்

பாக்களால் தேரோட்டிச் சாரதியானவர்
மாக்களாய் வாழ்ந்தவர்களுக்கு மனக்கிளர்ச்சி தந்தவர்

புலயனுக்கும் பூநூலை சூடிநின்ற தகையவர்
புரையோடியச் சாத்திரங்களை புனிதனாகிச் சாடியவர்

மண்ணடிமை பாரதத்தை மனம்காணா தகித்தவர்
பெண்ணடிமைச் சாக்காட்டைப் பெரிதாக வெறுத்தவர்

புதுமைப் பெண்களுக்கும் புதுவழியை வகுத்தவர்
புகழ்மாலைப் பூச்சூடி கவிமாலை தொகுத்தவர்

சுதந்திர வேள்விக்குச் சுடுகவிகள் புனைந்தவர்
சுயநலம் அல்லாது சூரியனில் நனைந்தவர்

சீட்டுக் கவிபாடி ஏட்டுக்கவி பாடியவர்
சிட்டுக் குருவிக்கும் வீறுநடை காட்டியவர்

காலனைப் சிறுபுல்லென நினைத்துத் துதித்தவர்
காலருகே வரச்சொல்லி அனைத்து மிதித்தவர்

நெருப்புக் கோலங்களை கண்களாகக் கொண்டவர்
மருப்பு வேழத்தையும் பண்களால் வென்றவர்

முறுக்கிய மீசையில் முகில்கருமை உண்டவர்
குறுக்கிய தேகத்திலும் சந்திரனாகி நின்றவர்

சண்டைக்காக கட்டாத முண்டாசு பிரியர்
சாதிகள் இரண்டென்ற சமத்துவ நெறியர்

சுட்டெரிக்கும் சூரியனையேத் திலகமாக இட்டவர்
சுதேச மித்திரனின் ஆசிரியப் பொறுப்பேற்றவர்

காதல் கவிதைகளும் கற்பனைகளும் பாடியவர்
கருப்பு அங்கியால் தேகத்தை மூடியவர்

காக்கைக் குருவிகள் எங்கள் சாதிஎன்றவர்
கண்ணனிடம் காதலாகிக் கசிந்துருகி நின்றவர்

நல்லதோர் வீணையாகிப் புழுதியில் கிடந்தவர்
நலிந்துவிட்ட சமுதாயத்தை புடம்போட வந்தவர்

சுதந்திரம் பெற்று விட்டோமென்று ஆனந்தக் கூத்தாடியவர்
நிரந்தரம் வெல்வது உறுதியென்று ஆணையிட்டுச் சொன்னவர்

வறுமையிலும் பெருமைகளைத் தொலைக்காதவர்
அருமைகளைச் சொல்லி யாசகம் கேட்டுப் பிழைக்காதவர்

புதுக்கவிதை பாதைகளுக்கு புதுவிதைகள் இட்டவர்
எமக்குத் தொழில் கவிதை என்று கவிநாற்று நட்டவர்

தலைவணங்கும் பழக்கமில்லை தன்மானம் மிக்கவரவர்
தமிழ் மொழிபோல் கண்டதில்லையென்ற சொக்கரவர்

பழமொழிகள் கற்றுணர்ந்த விர்ப்பணரவர்
பாடங்கள் பலசொன்ன சுப்பனரவர்

தூரத்து தேசங்களுக்கும் கவிமடல்கள் வரைந்தவர்
பாரதத்துத் தோசம்நீங்கப் படைத்தவனிடம் இறைஞ்சியவர்

தன்மனைவி தன்குழந்தை நலன்களை மறந்தவர்
தமிழனாகப் பிறந்தவர்களில் தலையாயச் சிறந்தவர்


காணிநிலமும் கேணியும் கேட்ட ஞானியவர்
காலங்களைக் கடந்து நிற்கும் தோணியவர்

வெள்ளைக் கூட்டத்தை விரட்டவந்த வேங்கையவர்
சொல்லை வில்லாக்கிச் சொற்ப்போர் புரிந்தவர்


தாயின்மணிக் கொடியை பாரீர்ரென்று புகழ்ந்துரைத்தவர்
தரணியிலே பிறப்பாரா அவர்போல இனியொருவர்


காலச் சோலையிலே கூவுகின்ற குயில்அவர்
ஞாலக் கவியாலே நடைபயின்ற மயில்அவர்

தொலைநோக்குப் பார்வையிலே தொல்நோக்கியவர்
கலைநோக்கு சாத்திரங்களில் கல்நீக்கியவர்

தனிமனிதப் பசிக்காக உலகழிப்போம் என்றவர்
தன்பசியைத் தான்போக்கத் தன்உடலைத் தின்றவர்


பாப்பாவி்ற்கும் சொன்ன பிள்ளை மொழிக்காரரவர்
பாதகம் செய்பவரை முகத்தில் உமிழ்ந்துவிடச் சொன்னவரவர்


சக்திபுகழ் பாடிநின்ற பித்தரவர்
முக்திபெற்று முழுநிலவான சித்தரவர்


சொன்னபடி வாழ்ந்து நிறைந்த நெறியரவர்
சொன்னபடி வாழ்கின்ற கவிஞர் இன்றுஎவர்



குறைந்த வயதில் காலமான நிறைகுடம் அவர்
நிறைந்த கவிகளிலே மணிமகுடமாகத் திகழ்பவர்

இறக்கின்ற போதிலும் இல்லாத வறியரவர்
சுடுகாடு சென்றவர்கள் இருபதிலும் குறைவர்


தாசனுக்கு ஆசானான நேசனவர்
நீக்கமற நிறைந்திருப்பதில் ஈசனவர்

மான்கவிகள் வான்கவிகள் பிறப்பார் இறப்பார்
மகாகவி என்று சொன்னால் பாரதி மட்டுமே நிலைப்பார் .

கோழிக் குஞ்சு



தாய்க்கோழி இறகுகளின் தகதகக்கும் வெப்பத்தில்
போய்ஒளிந்து மூடிகொண்டு போர்வையென அணிந்தாயே

உடற்சூட்டை உள்ளிறக்கி உனக்காக தனைஉருக்கி
இடர்பட்டக் கதையெல்லாம் இதுவென்று அறிவாயா

இருபத்தி யொருநாளும் இளைத்தகதை உணர்வாயா
இனவிருத்தி இதுவென்று இடர்பாட்டை மறவாயா


பருந்தோடு சண்டையிட்டு புண்பட்ட உன்தாயும்
பிரிந்தோடு என்றுசொல்லி பிரிக்கும்கதை தெரிவாயா

விரைந்தோடும் இவ்வுலகில் வேதனைக்குப் பஞ்சமில்லை
மறைந்தோடும் மண்ணுலகின் மகத்துவம் இதுவென்று

மனதார ஏற்றுநீயும் மகிழ்வுடன் வளர்வாயா
மனம்தளரா இளநெஞ்சே மரணத்திற்கும் இனியஞ்சேல்

கொத்திவிரட்டும் தாய்க்கோழி கோபமல்ல சிறுகுஞ்சே
புத்திபுகட்டும் உனக்காக புத்தனைப்போல் தாய்நெஞ்சு .

சனி, 31 அக்டோபர், 2009

கடற்கரை





கடல்
காதலிக்காக
மடல் எழுதிக் காத்திருக்கும்
மணல் காதலன் .

பாதச் சுவடுகள் பலபதிந்தும்
காலச் சுவடாய் இவனுள்
கரிக்கும் நீர்மங்கை .


ஊடல் கொள்ள நினைத்தவனுக்கு
சிலநேரம் உதடுமட்டும்
நனைவதுண்டு .


அலைப் புன்னகையை
வலைவீசிப் பிடிக்கக் காத்திருக்கும்
வசீகர (மீ)மானவன்.



தென்றல் தாவணி
தழுவும்போது மட்டும்
தேகம் சிலிர்க்கும் இவனுக்கு .



காதலித்தவள் கட்டி அணைத்தால்
காலமாகிப் போவார்களென்று
கண்கொண்டுக் காத்திருக்கும்
காதல் தியாகி .


மானுடக் காதலையும்
வான்கூடும் காதலையும்
தேன்கூடாய் சேகரிக்கும்
தேமதுரக் கவிஞன்.

புதன், 16 செப்டம்பர், 2009

அது மட்டும் வேண்டாம் .

ஏர்பின் நின்றது உலகமென்று
பார்புகழும் வள்ளுவத்தை
படித்ததோடு சரி .

போர் ஒன்றே போதுமென
வேர் அறுக்கும் உலகில்
வேதனைக்குப் பஞ்சமில்லை

உயிர் காத்த உழவரெல்லாம்
பயிர் செய்ய வழியின்றி
பத்தினியை விற்கும் அவலம்

தொடர்ந்திடும் துயரத்திற்கு உலகே
இடம் தருவாய் என்றால்
அது மட்டும் வேண்டாம் .

வியாழன், 10 செப்டம்பர், 2009

கனிவான கவனத்திற்கு .

கதிரவக் கண்ணாடியில் பூமிமுகம் பார்க்கும்
காலைப் பொழுது விரைவுச் சாலையிலே
வாகனங்கள் அணிவகுத்து வருது
பணிக்காக நானும் அந்தப் பாதையிலே பயணம்
பாதையிலே இருபுறமும் பார்வை என்கவனம்
மலர் தூவீ வரவேற்ற மரங்களின் அணிவகுப்பு
மடிந்த இலைசருகாகி மண்நோக்கி மறுபிறப்பு
எல்லைக்குள் அடைக்கப்பட்ட
செடிகள் எல்லாம் எத்தணித்தன
எங்களோடு கைகுலுக்க
எல்லைதாண்டி ஆர்ப்பரித்தன
அலுவலின் பலுவல் நிமித்தமாக
விரைகிறோம் நண்பர்களே
அலுவலகம் விடுப்பென்றால்
அளவளாவோம் அன்பர்களே .

நீர் நீரே .

ஆழியிலே முகந்து ஆகாயம் சுமந்து
அலைகாற்றில் நகர்ந்து அழகாகச் சேர்ந்து

மழையெனவேப் பொழிந்து மண்மீது விழுந்து
மரம்கொடிகள் நனைந்து மனிதருக்கும் உகந்து

மலைமீதும் தவழ்ந்து மடுநோக்கிச் சரிந்து
நதியெனவே நடந்து நளினமாக வளைந்து

நாடுநகரம் கடந்து நாகரீகம் நிறைந்து
தனித்தன்மை இழந்து தன்முகத்தை மறந்து

தப்பியது உலர்ந்து தாய்மடியை அடைந்து
தன்கவலைகள் மறந்து தரணியிலே சிறந்து

உலகு துய்க்க வந்த நீரே
உயிர்கள் இருப்பதின் காரணம் நீரே .

என் உயிர் காதலி .


