வெள்ளி, 21 ஜனவரி, 2011

வீரத்தைப் போற்றிடுவோம் .



தென்றலோடு தேன்கலந்து
தேமதுரத் தமிழ்குழைந்து
மன்றத்திலே கவிபாடும்
மாமதுரைக் கவிஞரிவர்


குன்றிலிட்ட மணிவிளக்காய்
குரலினிலே இடிமுழங்க
நன்றமர்ந்த நாயகரே
நரைத்த இளஞ்சூரியரே


வீரபாண்டித் தென்னவரே
வணக்கமைய்யா முன்னவரே
சிரம்தாழ்த்தி வணங்குகிறேன்
செவிமடுக்க அவையோரை



வங்கமண் வளர்த்தெடுத்த
வரலாற்று நாயகனாம்
மங்காதப் புகழ்படைத்த
மாவீரர் நேதாஜி


அடிமையென விலங்குபூட்டி
ஆளவந்த கூட்டத்தின்
அடிமடியைக் கலங்கடித்த
ஆற்றல்மிகு வீரமகன்



தன்மானம் சுயவேட்கை
தளராத செயல்வேகம்
எந்நாளும் போற்றிடவே
எழுந்துவந்த மதியூகம்


வெட்டிபேச்சில் வீண்பேச்சில்
விடியாது என்றெண்ணி
பட்டதெல்லாம் போதுமென்று
பாய்ச்சல்கண்ட வங்கப்புலி


பக்கிங்காம் பளபளக்க
பாரதத்தாய் கண்ணீர்சிந்த
கொக்கரித்துக் கோபங்கொண்டு
கொதித்தெழுந்த கொள்கைவீரர்


பேச்சினிலே புயல்வேகம்
பெருங்கூட்டம் சேரக்கண்டு
மூச்சதனை நிறுத்திடவே
முயன்றவர்கள் தோல்வியுற்றார்


தாய்நாட்டின் விடுதலையை
நாய்களிடமா கேட்பதென்று
சாய்த்திடவே எண்ணியவர்
சரித்திரத்தை மாற்றிவிட்டார்

சிங்கைநகர் சீரமைத்த
சீற்றமிகு படையாலே
சங்கநாத ஒலிஎழுப்பி
சமுத்திரத்தைக் கலங்கடித்தார்

பொங்குதமிழ் மறவரெல்லாம்
புடைசூழ்ந்து பின்தொடர
மங்கையரும் பங்குபெற்ற
மகத்தான யுகப்புரட்சி


இளைஞரெல்லாம் எழுச்சியுற்று
எழுந்துவந்த எரிமலையாய்
அலைஅலையாய் திரண்டுவந்து
அணிவகுத்தப் பெருங்கூட்டம்


மிடுக்கான உடையமைப்பில்
மிரண்டுபோன பகைவரெல்லாம்
நடுக்கமுடன் எதிர்கொண்டு
நாளெல்லாம் போரிட்டார்


வஞ்சகங்கள் ஒன்றுசேர
வாய்ப்புக்காக பின்வாங்கி
துஞ்சாமல் துயிலாமல்
தூரதேசம் சென்றுவிட்டார்


விடியலாகப் பின்னாலே
விடுதலையைப் பெற்றபோதும்
விடிவெள்ளி வீரமதை
விதைநெல்லாய் தூவிச்சென்றார்


இறந்துவிட்டார் என்றெண்ணி
இறுமார்ந்த ஓநாய்கள்
பிறந்துவந்த பிள்ளைதனின்
பெயரதனை அறிவாரோ


வீரனுக்கு மரணமில்லை
வெகுண்டெழுவார் வேலுப்பிள்ளை
பிரபாவதி பெற்றெடுத்து
பேராண்மை பெற்றவரே


மறவாது இவ்வுலகம்
மகத்தான வீரமதை
இறவாத புகழ்வாழ்க
இலங்கையிலும் தமிழ்மீள்க


பஞ்சத்திற்கு அடிபணியும்
பரதேசிக் கூட்டம்போல
வ்ஞ்சகத்தில் வழிதவறி
வாக்களித்துச் சென்றிடாதீர்


கொள்ளையிட்ட பணம்கோடி
கொள்கையெல்லாம் தெருக்கோடி
வெள்ளையனே தேவலடா
விளங்கவில்லை லட்சங்கோடி


ஆட்டுமந்தைக் கூட்டமல்ல
அறிந்திடுவீர் தோழர்களே
நோட்டுவிந்தைக் காட்டினாலும்
நேர்மையுடன் நின்றிடுவீர்


உரிமைக்காக உயிர்நீத்த
உத்தமர்கள் பூமியிது
நரிகலெல்லாம் நாடாண்டால்
நாணிலமும் தாங்காது


அஞ்சாத நெஞ்சத்தின்
அருஞ்சொற்பொருள் அறிந்திடுவீர்
நெஞ்சார வீரத்தை
நேசித்துப் போற்றிடுவீர் .

கவிஞர் .மதுரா .வேள்பாரி

ஞாயிறு, 16 ஜனவரி, 2011

பந்தயம் .


