சனி, 29 டிசம்பர், 2012

அம்மா









பூப்பெய்து  நீராடி 
பூரித்து  நின்றபோது  
புனிதவதி  என்றழைத்துப் 
புன்னகையாய்  சொன்னார்கள் 

மாப்பிள்ளை  எனைப்பார்த்து
மணக்கோலம் கொண்டபோது
மாங்கல்யம் சூடிடவே 
மனைவி  ஆகிப்போனேன் 

புகுந்தவீட்டில்   மருமகளாய்
சீர்கொடுத்தத்  திருமகளாய் 
பலபெயர்கள்  எனக்குண்டு 
பட்டியலும்  கொஞ்சம்நீளும்

பள்ளியறைப்  படுக்கையிலே 
கணவனுக்குத்   தாசியாக 
பகல்பொழுதில்  வீட்டினிலே
பணிபுரியும்  வாசுகியாய் 


பேர்பெற்ற  போதிலும் 
பெரிதுவக்கவில்லை  நானும் 
யார்கொடுத்த  சாபமோ 
நீர்வடித்துச்  சொல்கின்றேன் 


ஊர்கொடுத்த  பெயர்என்ன
உண்மையிலே  தெரியுமா 
வேர்அறுந்த  சிறுக்கிக்கு 
வேறுபெயர்   மலடியாம்

என்சுரங்கண்ட  மார்பிரண்டும் 
பால்சுரக்க  வேண்டுமடா 
உன்விரல்தீண்டி   என்உயிரும்
பூப்பூக்க  வேண்டுமடா 


நான்எருக்குழியில்  போகுமுன்னே 
கருக்குழியை   நிறைப்பாயா 
என்அவப்பெயரைத்   துடைத்திடவே 
அம்மா  என்றழைப்பாயா.