என் உயிர்க்காதலி
ஈடுஇணையற்ற
இயற்கை எழிலி
இவள் பூப்பெய்து
பூமிசூடிய
பூங்குழலி

சங்க இலக்கியங்களும்
இவளது அங்க
இலக்கியங்களைப் பாடும்
ஐம்பெருங் காப்பியங்களும்
ஆபரணம் சூடும்


அழகி உன்னைப்பாட
அடங்கவில்லை ஏடும்
கிழவியாகிப் போனவளுக்கும்
உன்மேல்மோகம் கூடும்


உன்பெயரை உரைக்கையிலே
என் நாவெல்லாம் துள்ளும்
நீ காலப் பேழை சுமந்துவந்த
கட்டழகு வெள்ளம்


கல்தோன்றாக் காலங்களும்
உன் கவின் அழகைச்
சொல்லும் .புல்தோன்றா
நிலங்கள் கூட
புளங்காகிதம் கொள்ளும்

நாளெல்லாம் உன் நினைவால்
என் ஆயுள் ஓடும்
நாளமில்லாச் சுரப்பிகளும்
நாட்டியம் தான் ஆடும்



நாலந்தாக் கழகம் கூட
உன் நளினம் காணக் கூடும்
நலம்தானா என்று சொல்லி
நாணிவிட்டுப் பாடும்


எத்தனையோ பேரழகிகள்
மண்ணுலகில் உள்ளாரடி
முத்தழகி முத்தமிழே
உனைப்போல முத்துமொழி
சொல்லாரடி .

பூக்காத மரங்கள்.

பூக்காத மரங்கள்
பூமியில் அன்புபூக்காத மனங்கள்
மரம் என்றால் பூக்க வேண்டும்
மனம் என்றால் அன்பு பூக்கவேண்டும்
அண்ணல் என்ற அகிம்சைப்பூ
அறவழி கண்ட அதிசயப்பூ
பாரதி என்ற புரட்சிப்பூ
பார்நிகரட்ற புதுமைப்பூ
தொண்டுகள் செய்து பூத்த பூ
வெண்தாடி பூத்த வெண்கலப்பூ
சேவைகளில் பூத்த தேவதைப் பூ
தெரசா என்ற சேவைப் பூ
மரங்களில் பூத்த பூ உதிர்ந்துவிடும்
மனங்களில் பூத்த பூ உயர்ந்துவிடும்
பூக்காத மரங்கள் என்று கோடியுண்டு
பூக்காத மனங்களில்
அன்பு பூத்தால் நன்று
பூக்காத மரங்கள்
பூமியில் அன்பு பூக்காத மனங்கள்.

புதன், 9 செப்டம்பர், 2009

யாதுமாகி நின்றாய் .


நீக்கமற எங்கெங்கும் வேதமாகி
நோக்குகின்ற திசையெல்லாம் கீதமாகி
காக்கின்ற தெய்வமென யாதுமாகி
பார்க்கின்றேன் பாரதியே பாரெங்கும் உன்வடிவை


கவியரங்கத் தலைமை யேற்றக் கறுப்புச் சூரியரவர்
கவிவரியில் மரபில் திளைத்து ஊறியரவர்
உணர்ச்சிக் கவிபடித்தால் ஒழுகுமையா கண்ணீரு
தளர்ச்சி வயதிலும் தமிழ் படைக்கும் எங்கள் கவிஞரேறு


உரம்படைத்த தெய்வத்தின் உண்மைக்கதை கேட்டிடுவீர்
கரம்கூப்பி வணங்குகிறேன் காத்திடுக என்தெய்வம்

கவியுலகில் கதிரவனாய் காண்கின்ற திசையாவும்
புவியாவும் நிறைந்தாயே புரட்சிக் கவிபாரதியே

ஆயிரம் கோடித் தெய்வமென அறிவிலிகள் தினம்தேடி
ஆலயம்தான் நாடுகிறார் அறிவுஎனும் மனம்மூடி

என்தெய்வம் நீயெனவே எடுத்திங்கே இயம்புகிறேன்
காத்திடுக காலமெல்லாம் கடவுளுனை நினைந்துருக

சாத்திரங்கள் படைத்திட்ட சாமியெல்லாம் சொன்னகதை
ஆத்திரம் கொண்டாயே அதிலொன்றும் உண்மையில்லை

சூத்திரம் சொல்லிடவே சூட்சுமமாய் ஒருசாதி
மூத்திரம் அள்ளிடவே முறைதவறி ஒருநீதி

ரவுத்திரம் கொண்டாயே கவிமகனே அதைச்சாடி
பவித்திரம் ஆனாயே பரம்பொருளின் வடிவாகி

நடமாடும் மனிதருக்கு நல்வினைகள் செய்தாலே
படமாடும் பரமனுக்கு படைத்ததுபோல் ஆகுமென்று

புடம்போட்டுச் சூடினாயே புலயனுக்கும் பூநூலை
வடம் பிடித்து இழுக்கவேண்டும் வாருமையா இவ்வேளை

புனிதமானச் சாமியெல்லாம் பூவுலகை மறந்தபோது
மனிதவுருச் சாமியாக மண்ணுலகில் அவதரித்தாய்

அப்பனுக்குப் பாடம்சொன்ன அழகுவேலன் சுப்பையா
அற்பனுக்கு பாடம்சொல்ல பாரதியாய் வந்தாயா

தமிழ்கேட்ட வேல்முருகன் தமிழ்காக்க வந்தானோ
தமிழ்காத்து தரணிக்கே தலைமகனாய் நின்றானோ

சூரனை வதம்செய்த சுப்ரமணிய வடிவாகி
பாரெனவே நடைபயின்றாய் பாங்குடனே மிடுக்காக

வேலெடுத்து வேலவனும் வியணுலகை வென்றதுபோல்
கோலெடுத்து வந்தாயோ கொடுமைகளை களைந்தெடுக்க
எழுதுகோலெடுத்து வந்தாயோ எரிமலையாய் கவிவடிக்க

உன்கவியுடுக்கை ஒலித்தபின்தான் புவிமிடுக்காய் நடந்ததையா
அருள்கிளர்ந்து எழுந்ததையா இருலொளிந்து போனதையா

நாமகளின் பட்டம்பெற்று நாணிலமும் பயனுறவே
பூமகளின் மேனியிலே புனிதனாக அவதரித்தாய்

கோளவிழிப் பார்வையிலே குளிர்ந்துவிடும் எரிமலையும்
ஞாலமொழிப் புலமையிலே எழுந்துவரும் பலகலையும்

பரம்பொருளின் படைப்பதனின் பக்குவத்தை நீயுணர்ந்து
வரம்புகளை உடைத்தெடுத்தாய் வல்லமையாய் கவிவடித்து

நரம்புகளும் புடைத்துவிடும் நாணமது ஓடிவிடும்
சுரந்துவரும் நின்கவியில் சுயவுணர்வு மரியாதை

இடர்பட்ட தேசமதை இருளிலே மீட்டெடுக்க
சுடர் விட்டாய் கவிவிளக்காய் பாரதத்தின் துயர்துடைக்க

மண்ணிலே தெய்வமெல்லாம் மலிந்துவிட்ட கணப்பொழுது
கண்ணிலே ஒளிபொங்க கருக்கொண்ட கவிமுகிலே

அதர்மங்கள் அதிகரிக்க அவதாரம் உண்மையென்றால்
அதனாலே அவதரித்த அருந்தெய்வம் நீயன்றோ

பலதெய்வம் இங்குண்டு பட்டியலும் கொஞ்சமல்ல
குலதெய்வம் நீயென்று வணங்குவதில் குறையுமில்லை

கூடிநின்ற பொருளனைத்தின் கூட்டமெல்லாம் தெய்வமென்று
வாடிநின்ற பயிர்களை வள்ளலாரும் கண்டதுபோல்

உயிர்களெல்லாம் ஒன்றென்று உணர்ந்து சொன்னாய் உள்ளொளியாய்
உயிர்களிலே நீக்கமற நிறைந்துவிட்டாய் நல்ளொளியாய்

யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழியே இனிமைஎன்றாய்
யாதுமாகி நீக்கமற கவிவரியால் உலகுவென்றாய்

முகில்யிடிக்கும் முகவரியாய் முடிதனிலே முண்டாசு
முறுக்கிவிட்ட மீசையினால் உன்குலமும் ரெண்டாச்சு

குறத்தியவளை மணமுடித்து குலமெல்லாம் ஒன்றென்று
துரத்தியன்று காதலித்தான் ஈசனவன் குமரனவன்

நிறத்திலொரு பிரிவில்லை யாவுமே ஒன்றென்று
துரத்தினாயே சாதிஎன்னும் சமுதாயப் பேய்தனை

கழுதைதனை பன்றிதனை தேளதனை தெய்வமென்று
அழுதகதை என்னவென்று நான்சொல்வேன் எஞ்சாமி

உயிர்களெல்லாம் ஒன்றென்று உணர்ந்துசொன்ன கவிவரியால்
உன்புகழை இன்றுவரை தொழுகிறது தமிழ்பூமி

அன்பே சிவமென்றால் அறிவேதெய்வமென்றாய்
அறிந்துகொண்டோம் ஐயமில்லை அறிவுதெய்வம் நீயன்றோ

தனிமனித பசிகண்டு தணலெனவே தகதகத்தாய்
இனியிருக்க வேண்டாமென்று கவிவரியால் உலகழித்தாய்

குருவிகளுக்கு உணவளித்து குழந்தைகளை மறந்துவிட்டாய்
அறிவிருக்கும் இடமெல்லாம் அகல்விளக்காய் நிறைந்துவிட்டாய்

காணிநிலம் கடன்கேட்டா காளியிடம் வரம்கேட்டாய்
நாணிடவே அழுதிருப்பாள் தன்மகனின் தமிழ்பாட்டால்

வரம்கொடுக்க வந்தவனே வரம் கேட்டால் என்னசெய்வாள்
உரம் போன்ற உன்நெஞ்சின் உள்நினைவை அவளறிவாள்

நிற்பதும் நடப்பதும் பறப்பதும் சொர்பனமெனே
அர்ப்பணமாய் உனைக்கொடுத்தாய் அவளுக்குத் தெரியாதா

சுப்பனவன் சூட்சுமமாய் காலனைவரச் சொல்லி
அப்பனைபோல் மிதித்த அந்தஆதிகதை அறியாததா

பூமியிலே சாமியெல்லாம் பிறந்துவந்த கதையெல்லாம்
படித்ததுண்டு பாடம் சொல்லி பக்குவமாய்க் கேட்டதுண்டு

லீலைசெய்யும் சாமியெல்லாம் இன்றுவரை இங்குண்டு
சேலைதனைக் கண்டுவிட்டால் மாலையிலே வேலையுண்டு

பல்லாக்கில் பவனிவரும் பங்காரு அம்மாசாமி
நல்வாக்கு சொல்லிடவே நாடெங்கும் பலசாமி
செல்வாக்கு பெற்றிருக்கு சேமமுடன் சாமியெல்லாம்

கொலைபுரிந்தச் சாமியெல்லாம் கோடியிலே புரளலையிலே
விலையில்லாச் சாமிநீயோ வறுமையிலே வாடிநின்றாய்

சிலைவடிவச் சாமியெல்லாம் கடல்தாண்டி விற்பணையில்
கலைவடிவச் சாமி நீயோ கவிஉலகில் விற்பனனாய்

காணக் கிறுக்கனென வருமையுனை உண்டபோதும்
ஞானச் செறுக்கினாலே வருமைதனை உண்டுவிட்டாய்

ஈழத்து ஓலமதனை மூலமாக நீயுணர்ந்து
பாலமிடச் சொன்னாயே பார்ரதனைக் கேட்கவில்லை

வேரற்றுப் போனதையா வேதனையே அங்குமிச்சம்
நீருற்ற வருவாயா நின்கவியால் அடைகஉச்சம்

வையகத்துள் வாழ்வாங்கு வாழ்ந்தாயே வணங்குகிறோம்
தெய்வத்துள் வைக்கப்பட்ட திருமகனே அருள்புரிக .

ஞாயிறு, 6 செப்டம்பர், 2009

காஞ்சித் தலைவன்


சொல்லாற்றல் வன்மையிலே சுரந்துவரும் கவிநடையில்
கள்ளுண்ட போதையென கிறங்கிடுவர் உரைநடையில்

பெரியாரின் பாதைபற்றி பவனிவந்த அறிஞரவர்
தறிநெய்யும் காஞ்சிநகர் தென்னகத்து பெர்னாட்சா

கரகரத்த இவர்குரலின் கனிந்துவரும் பேச்சழகில்
கரமொலிக்கக் கேட்டிருப்பர் கனமழையில் நனைந்திடவே

இடியிடித்த மேகமென இளகிவரும் உரையிடையில்
போடிபோடும் வேகமது பொதிந்திருக்கும் விரலிடையில்

உருவத்திலே பார்ப்பதற்கு உன்மேனி குள்ளமென
உருவகித்தால் உன்புலமை மடைதிறந்த வெள்ளமென

நாடகத் துறையினிலே நடைபயின்றாய் ஞானியென
ஊடகங்கள் போற்றிடுமே எழுத்துலகின் தோணியென

துப்பாக்கி விரல்காட்டித் துரிதமாகச் சொன்னாலே
தப்பாமல் செய்திடுவர் தம்பியர்கள் பின்னாலே

நம்பியவர் உன்பின்னே நாடெங்கும் சேர்ந்திடவே
தம்பியவர் துணைகொண்டு உன்னாட்சி மலர்ந்ததன்று

பற்றில்லா வாழ்வினிலே பகுத்தறிவைக் கடைபிடித்தாய்
புற்றுநோய் வந்ததினால் பூமித்தாயின் மடிபுகுந்தாய்

தமிழுலகம் இன்றுவரை தவமிருக்குத் தலைவா
தமிழ் படைக்கத் தரணியிலே தளிர்த்து மீண்டும் வா வா ..














திங்கள், 6 ஜூலை, 2009

மானம்

மஞ்சள் கயிற்றிலே
மணி ஊஞ்சல் ஊக்குகள்
கால்சட்டைக் கிழிந்தபோது
காரணம் புரிந்தது .

ஞாயிறு, 5 ஜூலை, 2009

சுமை

என்னைச் சுமந்தவள்
காலமாகிப் போனால்
என்னைக் கரைத்துக்
கொண்டிருக்கிறது காலம்
நான் அவளைச் சுமந்தபடி .

தழும்பேறிய உன்கைகளால்
களிம்பிடும் கணங்களில்
தழும்பிடும் கண்ணீரால்
கரைந்திடும் என்சுமை.


கரைந்தோடும் கண்ணீரால்
கலங்கிடும் உன்நெஞ்சில்
கணமேனும் குறையுமா
நீ பட்ட வேதனை.

அமாவாசை-பவுர்ணமி ._ _



அமாவாசை .

வெண்ணிலவை விரல்காட்டி
அன்னையவள் சோறு ஊட்ட
பார்க்க வைத்து உண்டாதாலே
பால்நிலவும் பொலிவிழந்து .


பவுர்ணமி .

பொலிவிழந்த வெண்ணிலவும்
பொறுக்கித்தின்றப் பருக்கையினால்
வலுவடைந்து வந்துவிட்டான்
வானத்திலே பவுர்ணமி .

தாவணி


கிராமத்துக் கிளிகளின்
பருவத்தை பறைசாற்றும்
பண்பாட்டுப் பட்டயம் .

தாவும் வணிதைகளால்
மேவிடும் பொழுதெல்லாம்
லாவணி படித்திடும்
தாவணிக் கவிதைகள் .


தேவதைகளின் தேசத்தில்
தேர்தல்கள் நடப்பதில்லை
அணிந்தவர் அனைவரும்
அலங்கரிக்கப்பட்டவர்கள் .

வட்டுச் சோறு

அமிர்தத்தை கடைந்ததாய்
அமுதூட்டிச் சொன்னாயே
கடைந்த அமிர்தமெது
கண்டுகொண்டேன் இப்பொழுது
கைகுழைத்து வழித்தாயே
கடைசியாக அமிர்தத்தை .

திங்கள், 29 ஜூன், 2009

அணு



அணு ஒப்பந்தம்
அமெரிக்க நிர்பந்தம்
ஆராய வேண்டிய சம்பந்தம்
செர்பியாவின் உலைக்கழிவு
நாகசாகியில் உயிர்க்கழிவு
போபாலிலும் நடந்த நிகழ்வு
போதுமடா நம்மஇழவு
உலகம் உயர்வுர
ஓட்ட வேண்டும் உழவு
உண்மையான வளர்ச்சிக்கு
செய்ய வேண்டிய செலவு
அழிவைத்தருவது அணு உலை
பொழிவைத்தருவது அன்புஉலை
கொதிக்கவில்லை அரிசி உலை
சகிக்க வில்லை பொருளாதாரநிலை
நிர்மூலமா மக்களின் நிலை
ஓட்டவேண்டியது உழவு
அணுவுக்கா இவ்வளவு செலவு
அழுகிறது நிலவு கீலியத்தின் விளைவு
அணு என்பது ஆக்கசக்தியா
அண்டத்தை அழித்திட புதிய யுக்தியா
அவனின்றி அணுவும் அசையா
அணு என்பது அகிலத்தின் பசியா
வருகின்ற தலைமுறைக்கு மின்சாரக்குறையா
வரிசையாக சொல்கிறார்கள் காரணம் நிறையா
வளங்கள் இருக்கிறது பூமியில் நிறைய
வளர்ச்சிக்குப் பயன் படுத்துவோம்
புரிந்துணர்ந்து சரியா .

தேசிய நாள் .

தேசியநாள் தேசத்தில் உரிமைகள் பேசியநாள்
தேசத்தில் சுதந்திரத் தென்றல் வீசியநாள்
சுதந்திரம் என்பது பரிணாம வளர்ச்சி
சூரியக்குடும்பமும் அதற்கோர் சாட்சி
கோள்கள் பிரிந்து ஐந்நூறு பில்லியன் ஆண்டுகளாயின
கோள ஆய்வுகள் புள்ளிவிபரங்கள் சொல்லின
மானிடம் தழைத்திட யுகங்கள் பலநூறு கடந்தன
மானமது பிறந்திட மறைகளும் தோன்றின
ஆணவப் பேய்களும் அரியணை ஏறின
அகந்தையின் தலைமையில் அரசாங்கம் அமைத்தன
அடிமை சாசனத்தை ஆயுள்வரை வளர்த்தன
அடங்கி பணிசெய்ய ஆணைகளும் பிறந்தன
ஒடுங்கிய கூட்டமெல்லாம் ஓர்நாள் கிளர்ந்தன
நடுங்கிய நாட்களெல்லாம் விடைசொல்லி நகர்ந்தன
சிந்தியக் குருதியில் தேசங்கள் நனைந்தன
முந்திய தலைமுறைகள் முகவரிகள் தந்தன
சுதந்திரத் தென்றல் சுகந்தமாக வீசின
சுற்றிவரும் பூமிகூட சொந்தக் கதை பேசின
சுயநலம் அற்றவர்கள் தலைவர்கள் ஆகினர்
பயநலம் அற்றவர்கள் தியாகிகள் ஆகினர்
சுதந்திரம் என்பது பரிணாம வளர்ச்சி
பரிணாமம் என்பது படிப்படி முயற்சி
பரந்தாமனும் எடுத்த அவதாரப் புரட்சி
பாமரனின் வாழ்விலும் பாசமுள்ள உணர்ச்சி
தேசியநாள் என்பது தேசத்தின் மகிழ்ச்சி
பேசியநாள் எல்லாம் தேகத்தில் கிளர்ச்சி
போற்றிக் காக்கவேண்டிய பொன்னான வளர்ச்சி .

நினைவான கனவு.

நிலவைத் தொட்டுவிட நீண்டநாள் கனவு
நீலவானம் காட்டிட அன்னை ஊட்டிய உணவு
ஆகாய வீதியிலே தமிழனின் பயணம்
அறிவியல் பாதையை அடைவதா கடினம்
அழைப்பிற்கு ஓடிவரும் அழகான நிலவு
அம்புலியில் ஓட்டவேண்டும் அழகுதமிழ் உழவு
கதையிலும் கற்பனையிலும் ஆடிவந்த நிலா
கார் இருளில் காட்சிஎன்றால் வானமெங்கும் விழா
வடைசுடும் பாட்டிகதை வலம்வந்த காலம் நீங்கி
கடைபோடும் பாட்டிகளும் கவின் நிலவில் தினமும்தங்கி
வருங்காலம் வர்ணனைக்கும் வளமைக்கும் பஞ்சமில்லை
வஞ்சிகளை நிலவென்றால் மாமனுக்கு மஞ்சமில்லை
கவிகளினால் பாடப்பெற்ற கன்னித்தமிழ் நிலா
கலம் ஏறிச்சென்றுவிட்டான் நம்தமிழன் உலா
எட்டாத காலங்களில் ஏடுகளில் எழுதிவைத்தோம்
எட்டிவிட்டோம் எட்டையபுரத்து கனவு தீர்த்தோம்
தேசியக் கொடியையும் தேன்நிலவில் பதித்து விட்டோம்
தேசத்தின் பெருமையை உலகுக்கு உணர்த்தி விட்டோம்
ஆகாய வீதியிலே தமிழனின் பயணம்
அறிவியல் பாதையை அடைவதா கடினம்
நிலவத் தொட்டுவிட நீண்டநாள் கனவு
நிறைவேறிவிட்டது நினைவான கனவு .

கை

திறந்து இருப்பதில்லை பிறந்த குறுங்கை
இறந்து கிடக்கையில் இறுதியில் வெறுங்கை
கடந்து நடக்கையில் தாழ்ந்த நம்கை
கரந்து கொடுக்கையில் சிவந்த நன்கை
நிமிர்ந்து நடக்கிறது உயர்ந்த சிங்கை
உதிர்ந்த வியர்வை உணர்த்திடும் பங்கை
அதிர்ந்து கிடக்கிறது அமெரிக்க மாளிகை
அதிசயம் நடந்தது ஒபாமா வருகை
பிளந்து வெடிக்கிறது எம்மினத்து வாழ்க்கை
எழுந்து நடக்க வேண்டும் நன்மினத்து இலங்கை
சுரந்து எழவேண்டும் செந்தமிழர் வேட்கை
பரந்து ஆளவேண்டும் நம்தமிழர் உலகை .

ஞாயிறு, 28 ஜூன், 2009

நந்தவன நாட்கள் .

எதிபார்ப்பு இல்லாத இளமையின்காலம்
புவியீர்ப்பு அறியாத புலமையின்கோலம்
அன்னையும் தந்தையும் அறிந்திட்ட முதல் உலகம்
என்னையும் கேள்விகேட்டு என் தங்கை வந்தநேரம்
திண்ணையும் கதைசொல்லும் திருவிழா தோறும்
புன்னையும் புங்கையும் தூளிகட்டி ஆடும்
மண்ணையும் என்னையும் பிரித்ததில்லை யாரும்
தங்கையின் தலைவாரி மஞ்சள் முகம் மலர்சூடி
பள்ளி செல்வோம் நடையோடி பாசத்தோடு விளையாடி
மாட்டு வண்டி பின்னாலும் மணிக்குறவர் பின்னாலும்
பார்த்த கதை பல உண்டு பார்வையிலே பதிந்ததுண்டு
கொன்னை மரஇலைஎடுத்து குருவிப்பழ விதை எடுத்து
சேர்த்து வைத்து மென்றிடுவோம் சிவந்தா வெற்றிலை என்றிடுவோம்
ஈச்சம்பழம் இலந்தைப்பழம் சூராம்பழம் நாவல்பழம்
தேடிச் சென்று பறித்திடுவோம் தேனீயைப்போல் திறிந்திடுவோம்
காலையிலே கண் விழித்தால் கருப்பட்டி நீர்இருக்கும்
பால் என்று கேட்டிருந்தால் வானமது வெளுத்திருக்கும்
தட்டிலே சோறிட்டால் ஒட்டாமல் கையிருக்கும்
அனையவள் சோறூட்ட ஆ என்று வாய்திறக்கும்
எத்தனையோ உணவுகளை இதுவரை நான் உண்டதுண்டு
அன்னையவள் கைவன்னம் இன்றுவரை கண்டதில்லை
உண்ட மண்ணில் உலகம் உருட்டி
அண்டங்கள் யாவும் கண்ணில் காட்டிட
வாயடைத்துப் போனால் கோகுலத்து யசோதை
உருட்டிய சோற்றில் உலகம் காட்டி
உண்மையும் அன்பும் சேர்ந்திட உருட்டி
உண்பதற்குக் கொடுப்பாள் என் அன்னை தேவதை
செவ்வாயும் வெள்ளியும் வீட்டின் தரை நனைக்கும்
கோமாதா பசுஞ்சாணம் கோரைப்பாயை விரிக்கும்
அன்னையவள் கைவண்ணத்தில் அழகு தரை சிரிக்கும்
ஆகாயம் இறங்கி வந்து அயர்ந்து தூங்கநினைக்கும்
மாலையிலே கருவானில் வெள்ளிகளும் முளைக்கும்
வாசலிலே பாய்விரிக்க பல கதைகள் பிறக்கும்
அம்புலியும் கதைகேட்டு முகில்செவியைத் திறக்கும்
செம்புளியும் காற்றில் ஆட நல்லிசையும் பிறக்கும்
இன்று வரை கிட்டவில்லை அந்த இனிமையான உறக்கம்
வென்று புகழ் எட்டினாலும் மறந்திடாத கிறக்கம்
ஆத்தங்கரை குளத்தங்கரை அழகான கண்மாய்கரை
புல்தரையில் பூத்தகறை வெண்பனியால் வெளுத்ததரை
வேடுவன் போல்நின்ற நாரை வேய்இலையால் வேய்ந்த கூரை
காடுகரை காய்ந்தபாறை எழுதி வைத்தோம் எங்கள் பெயரை
கற்றாழைப் பழம் பறித்து கட்டாந்தரையில் தேய்த்து
தொண்டைமுள் பிரித்தெடுத்து பங்குவைப்போம் பதம்பிரித்து
அய்யனார் கோவில்மணி ஆறுமணிக்கு ஒலித்திடும்
தொன்னையிலே தரும் பொங்கலை நினைக்கையிலே இனித்திடும்
குதிரையிலே அய்யனாறு பார்ப்பதற்குச் சிலிர்த்திடும்
வானம் அதிரையிலே கையிலுள்ள கருப்பருவா பளிச்சிடும்
மாம்பலம் திருடச்சென்று முள்வேலி குடைந்ததுண்டு
தோள்பலம் துணையாக தோழிகளும் வந்ததுண்டு
தோழனோடு தமக்கையும் கூட்டிச்சென்று பறித்ததுண்டு
பாதியிலே காவல்காரன் கட்டிவைத்து புடைத்ததுண்டு
இளமையிலும் என்மனதில் ஈரம்வந்து கசிந்ததுண்டு
கோலமயில் தோழியவள் நினைவுகளால் நனைந்ததுண்டு
பசுமையான களங்கமில்லா இளவயது நேசம்
பார்க்கவில்லை இதுவரையில் பால்மனது பாசம்
சொந்தவன சோகத்தில் பாதையெல்லாம் முட்கள்
வெந்து வனம் போனாலும் நரைப்பதில்லை
என் நந்தவனநாட்கள்.

திங்கள், 22 ஜூன், 2009

தீபாவ(லி )ளி

இனிக்க வில்லை இன்பத் தீபாவளி
இந்திய இதயங்களில் இவ்வருடம் தீராதவலி
இமயத்தின் எல்லைகளில் ஏனோ இத்தனை உயிர்பலி
உயிர்களை இழந்தவரும் உடைமைகளைத் தொலைத்தவரும்
உறுப்புகள் அறுந்தவரும் உயிருடன் புதைந்தவரும்
நிலமகள் நடுக்கத்தால் நித்திரையில் கூட மரண ஒலி
பாக் எல்லைகளும் பயங்கரவாதப் பள்ளிகளும்
பாவமறியாத பச்சிளங்கிள்ளைகளும்
பகுத்துண்ட பகுதியிலே காலன் தொகுத்துண்டு போனதுவோ
இத்தனை இன்னல்களிலும் இருகரம் நீட்டிய
இந்திய நெஞ்சங்களை இடைநிறுத்தி
இறுமாப்பு காட்டியது பயங்கரவாதத்தை மட்டுமே
பாடமாகக் கொண்ட பாகித்தானியக் களை
குலுங்கி நிறுத்திய குங்கும நெற்றியில்
கூட்டம் நிறைந்திட்ட தலைநகர் டெல்லியில்
குண்டுகள் வெடித்ததால் குழப்பங்கள் நிறைந்ததால்
சாய்ந்தன சில உயிர்கள்குருதிச் சகதியில்
இயற்கைச் சக்கரம் இயல்பென சுழன்றிட
வாழ்கைச் சக்கரம் ஓர்நாள் கழன்றிடும்
பிரிவினை வாதத்தைப் பிற்போக்கில் தள்ளிவிடு
அன்பாக வாழ்ந்திடுவோம் இனியாவது தோள்கோடு
இனி நேரவேண்டாம் இதுபோன்றதொரு ப(லி)ழி
அப்போது ஏற்றிடுவோம் தீபமெனும் திவ்ய ஓளி.

வெள்ளி, 19 ஜூன், 2009

இனிவரும் நூற்றாண்டே..

இனிவரும் நூற்றாண்டே
இளைஞர்களின் புத்தாண்டே


கணிப்பொறிகள் கவிபாடும்
கற்பணைகள் வழிந்தோடும்

விண்ணிலே உலா வருவோம்
வியத்தகு சாதனைகள் செய்வோம்

சுற்றும் பூமியை
சுழன்றிட வைப்போம்

சூரியப் பாதையின்
சூட்சுமம் அறிவோம்

மருந்தில்லா நோய்களை
விருந்துண்ணச் செய்வோம்

எயிட்சு என்னும் நோயை
எமனிடம் அனுப்புவோம்

மரணத்தின் வாசலை
மன்றாடி அமைப்போம்

மகத்துவம் நிறைந்திட்ட
மனிதராய் இருப்போம்

வீசும் தென்றலை
வீட்டினில் அடைப்போம்

வீதிகள் தோறும்
சோலைகள் அமைப்போம்

எந்திர வாழ்விலும்
கவிபல படைப்போம்

ஏற்றம் பெற எந்நாளும்
தமிழ் வழி நடப்போம்

பூமியைப் புரட்டி
புத்தகம் வரைவோம்

புதியதோர் உலகம்
பூத்திடச் செய்வோம்

புரட்சிகள் பல
புதுமையுடன் செய்வோம் .

தீ






தீயே உனக்குத் தீராத பசியா
மயானத்தில் நீ அறியாத மானிட ருசியா
வாழ்ந்தவர் வரவில்லை என்று
வந்தாயோ வாழைக் குருத்தழிக்க
ஏழைகளின் அடுப்பில் நீ எரியவில்லை
அநீதி செய்பவரை நீ அழிக்கவில்லை
அனாகரிகமற்ற அரசியல் கூடங்களை அணுகவில்லை
ஏடெடுத்துச் சென்ற கிள்ளைகளை எரியூட்டிவிட்டாய்
உன் செந்நிற நாக்குகளால் பிள்ளைக் கறிச் சுவைபார்த்தாய்
இனி வரும் காலம் இதுபோல் நிகழவேண்டாம்
இறைவா இதற்கு நீ தான் அருளவேண்டும் .

வியாழன், 18 ஜூன், 2009

ஆர்

அலைகடல் தாலாட்டும் புதுவையிலே
ஆர்என்ற தேன்கூட்டில் அருந்தமிழே
அழகாக ஓன்றிணைந்து செந்தமிழை
ஆராய்ந்து தருகிறார்கள் நம்தமிழை
ஆண்டொருமுறை சங்கமிக்கும் அருட்ச்சோலை
வண்டுகளாகி உண்டுகளிக்கும் தமிழ்ப்பாலை
பாவேந்தர் பா வடித்த பூமியிலே
பாரதியும் நடைபயின்ற பாண்டியிலே
பார் போற்ற பைந்தமிழன் தேரினிலே
ஆர் ஆகிப்பாய்கிறது வேரினிலே
அறவாணர் தோற்றுவித்த ஆரினிலே
அறம்போல தழைக்கவேண்டும் பாரினிலே
ஆசிரியரும் மாணவரும் நேரினிலே
ஆய்ந்து வந்து தருவார்கள் ஆய்வினிலே
புடம் போட்டு வார்த்தெடுக்கும் பூந்தமிழை
வடம் பிடித்து இழுக்க வாரீர் புதுவையிலே
யார் யாரோ வந்தாரே மண்மேலே
பேர் வாங்கிச் சென்றாரோ விண்மேலே
அருகு போல் வேரோடிய நம்தமிழை
சிறகுகளைச் செப்பனிடும் ஆர்சாலை
ஆறு என்றால் சங்கமிக்கும் கடலினிலே
கடல் கூட பொங்கநினைக்கும் ஆரினிலே
ஆறில்லா ஊருக்கு அழகு பாழா
ஆய்வரிந்து காக்கட்டும் ஆர் அமைப்பு வாளா .

புதன், 17 ஜூன், 2009

கவிதை நதி

நதியைப் பற்றி எத்தனையோ கவிதை
கவிதையே நதியாகி நனைந்தது சிங்கை
மனித நதியாக மாறியிருந்தாலும்
புனித நதியாகி அல்லவா ஓடிக்கொண்டிருக்கிறது
எத்தனையோ ஓடங்கள் இந்த நதியைக் கடந்ததுண்டு
அத்தனை பாரங்களையும் அகம்மகிழ சுமந்துகொண்டு
இருப்பதை நனைத்து நதிபெரும் நடப்பு
இதயத்தை நனைப்பது இந்நதியின் சிறப்பு
மனைவியின் மடியில் கிடப்பவரும்
நினைவின் பிடியில் நடப்பவரும்
நிழல்மடி படித்தால் வரும் வியப்பு
நின் நிழல் மடி கண்டமுதல் உன்மேல் ஈர்ப்பு
விசையுறு பந்தினைப் போல் செல்லும் உளம்கேட்டார்
விடியலைப் போல்வந்த எந்தன் பாரதி
விசயங்கள் பலகொண்டு கவிதந்தார்
விரும்புகின்ற அண்ணன் விசயபாரதி
நிழல் மடியின் நித்திரையில் இருந்து
நீங்கள் அள்ளிவந்த ஆற்றுமணலை
காற்று வெளியில் தூவியதால் என்னவோ
ஊற்று வெளிகள் பலஇங்கே திறந்துகொண்டன
சோகங்களைச் சுமந்துதிரியும் இந்தக்குயில்
சோலைக்குச் சென்றது கவிச் சோலைக்குச் சென்றது
நதியின் நீர்பட்டுத்தானோ இந்தக்குயிலும் பூப்பெய்தது
நாளிதழில் நான் பார்த்தது கவிதைநதியிடையில் பெயர்பூத்தது
நல்லதோர் வீணையாகி இசைய வந்தாய்
ந . வீ. விசயபாரதியாக நடை பயின்றாய்
ஆண் நதி என்றாலே அரிதானது ஆனால்
அண்ணன் நதியும் அல்லவா இங்கே அரங்கேறுது
பிரித்தால் பொருள் தராதது இரட்டைக்கிளவி
பிரித்தாலும் பொருள் தந்திடும் இரட்டைநதி
திரவிய தேசத்தின் பூட்டுகளை உன்
தீந்தமிழ்ச் சாவியால் திறந்து வைத்தாய்
தீக்கணலின் கீற்றையா திலகமாக
உன் நெற்றியில் இட்டாய்
நெருப்பைச் சூடிய கவிநதியே
நதியில் நெருப்பனையாதது புதுவிதியே
சிங்கையை அந்த ஆகாயநதி கூட
அவ்வளவு நனைத்திருக்காது
கவிதை நதியின் கால்பட்டதால் என்னவோ
சிங்கைகூட தமிழால் சிவந்திருக்கிறது
தமிழுக்கு விழா என்றால் தோரணம் கட்டுவார் சிலர்
தமிழையே தோரணம் கட்டித் தொங்கவிடுவார் இவர்
நதி என்றால் நடப்பதாகத் தானே சொல்வார்கள் ஆனால்
ஒலிவாங்கி முன்னே ஒருநதி ஊறிக்கொண்டிருப்பதாக
கருப்படிக் கவிஞனும் கவிதை சொன்னான்
உன் உதடுகளின் உச்சரிப்பினால் ஒலிவாங்கிக்கும்
உள் காய்ச்சல் வந்ததை நீ அறிவாயா
ஓய்வாக இருக்கும் போது உலாவரும் காற்றிடம் கேள்
ஒத்தடம் கொடுத்துவிட்டு வந்து
ஒலிவாங்கியின் கதை சொல்லும்
தமிழ்க் காய்ச்சல் வந்து தமிழ்பேசியதைச் சொல்லும்
சிங்கையிலே இந்த நதி சீராகப் பாயட்டும்
கங்கையிலே பொங்குவதுபோல் கவிச் சங்கை ஊதட்டும்
சிற்றாருகளை அணைத்துக்கொண்டு
சி(ங்)ந்தை நதி நடக்கட்டும்
வற்றாத நதியாகி வளம்பெற்று
தமிழ் கடலில் கலக்கட்டும் .

ஞாயிறு, 14 ஜூன், 2009

இ(ரை)றைவன்.

எழுத்தறிவித்தவன் இறைவன்
எழுத்தை அறிந்துவித்தவன் இரைவன்.

வெள்ளி, 12 ஜூன், 2009

புலி வருது

வாயிலிலே மணிகட்டி வழக்குரைக்க வந்தவரை
நோயிலே போகுமுன் நேர்த்தியுடன் தீர்ப்புரைத்து


கன்றிழந்த பசுவிற்கும் கண்ணீரைத் துடைத்திடவே
கொன்றொழித்தார் தன்மகனை கோமகனார் மனுநீதி


எங்கொளிந்து போனதைய்யா எங்குலத்துப் பெருமையெல்லாம்
பொங்குதமிழ் மறவனுமே போர்முறையை மீறவில்லை


வெந்தழிந்த மக்களெல்லாம் வேதனையில் காத்திருந்தோம்
பந்தமென தமிழ்நாட்டின் பாசக்கரம் நீளுமென்று


முதல்வரென ஆட்சிசெய்யும் முத்தமிழ் பண்டிதரும்
புதல்வர்களின் நலமன்றி புரிந்ததென்ன சொல்வீரே


கருணாநிதி பெயர்கொண்ட காரணத்தைப் புரிந்துகொண்டோம்
கருணை நீதி எதிர்பார்த்து களப்பலியும் நிறையக்கண்டோம்


நீதிமன்ற வளாகத்தில் சாதிச்சண்டை மூண்டதுபோல்
நாதியற்று வழக்குரைஞர் வன்முறையில் போராட்டம்

காவல்துறை கடுமைகாட்ட கைகலப்பில் முடிந்ததன்றோ
ஏவல் செய்யும் உங்களுக்கே ஏதுமில்லை பாதுகாப்பு


உள்ளிருக்கும் நீதித்தாயும் உண்மையிலே அழுதிருப்பாள்
வெள்ளையுடை நனைந்திடவே வேதனையில் துடித்திருப்பாள்


கறுப்புத்துணி அவிழ்த்தஅவள் கணப்பொழுதில் நினைத்திருப்பாள்
பொருப்பறிந்து தென்இலங்கை பொடிநடையாய் போயிருப்பாள்


கண்டபல காட்சியினால் கதறியவள் அழுதிருப்பாள்
பிண்டமாகச் சிதறியவள் பிறப்பை எண்ணி தொழுதிருப்பாள்


புதுமை பெற்று நீதித்தாயும் புதுஉடையில் வந்திடுவாள்
பதுமையாக நின்றஅவள் பலிவாங்கிச் சென்றிடுவாள்

காத்திருப்போம் காலம்வரும் கரைந்தோடும் கருப்புவெள்ளை
பூத்திருப்போம் புன்னகையுடன் புறப்படுவார் வேலுபிள்ளை ..

அக(தீ)தி

உள்ளத்தில் நெருப்பைச் சுமந்து
இல்லத்து உடமைகளை இழந்து
எல்லைகள் எதுவென்ற ஏக்கத்தில்
தொல்லைகள் தொடர்ந்திடும் இவர்களுக்கு
உலகே நீ வைத்தபெயர் அகதி



யுகங்கள் பலநூறாய் பூமியிலே
சுகங்கள் தடைபட வாழ்ந்திருந்தோம்
முகங்களாய் முத்தமிழ் முடிசூடி
அகங்களில் தீ எரியும் எங்களுக்கு
உலகே நீ வைத்த பெயர் அகதி



பண்பாடு கலாச்சாரம் பறைசாற்றி
எண்போடு நரம்பாய் உரமேற்றி
மண்பெருமை காத்திட்ட மறவர்குலம்
மாண்புகள் அழிந்திட துணைபுரிந்து
உலகே நீ வைத்த பெயர் அகதி



அழித்திட எண்ணியா எங்களுக்கு
ஒலித்திட வைத்தீர் பெயர் மட்டும்
ஒழித்திட ஒன்றாய் இணைந்தாலும்
பலித்திடும் ஓர்நாள் தமிழ் ஈழம்


புறங்களில் தீவைத்தால் அணைந்துவிடும்
அகங்களில் வைத்த தீ கொழுந்துவிடும்
அணையாமல் எரிந்திடும் இந்தத் தீ
அடையும் வரை எரிந்திடும் அக(தீ )தி.

வியாழன், 11 ஜூன், 2009

கற்பு

கற்பு என்பது கால்களுக்கு இடையிலா
கண்ணகி எரித்த கந்தக முலையிலா
கலாச்சாரம் கற்பித்த கண்ணிய நடையிலா
காலச்சாரம் நூற்பித்த புண்ணிய உடையிலா
அனைவருக்கும் அமுதளிக்கும் பண்பாட்டுப் படையலா
ஆன்றோரும் சான்றோரும் அறிந்து சொன்ன வழியிலா
ஆணுக்கும் பெண்ணுக்கும் சரிவிகித சமையலா
ஆளுமைக்கு நான்என்ற அகந்தையின் மொழியிலா
அரிதாரம் பூசிவந்த அர்தமற்ற விடியலா
பரிகாரம் செய்து விட்டால் கிடைத்துவிடும் புதையலா
கற்பு என்பது வாழ்வியல் நெறி
காலங்கள் போற்றும் கனல் போன்றவரி
குறி தவறினால் இலக்கு அதுகடந்துவிடும்
நெறி தவறினால் இழுக்கு உன்னை அடைந்துவிடும் .

ஞாயிறு, 7 ஜூன், 2009

தமிழ்வேள் கோ .சாரங்கபாணி

பாடுபட்ட பைந்தமிழர் ஏடுபோற்ற வைத்தவர்
நாடுவிட்டு உழைக்கவந்து நம்தமிழைக் காத்தவர்

சிங்கை எங்கும் தமிழ்முழக்கம் முரசறிவித்தவர்
கங்கை பொங்கும் கணித்தமிழை சிரசில் ஏற்றிவித்தவர்

வீதிஎங்கும் தமிழ் முழக்கம் வேண்டுமென்று சொன்னவர்
சாதிமங்க தமிழ்செழிக்க தன்னைநீராய் விட்டவர்


அடிமையென்று வாழாதிருக்க அரும்பாடுபட்டவர்
குடியுரிமை வாங்கச்சொல்லி குலம்தழைக்க வைத்தவர்


முகில்கருத்த தலைமுடியை பிடரிவரைக் கொண்டவர்
அகில்மணக்கும் அழகுமுகம் சுடரொளியைப் போன்றவர்


தேரோடும் திருவாரூர் திருமகனாய் வளர்ந்தவர்
போராடும் குணத்தாலே தமிழ்தேரை இழுத்தவர்


யாரோடும் பகைமை இல்லை நட்பாகப் பழுத்தவர்
வேரோடும் நான்கினத்தில் உப்பாக நிலைத்தவர்



சிந்தனையால் செழுந்தமிழை வேர்பிடிக்கச் செய்தவர்
கந்தனைப்போல் தமிழ்வேளாய் பேர்கொடுத்துச் சென்றவர்



நான்முகத்தான் நாவினிலே வீற்றிருப்பாள் வாணி
நான்கினத்தின் நடுவினிலே சோதியானார் சாரங்கபாணி .

அழகின் சிரிப்பு

ஆகாயப் பந்தலிலே ஆதவனின் பொன்சிரிப்பு
அழகுநிலா பவனிவர வெள்ளிகளின் மின்மினுப்பு

கார்முகில்கள் தீண்டலினால் மின்னலென கண்திறப்பு
பார்மகளின் மேனியிலே பசுமையான புல்விரிப்பு

மழைத்துளிகள் மண்ணில்வீழ நிலமகளின் சூல்நிரைப்பு
தழைத்திடும் தளிராலே தரணியெங்கும் புதுவனப்பு

புலர்ந்துவரும் காலையிலே புல்நுனியில் பனிச்சிரிப்பு
மலர்ந்துவரும் மலர்களில் வண்டுகளின் தேனெடுப்பு

கழனியிலே குலவையிட்டு நாற்றுநாடும் பயிர்விளைப்பு
உளந்தனிலே உண்மையிலே இதைக்கண்டா நம்சிரிப்பு


நெகிழிகளின் வழிவந்த பூக்கள்இன்று கடைவிரிப்பு
நெகிழ்கிறது நெஞ்சமெல்லாம் இயற்க்கையது திரைமறைப்பு


காவிஉடை கொண்டவருக்கும் காசுஎன்றால் கனிச்சிரிப்பு
ஆவிவிட்டு போனபின்பு அடங்கிவிடும் அதன்சிரிப்பு


காகிதப் பணங்களில் காந்திகொண்ட கவின்சிரிப்பு
காண்கின்ற மனங்களில் சாந்திபூண்ட அழகின்சிரிப்பு .

திங்கள், 1 ஜூன், 2009

நிழல் தேடி


ஆய்வுகள் நடத்திடும் ஆகாயச்சூரியன்
ஓய்வின்றி உழைத்தானாம்


உழைத்துக் களைத்தவன் ஓய்வினைவிரும்பி
திளைக்க வந்தானாம்


கானகம் மலைகள் கார்முகில் கடந்து
கானங்கள் கேட்டானாம்


வாழ்விங்கு சுவையென வாழநினைத்தவன்
வானகம் மறந்தானாம்

வனங்களின் செழிப்பின் வல்லமைகண்டு
மனமது நிறைந்தானாம்


பயணக் களைப்பில் பாதங்கள்நோக
அயர்ந்து போனானாம்


கனமழை பெய்திட கார்முகில் கரைந்திட
கனவொன்று கண்டானாம்


தாகம் எடுத்திட தண்ணீர் குடித்திட
தேகம் நனைத்தானாம்


வீழ்ந்த மழையில் விண்ணவன் நனைய
ஆழ்ந்து போனானாம்


கடமையைச் செய்திடும் கதிரவன் கனவிலும்
மடமையை நினைப்பானா


நிழல் மடித்தேடி நித்திரை நாடி
தழல் ஒளி மறைப்பானா


வெம்மை தாளாமல் வெய்யோன் மறையும்
உண்மையை அறிவானா


கதிரவன் மறையும் கார்யிருல் நிழலை
புதிரவன் அவிழ்ப்பானா.

நிழல் தேடும் சூரியன்

தமிழ்ச் சூரியன் ஒன்று
தடம் மாறிப்போனது
நிழல் தேடிக் கைகளினால்
நிறம்மாறிப் போனது


நம்மொழியை அரியணையில்
செம்மொழியாய் பதித்தது
தமிழ் வானில் தனக்காக
தனி முத்திரை பொதித்தது


தன்கும்பம் தன்பிள்ளை
தமிழன் துயர்மறந்தது
தவிக்கின்ற எம்மினத்தை
தளிரோடு அழித்தது


அரசியல் புனிதத்தை
அழுக்காக்கிப் ப(பு)ழுத்தது
ஆதாயம் பலதேடி
அழகாக நடித்தது



சுற்றிவரும் சூரியனும்
சுயநலத்தைப் பார்த்தது
வெட்கப்பட்டு வேதனையில்
வெந்தணலில் வெந்தது


மறைவதற்கு இடம்தேடி
மண்ணுலகம் வந்தது
நிலமெல்லாம் உன்நிழலாம்
நிர்வாணமாய் அலைந்தது


நிழல் தேடிவந்த சூரியன்
நீலவானம் பார்த்தது
விண்ணுலகச் சூரியனுக்கு
தன்னிலைமை உரைத்தது


மண்ணில் வாழும் சூரியனுக்கு
கை நிழல்தான் கிடைத்தது
நம்பிக்கைச் சூரியனும்
நம்பி(க்)கை பிடித்தது


கை நிழல் சூரியனே
காலம் உன்னைப் பழித்தது
சூரியன்கள் நிழல் தேட
சுயத்தன்மை இழந்தது

ஞாயிறு, 31 மே, 2009

வானம் வசப்படும்

எல்லையில்லா வானத்தில்
எழில்கோளம் நிறைந்திடவே
பிள்ளைநிலா துணைகொண்டு
பூகோளம் சுழன்றிடவே

செம்பரிதி ஒளியாலே
செம்மையான பூவுலகில்
செங்குருதி தான்வழிய
செழித்து வந்த மண்ணுலகில்


மனிதரெல்லாம் தழைத்து வந்தார்
மாண்புறவே நிலைத்து வென்றார்
புனிதரெல்லாம் பூத்துவர
பூவுலகில் புதுமை கண்டார்


கொடுமை கொண்டு
கோலாட்சி செய்துவந்த மன்னவரும்
கடுமைகண்டு கணப்பொழுதில்
மடிந்துவிட்டார் அன்னவரும்


அடிமையென தமிழினத்தின்
அடிவேரை அறுப்பவரும்
ஆரியனின் வழிவந்த
அரக்கன் என்று அறிவானா


கந்தக தனங்களின்
கற்பென்ற வெம்மையினால்
வெந்தன்று தணிந்ததே
மாமதுரை அழிந்ததே


எத்தனை கண்ணகிகளின்
எழில் இன்று வீழ்ந்தது
எரியவில்லை தென்தீவு
நீதி எங்கே ஒளிந்தது


பூமியே உனக்கு
பிளவுஒன்று வாராதா
பூபாலம் கேட்க வேண்டாம்
புதைந்துவிடு வானத்தில்


வனம் கூட வசப்பட
வாய்க்கவில்லை எங்களுக்கு
வானம் வசப்படும்
வார்த்தை மட்டும் இனிக்கிறது.

இமயம் பெரிதோ ?

தன்னம்பிக்கை விதைகளை
தனக்குள்ளே விதைத்தால்
முன்நம்பிக்கைகள் முகிழ்த்துவந்த
முன் கதைகளைப் பின்தள்ளி
விண்ணோக்கி நடைபோடும்
வீரமது விளைந்திட
மண்ணிலே நிலைபெற்ற
இமயம் பெரிதோ


ஊனமதைக் குறையென்று
ஊளையிடும் மாந்தருக்கு
வானம் வசப்படும்
வழிகள் பலஉண்டென்று
ஊமையான இசைக்கலைஞன்
உலகம் வென்ற பீத்தோவன்
உரைத்ததென்ன இமயம் பெரிதோ


உள்ளமதை உருக்குலைக்கும்
ஊனமதை உடுத்திவிட்டால்
உதயமதை என்னவென்று
உணர்வாயா உள்மனமே
வெள்ளமென கரைபுரளும்
உள்மனதை நெறிப்படுத்த
குள்ளமென உருவெடுத்த
இமயம் பெரிதோ

தமிழர் புத்தாண்டு

தமிழருக்குத் திருநாளாம் தரணியிலே ஒருநாளம்
உழவரெல்லாம் உளமார உவகையுற வரும்நாளாம்
உலகுக்கு உணவளித்த உத்தமர்கள் ஒன்றுசேர
பொங்கிவரும் கங்கைபோல் பொன்மனமும் குளிர்ந்துவர
பொங்கலெனும் திருநாளை போற்றிவைத்தார் பூவுலகில்
நிலமகளின் மேனியிலே வியர்வையோடு நீரிட்டு
குலமகளும் குலவைபாட விதைநெல்லைத் தூவிவிட்டு
மனம்மகிழ உழைத்திருப்பார் அறுவடைக்குக் காத்திருப்பார்
அறுவடையில் பூத்தநெல்லை ஆசையுடன் பொங்கவைப்பார்
ஆதவனின் முன்னிலையில் விளைந்ததெல்லாம் படையல்வைப்பார்
ஆநிரையும் வாய்நிறைய அமுதுபொங்கல் விருந்தளிப்பார்
உலகுக்கு உணவளிக்கும் உழவர்கள் மனம்நின்று
உதித்து வந்த தைதானே உழவருக்குப் புத்தாண்டு
உழவருக்குப் பின்னாலே உலகெல்லாம் செல்லுமென்றால்
தமிழருக்குத் தைதானே தரணியிலே புத்தாண்டு
மாதங்கள் பன்னிரெண்டு வகுத்து வைத்தார் முன்னின்று
சோகங்கள் கண்ணிரண்டு கலைந்தோடும் தை அன்று
நிலமகளை வணங்குகின்ற புவிபோற்றும் புத்தாண்டு
உளமாற ஏற்றிடுவோம் உழவர்தம் வழி நின்று

மனமெங்கும் மண்வாசம்

ஆடம்பரம் அலங்காரம் அனுதினமும் உல்லாசம்
மாடங்கள் மணிமகுடம் மண்மீது தினம்வேசம்

வானவரும் வந்தாலும் வதைக்கப்படும் வன்மோசம்
ஆனவரும் போனவரும் அடைவாரோ விண்தேசம்


காலம்வரும் கனிந்துவரும் கலங்கவில்லை கடல்தேசம்
ஞாலம்வரும் வேழம்வரும் கலைந்தோடும் நரிவேசம்


இருப்பதை இயன்றதை ஈந்தாலே புவிபேசும்
மறுப்பதை வெறுக்கின்ற மனதாலே மனநேசம்


மலர்கின்ற மலர்களின் மகரந்தம் மணம்வீசும்
புலர்கின்ற புல்லின்மேல் புன்னகைக்கும் பனிபேசும்


இடிக்கின்ற இருள்மழையும் இறங்கிவந்தால் மண்வாசம்
வெடிக்கின்ற வெண்பரிதி வெண்ணிலவின் ஒளிநீசம்


அசைந்தாடும் அலைகாற்றால் ஆழ்கடலும் அலைபூசும்
இசைந்தாடும் இளமனதில் இயல்பான கலைநேசம்


மங்கையவள் மலர்மொழியால் மயிலிறகாய் மணம்கூசும்
தன்கையவள் தளிர்மேனி தவழ்கையிலே தனிப்பாசம்


பொல்லாத பொய்நெஞ்சால் புவியாவும் குலநாசம்
செல்லாகிச் செரித்தாலும் செழித்துவரும் தமிழ்தேசம்

வெள்ளி, 29 மே, 2009

தழைத்திடும் தமிழினம்!

அன்பைப் போதித்த கைகளிலே
ஆயுதம் கொடுத்த கயவர்களே
எண்பை உருக்கி மண்பதைக் காத்த
எழில்குலம் அழிக்கும் நரகர்களே
முன்பே உதித்த முக்கனித் தமிழர்
முகவரி என்பதை அறிவீரோ
முடைகளின் வழிவந்த மூர்க்கன்
மகிந்தா(ஷா)சுரன் நம்படை
அழிக்க நாள்குறித்தான்
கடைவழி போகும்முன் உன்கணக்கினை
முடிப்பான் களத்தமிழ் மறவன் அறிவாயா
உன்படைகுடி வாழ்ந்திட
எம்மினம் அழிவதா எங்ஙனம் சொல்வாய் அடிமடையா
ஆரியன் வழிவந்து அரக்கனின் குடிசேர்ந்த
நரபலி நடத்தும் கலிநரனே
உன் கதையினை முடிக்க புலிவடிவெடுக்க
பிறந்திட்ட மறவன் தமிழ்ச்சிவனே
வெடிபடை கொண்டு வான்படை
நடத்தி வெந்தணல் அள்ளிவீசுகின்றாய்
பொடிபொடியாய் ஆனாலும் புத்துயிர்பெற்று
எழுந்து நடந்திடும் எம்மினமே
உன் அடிமடி கலங்கிட ஆணவம்அழிந்திட
அரும்பித் தழைத்திடும் என்தமிழினமே.

புதன், 27 மே, 2009

சிறைப்பறவை

உடல் கூட்டில் தங்கிச் செல்லும் உயிர்ப்பறவை
உடல்விட்டு பறக்கையில் நினைக்குமா தன்உறவை
தான்கட்டா கூட்டிலே தவமிருக்கும்
தனக்காக மட்டுமே சிறகுவிரிக்கும்
கூட்டோடு சேர்ந்துமே குணம்வளரும்
கூடுகையில் ஆர்ந்துமே தினம்புலரும்
ஆண்பறவை ஆனாலும் முட்டையிடும்
அடைகாத்து எண்ணங்களை எட்டிவிடும்
தான் இருக்கும் வரையில்தான் கூடுஇருக்கும்
வான் பறக்க நினைக்கையிலே கூடு இறக்கும்
பார்வைக்குத் தெரியாமல் பறந்துதிரியும்
பார்த்தவர் யார் என்றால் எண்ணம்விரியும்
ஆம்பலின் இலைநீர்போல ஒன்றிவாழும்
சாம்பலாகிப் போனாலே அன்றிவீழும்
உடல் கூட்டில் தங்கிச்செல்லும் அறைப்பறவை
உடல் விட்டுநீந்திச் செல்லும் சிறைப்பறவை

மலர்கள் பேசினால்

மலர்கள் இங்கே பேசுகின்றன
மனிதர்களைப் பார்த்து ஏசுகின்றன
காதலியை மயக்க கனகாம்பரம் மல்லி
கடவுளை வணங்க கதம்பம் அல்லி
இறந்தவர்களைப் புதைக்க நாங்கள்
இங்கே இறக்கின்றோம்
சுதந்திரம் என்றுபேசும் சுயநலவாதியே
எங்கள் சுதந்திரம் எங்கே

இளைய பாரதம்.

எங்கு செல்கிறாய் என் இளையபாரதமே
நம் தேசத்தின் புகழ்மறந்தாய் விழிமனமே


அடிமைத் தளையை அறுத்தெடுக்க
ஆயிரம் தலைவர்கள் உயிரீந்தார்
விடுதலை வேள்வியின் விளக்கெரிக்க
வீடு மனையாள் நலம்மறந்தார்


கொடியின் மரபை காப்பதற்கே
கொட்டியக் குருதியில் தினம்நனைந்தார்
உறவுக் கொடியின் வேரறுக்கவா
உன்னைச் சுமந்து பெற்றெடுத்தார்


தேசத்தின் பெருமையை நினைப்பாயா
மோசத்தில் வீழ்ந்து கிடப்பாயா
கல்விச் சாலையிலே கலவரம் புரிந்தாய்
கலங்கி இருப்பாளே கருசுமந்த உன்தாய்


நாளைய பாரதத்தின் முதுகெலும்பே அறிவாயா
நாமிருக்கும் இடமெல்லாம் நற்பெயரை பெறுவாயா
விண்ணிலும் நம்கொடி பட்டொளி வீசுதே
மண்ணிலே அடிதடி விட்டொழி நல்லது


காந்தியப் பாதையின் சாந்தியத்தை அறிந்திடு
ஏந்திய ஆயுதத்தை அடுப்பெரிக்க தந்துவிடு
சுயநலத் தேரின் வடம்பிடிக்க மறுத்துவிடு
சுட்டெரிக்கும் சூரியனாய் தேசஇருள் நீக்கிவிடு


கல்லூரிச் சாலையா கலவர பூமியா
காரணம் யார்சொல் சாதியா மதமா
சட்டங்கள் வகுத்தாரே சமூகத்தின் நீதியாய்
சண்டையிட்டு மடியாதீர் நீதியறியா பேதையாய்


மானிடம் என்பது மகத்தான பிறப்பு
மாணவன் என்பவன் தேசத்தின் உயிர்ப்பு
பாரத தேசத்தின் பண்பட்ட சிறப்பு
பார்போற்ற வேண்டுமே அதுதானே பொறுப்பு



கொற்றவன் குடை இங்கு தாழ்ந்தது
குலமக்கள் நலன்களும் அழிந்தது
சீழ்பிடித்த மனங்களினால் விளைந்தது
கோல் பிடிக்க வேண்டிய குணமது


எழுதுகோல் பிடிக்க வேண்டிய இனமுனது
விழுதுபோல் நிலைக்க வேண்டிய மனமது
யார் மீது கோபமடா சொல்வாயா
பார்மீது எம்மினமே வெல்வாயா


உரிமைக்காக உண்மையில் நீபோராடு
உன் உணர்வுகளை உண்மையின் உறையிலிடு
சகோதரப் பண்பை உன்மனதிலிடு
சண்டாள குணத்தை நீவென்றுவிடு


எங்கு செல்கிறாய் என் இளையபாரதமே
நம் தேசத்தின் புகழ் மறந்தாய் விழி மனமே


சட்டங்கள் படித்திடச் சென்ற நீ
மரச்சட்டங்களை அல்லவா ஏந்துகிறாய்
சாதியின் பெயரால் மோதுகின்றாய்
சகோதரனைக் கொல்லவா வாழ்கின்றாய்


இயற்கை கூடஇயங்கிடச் சட்டமுண்டு
இளமனமே அறிவாயா அதைக்கண்டு
வளமான வாழ்வுக்கு வகுக்கப்பட்டது சட்டம்
வழிதவறிப் போகிறாயே இதுவா உன்திட்டம்


நாளைய பாரதத்தின் நம்பிக்கை நீயே
நடமாடும் மாணவப் பருவத்தின் தீயே
நல்வழிப் பாதையிலே இன்றுமுதல் நடைபோடு
நாளைய வரலாறு நமதென்று புகழ்பாடு

புன்னகை


இதழ் தோகை விரிகையில்
இதய மயில் ஆடுகிறது
இளமையும் கூடுகிறது


செய்கூலி இல்லை
சேதாரம் உண்டு
யாவரும் அணியலாம்


இந்த முகவரிக்கு
அனைத்துத் தபால்களும்
தாமதமின்றி பட்டுவாடா


வசீகரிக்க வாய்க்கப்பெற்ற
அர்த்தங்கள் ஆயிரமுள்ள
அழகியல் மொழி


உறவுப் பாலத்திற்கு
ஒப்பந்தமிலாமல் போடப்படும்
உடனடிப் பத்திரம்


வேதனைக் குளத்தில்
வீசிய வலையிலும்
வந்துவிழும் விசித்திரமீன்



தேசங்களின் கதவுகளையும்
நேசங்களின் கதவுகளையும்
வரையறையின்றி திறக்கும் சட்டம்


மன நோய்களை
பணம் ஏதுமின்றி
குணமாக்கிடும் மருந்து


மனச் சேர்க்கையினால்
வாய்ப்புகள் கிடைக்கும்போது
மலரும் வாய்ப் பூ



அணிந்தவருக்குக் கேடயம்
பிரிந்தவருக்கு விரயம்
நொடிப் பொழுதில் உதயம்


அவசரத்திற்கு அடகு வைக்கலாம்
அசலோடு திரும்பக் கிடைக்கும்
அதிசயக் கடன்


மழலை என்றால் விடை
மங்கை என்றால் வினா
மனிதம் என்றால் அன் பூ பு


திறந்துக் கொள்ளை அடித்தாலும்
காவல்துறை கைதுசெய்யாத
கண்ணியமான திருடன்


இதழ் கடிதம் பிரிகையில்
அன்புள்ள என்று சொல்லும்
முதல் செய்தி


மனக் காயங்களுக்கு
மருந்திடும் மென்மையான
மயிலின் இறகு


உள்ளக் களிக்கையை உடனுக்குடன்
அரங்கேற்றம் செய்யும்
நாட்டியக்காரி


மானாவாரியாக மலர்ந்தாலும்
மனதிற்கு மட்டுமே தெரிந்த
மர்மதேசத்து மகாராணி

பதங்கமாதல்

காதலில் மட்டுமே
சாத்தியம் இதயம்
பதங்கமாதல்

முத்தம்

இதழ்களின் மோதலால்
இனிமையான கச்சேரி
முத்தம்

புதிதாய் பிறப்போம்


புன்னகையை இதழ்களில் பூத்திருப்போம்
மண்பகையை மனங்களில் துடைத்தொழிப்போம்


பூக்களில் வண்டாகித் தேனேடுப்போம்
பாக்களால் விண்டேகி வான்துடைப்போம்


காற்றிடம் காதலின் நயம் படிப்போம்
ஆற்றிடம் நாணலின் மடிகிடப்போம்


பறவையின் சிறகாகி படபடப்போம்
புரவியின் உறவாகி புவிகடப்போம்


மழலையின் வடிவாக மனம் அமைப்போம்
குழலையும் யாழையும் குணம் அமைப்போம்


சிந்தனை உளிகளால் சிலைவடிப்போம்
நிந்தனை செய்தாலும் கலைபடைப்போம்



கவலை விறகுகளை அடுப்பெரிப்போம்
திவலைச் சூரியனாய் சுட்டெரிப்போம்



இதயக் கதவுகளைத் திறந்துவைப்போம்
உதய நினைவுகளை விருந்து வைப்போம்


எப்போது சுயநலத்தை நாம் மறப்போம்
அப்போது புதிதாய் நாம்பிறப்போம்

பறந்து விருந்து

பூட்டிவைத்த என்வீட்டில்
புகுந்துவிட்டான் ஒருதிருடன்
பூட்டை அவன் உடைக்கவில்லை
பொன்பொருளைத் திருடவில்லை


ஆடைமேலே ஆசைகொண்ட
அர்ப்பமான திருடன்போலும்
என்ஆடை அணிந்துவிட்டு
கலைந்து போட்டான் சேரவில்லை


அடுக்களையில் சிறுதடயம்
பாவம் அவனுக்கு பசிபோல
பாத்திரத்தை உருட்டிவிட்டு
புசிக்கவில்லை நல்லவேளை


வாசம் மட்டும் போதுமென்று
பாசத்தோடு விட்டுச் சென்றான்
நேசமுள்ள திருடன்போல
நெஞ்சத்தைத் தொட்டுவிட்டான்


நூல்படிக்கும் ஆர்வமுள்ள
நூதனமான திருடன்போல
நான்படித்த புத்தகத்தை
நான்குபக்கம் படித்திருப்பான்


தான் பிடித்த வாசம்தனின்
தன்மைதனை உணர்ந்திருப்பான்
நூல்படித்துச் சென்ற அவன்
அடுத்த வீட்டில் சமைத்திருப்பான்


போகட்டும் விட்டுவிட்டேன்
வேலையில்லா வெட்டிப்பயல்
ஆகட்டும் பார்க்கலாம்
அடுத்து வந்தால் கேட்டிடலாம்

எப்படி என்சமையல்

செவ்வாய், 26 மே, 2009

காதல்

பூமியின் சுழற்சிக்கு
புத்துணர்வு தந்திடும்
கிரியாவூக்கி


மனிதத்தை மாண்புறச் செய்யும்
பாசமுள்ள உணர்ச்சி


சாதி மதத்தை ஒழித்திடும்
சமதர்மக் கடவுள்


மனம் என்ற தோட்டத்தில்
மணம் கமழும் மல்லிகைப்பூ


தலையெழுத்தை மாற்றிவிடும்
மூன்ரெழுத்து


பருவத்தையும் உருவத்தையும்
மாற்றிவிடும் மாயக்காரி


அகிலமே அகப்படும்
இந்த அதிசய வலையில்

காற்று

கண்ணிற்குத் தெரியாத
கடவுளின் மூச்சு

தென்றலாகத் தீண்டினால்
தேமதுரக் காதலன்

புயலாகச் சீறினால்
புறப்பட்ட காலன்

மலர்களின் மகரந்தச் சேர்க்கைக்கு
தூது செல்லும் மன்மதன்

காலச் சக்கரம் சுழன்றிட
இதுவுமோர் காரணி

உடல் என்ற கூட்டில்
உலவிவரும் ஞாநி

இசை என்ற இன்பத்தை
ஏந்தி வரும் தோணி

உப்பு

சூரியன் சுண்டக்காய்ச்சிய
சுவைதரும் பால்

நெய்தல் நிலத்தில்
விளையும் மானப்பயிர்

பாத்திகட்டி பதியம் போடாத
வெள்ளாமை

வெய்யில் தறியில்
நெய்த வெண்ணிற ஆடை

சமையலறையில் வீற்றிருக்கும்
சர்வாதிகாரி

உடன் பிறப்புகளே

இனப்பெருக்கம் செய்யவந்த
இந்தியப் பறவைகள் அல்ல நாங்கள்
இல்லங்கள் செழிப்பதற்காக இங்குவந்த நாங்கள்
ஆசைக் கனவுகள் ஆயிரம் சுமந்து
ஆறாயிரம் வெள்ளியை முகவரிடம் ஈந்து
அன்னை தந்தை அன்புமார் பிரிந்து
சுற்றமும் நட்பும் கண்ணீர் சொரிந்து
சுலக் கருப்பனுக்கு முடிகாணிக்கை நேந்து
சிங்கைநகர் வந்தோம் சிறகுகளைப் பிரிந்து
வாங்கியக் கடனுக்கு ஓராண்டு
வட்டிக் கடனுக்கு ஓராண்டு
ஒப்பந்தக் காலம் ஓராண்டு
ஒத்துக் கொள்கிறோம் ஒவ்வொரு ஆண்டும்
அக்காவிற்குத் திருமணம் ஐம்பத்தோரு சவரனும்
அடுத்தது தங்கைக்கு அதுபோல தரவேணும்
இல்லத்திலே மகிழ்ச்சியென்றால்
உள்ளம் இங்கே களித்திடும்
உறவுகளுக்குத் துன்பமென்றால்
உள்ளமது வலித்திடும்
உறவுச் சிலுவைகளை உள்ளத்தில் சுமந்து
உழைக்க வந்த உடன்பிறப்புகளே
ஒருவகையில் பார்த்தால்
நீங்கள்கூட இயேசுநாதர்களே

திங்கள், 25 மே, 2009

காலக் கருவறையில்

காலக் கருவறையில் கண்மூடிக்கிடப்போம்
ஞாலக் கவியாலே பலகவிகள் வடிப்போம்

நீலக் கடல்வானின் நிலவொளியைக் குடிப்போம்
வாழப் புவிமேலே சிலவேளை நடிப்போம்

சோலைக் குயில்போல சோகங்கள் மறப்போம்
சேலைக் குயில்களுக்கும் புதுராகம் படைப்போம்

வாழைக் கன்றாகவா நம்வாழ்வை அமைப்போம்
பாலைச் சோலையிலே பசுந்தளிராய் பூப்போம்

நாளைக்கு மூன்றுவேளை வயிறாரப் புடைப்போம்
வேளைக்குக் கிடைக்காவிடில் வேதனையில் துடிப்போம்

காலைக் கதிரவனைப் போல் கடமைக்காக உதிப்போம்
மாலைக்கு ஏங்குகின்ற மடமைகளைத் துதிப்போம்

ஈழத்துக் கருவறையில் ஒருமுறையேனும் தரிப்போம்
வேரற்ற நம்மினத்து வேதனையை உரிப்போம்

போரற்ற புதுஉலகை புன்னகையால் திறப்போம்
யாரற்றுப் போனாலும் நாம் புதிதாய்ப் பிறப்போம்

தேர்தல்

குடவோலை முறையிலே வாக்கெடுப்பு அன்று
குடலுருவி நடந்திடும் வகுந்தெடுப்பு இன்று
ஊர்கூடி ஒன்றிணைந்து நடத்திடுவார் தேர்தல்
ஊர்கேடி இன்றிணைந்து நடப்பதுவா தேர்தல்
தேர்ந்தெடுக்கத் தள்ளுகிறார்கள் வீடுதோறும் பணத்தை
தூர்ந்தெடுக்க வேண்டும் உங்கள் தூய்மைகெட்ட மனத்தை
குடத்துக்குள் சீட்டிட்டு குலுக்குவார்கள் அன்று
சீட்டிற்கு குடம்கொடுத்து பழக்குகிறார்கள் இன்று
ஆன்மாவில் தலைவர்களைத் தேடியது மலையேறி
சினிமாவில் தலைவர்கள் வந்துவிட்டார் குடியேறி
கொள்கையில் இருப்பவரை கோடியுலும் தேடுங்கள்
கொட்டகையில் தேடுவதை உடனடியாய் நிறுத்துங்கள்
சேவைகளில் திளைப்போரை மனதிலே தல்
பாவைகளில் திளைப்போரை கனவிலும் கொல்
மேடையில் உரைத்தாலும் சிந்தித்துக்கேள்
பாடையில் படுக்குமுன் சந்தித்துவெல்
தேவைகளைத் தீர்ப்பதுக்கு வருவதா தேர்தல்
தேசத்தின் நலன்காக்க வருவதுதான் தேர்தல்
சாதிகளின் பெயர்சொல்லி நடக்கின்ற மோதல்
சண்டையிட்டு மடிந்திடும் போர்களமா தேர்தல்
நீதியின் தேர்தானே பவனிவரும் தேர்தல்
அநீதி செய்பவரை களைந்தெடுப்பதே தேர்தல்

இரவின் நிழல்கள்

இயங்கிக் களைத்தப் பூமிக்கு
இயற்கைச் சூடிய இருள்போர்வை
இரவினில் பூத்த வெள்ளிகளோ
நிலவினில் உதிர்ந்த பால்வியர்வை
உழைத்துக் களைத்த மனிதருக்கு
இரவின் நிழலேதரும் நிறைவை
இரையைத் தேடியப் பறவைகளும்
இரவினில் அடைந்திடும் அதனுறவை
உறவைப் பிரிந்திடும் உள்ளங்களும்
முள்ளாய் நினைத்திடும் நிழல்யிரவை
பிரிவைத் தாங்கிடும் உள்ளங்களும்
வெல்ல நினைக்கும் அதன்வரவை
பகலிலும் நிழல்கள் வருவதுண்டு
பார்வையில் அவைகள் நிலைப்பதில்லை
இரவின் நிழல்களில் இயக்கமுண்டு
அவை எப்போதும் மனங்களில் நிலைப்பதுண்டு

புல்லாங்குழல்


துவாரங்களாய்த் துளைத்தாலும் துன்பமில்லை உனக்கு
துவாரகையின் துயில்கலைத்த பங்குஉனக்கிருக்கு
துளிர்க்கும்போது உன்மேனி சொந்தமில்லை உனக்கு
தூதுவனாய் காற்று வந்தால் கவிபடிப்பாய் அனைத்து
புல்லாகிப் போனபோது பூக்காத உன்மேனி
புண்ணாகிப் போனாலும் புன்னகைக்கும் புதுஞானி
வில்லாகிப் போனபோது பாடாத இசைத்தேனீ
கல்லாகிப் போனவரையும் கரைத்துவிடும் கவிஞானி

ஞாயிறு, 24 மே, 2009

ஆழிப்பேரலை

ஊழி பெருத்ததோ
உலகை உய்த்ததோ
ஆழி கிளர்ந்ததோ
அலைகளால் அழிந்ததோ
காளி பிறந்ததால்
தாலிகள் அறுந்ததோ
வேள்விகள் அழிந்ததால்
வேலிகள் உடைந்ததோ
சாதிகள் தெரிந்ததா
பிணசாதிகள் பார்க்கையில்
கேள்விகள் பிறந்ததோ
கேண்மைகள் புரிந்ததோ
இதுதானா இயற்கை
எப்போதுதீரும் இதன்வேட்க்கை

அகலிகை

மாமனின் சாபத்தால் கல்லாகி
ராமனின் பாதத்தால் பெண்ணானவள்

கலை மகனே

அமெரிக்க நாட்டினரின்
அரும்விருதாம் ஆசுக்கார்
எட்டாத கனியெனவே தமிழருக்கு இருந்துவந்த
கொட்டாவி விட்டவரும் வியப்பெய்து மகிழ்ச்சியுற
இரண்டாகப் பெற்றுவந்து சிறப்புற்ற ரகுமானே
இறவாத புகழடைந்த தமிழினத்தின் கலைமகனே
திசையாவும் கேட்கிறது உன்கீதம் தேன்மாரி
இசையாலே அவ்விருதை நீ பெற்றாய் நலம்வாழி
தசையாவும் சிலிர்த்தது நாங்கள் கேட்ட ஒருசெய்தி
தமிழ்பேசி அவ்விருதை பெற்றாயே புகழ்வாழ்க