ஊரெல்லாம் ஒன்னுகூடி
ஒருநாளைக் குறிச்சாக
பெயரெல்லாம் கொடுத்தாக
பெருமையான பயமக்க


ஆகாரம் ஒருமாதம்
அளவில்லாம கொடுத்தாக
சேதாரம் ஆகுமுன்னு
செவியோரம் சொல்லலையே


நீச்சலெல்லாம் அடிச்சேங்க
நிச்சியமாய் நம்புங்க
பாய்ச்சலுக்குத் தயாராகி
பந்தயமும் வந்ததுங்க


வண்டியில பூட்டிவிட்டு
வாட்டமாக ஏறுனாக
சண்டிப்பய ரெண்டுபேரு
சத்தியமும் செஞ்சாங்க

முதல்பரிசு இணைப்பாக
முப்பதாயிரம் ரூபாயாம்
அதமட்டும் வாங்கிடனும்
அவ்வளவுதான் சொல்லிப்புட்டேன்


விசிலெல்லாம் அடிச்சாக
விலாஎலும்ப ஒடிச்சாக
பசியெல்லாம் மறந்தநானும்
பருந்தாகப் பறந்தேங்க


என்னோட இனஞ்சேர்ந்த
இளவட்ட மாடுக
முன்னோட கோபமாக
முறுக்குனாக என்வாலை


கண்ணீரு பெருக்கெடுத்து
கரைபுரண்டு ஓடுனத
கண்டுகொள்ளா மனுசபய
கைதட்டிக் குதிச்சாக


மூத்திரமும் ஒழுகிடவே
மூனுகிலோமீட்டர் ஓடினேங்க
ஆத்திரமும் வந்ததுங்க
அடிமையென்ன செய்வேங்க


பின்னால குத்துனாக
பிருட்டமெல்லாம் புண்ணாக
தன்னால குருதிவழிய
தசையெல்லாம் வலிச்சதுங்க


ஒருவழியா ஓடிநானும்
உச்சக்கோட்டை தொட்டேங்க
மறுபிறவி எடுத்ததுபோல்
மயங்கிப்போய் நின்னேங்க


பரிசெல்லாம் வாங்கிக்கிட்டு
பந்தாவாகச் சொன்னாக
சரிசரி நேரமாச்சு
செவலைக்குத் தண்ணிகாட்டு


நாவறண்டு நான்குடிச்சேன்
நாலுவாயித் தண்ணி
போதுமடாசாமி புலம்புகிறேன்
என்பொறப்பை எண்ணி .

திங்கள், 10 ஜனவரி, 2011

தை மகளே .


கலப்பைதனை கையில்ஏந்தி
கனவுகளை நெஞ்சில்தாங்கி
நிலப்பைதனின் நெஞ்சைக்கீறி
நீரிடுவர் விதையைத்தூவீ


பகலவனின் ஒளியைவாங்கி
பசுந்தழைகள் மண்ணைநீவி
பகலிரவாய் வளர்ந்துவரும்
பாரெங்கும் பஞ்சம்தீர


வியர்வைதனை நித்தம்சிந்தி
விடியுமென்றே சித்தம்எண்ணி
உயர்வுதனை அறியாமல்
உழைக்கின்ற உழவர்மக்கள்


நிலமகளை வணங்குகின்ற
நிறைவான பெருநாளாம்
குலம்வாழ குடிவாழ
குளிர்ந்துவரும் தைநாளாம்


பழமைகளை தீயிலிட்டு
பாதையிலே கோலமிட்டு
வளமைமிகு வசந்தத்தை
வரவேற்று வாழ்த்திடுவர்


மாவிலைத் தோரணமும்
மஞ்சள்கொத்து சூடிடவே
பூஇலை வாழைகட்டி
புடம்போட்ட பானையிலே


பச்சரிசி பனைவெல்லம்
பசும்பாலும் சேர்ந்திடவே
உச்சிவெயில் வரும்முன்னே
உவகையுடன் பொங்கல்வைப்பர்


பொங்கிவரும் வேளையிலே
பெண்மணிகள் குலவையிட
தங்கிடவே செல்வமெல்லாம்
தரணிக்கே சொல்லிடுவார்


பொங்கலோ பொங்கலென்று
பூரித்துக் கும்பிடுவார்
அங்கமெல்லாம் சிலிர்த்துவிடும்
அருந்தமிழ்ப் பண்டிகையாம்

காய்கனிகள் தேங்காயும்
கறும்போடு தேனினையும்
பாய்போல வாழையையும்
படையலுக்கு வைத்திடுவர்


கதிரவனைத் துதிபாடி
காணிக்கை செலுத்திடுவர்
புதிதாக நூலாடை
பூமிக்கும் சூடிடுவர்


காடுகழனி உழைக்கின்ற
கால்நடைக்கும் நன்றிசொல்லி
சூடிடுவார் குங்குமமும்
சூரணமும் சந்தனமும்


ஆநிரைக்கும் அழகுசேர்த்து
அமுதுபொங்கல் விருந்தளித்து
வாய்நிறைய வாழ்த்துச்சொல்லி
வணங்கிடும் பொ(ந)ன்னாளே

ஆண்டாண்டு வருவாயே
அகம்யாவும் மகிழ்ந்திடவே
வேண்டிடுவோம் தைமகளே
வேதனைகள் களைந்திடுவாய் .

திங்கள், 13 டிசம்பர், 2010

பயணம் .

பொள்ளாச்சிப் பேருந்தில்
போதுமான கூட்டமில்லை
தேய்ந்துபோன இருக்கையில்
தெய்வம்வந்து அமர்ந்தது

புறப்பட்டப் பேருந்தில்
புலம்பல்கள் ஏராளம்
கைத்தொலைபேசியில்
கடலைகள் தாராளம்

மனிதருக்கு மட்டுமே
முழுக்கட்டணமாம்
குட்டியான தெய்வங்களுக்கு
குறைந்த கட்டணம் மட்டுமே


மலிவுக்கட்டணம் என்றாலும்
மடியில்தான் அமரவேண்டுமாம்
நடமாடும் தெய்வத்திற்கு
இருக்கை பிடிக்கவில்லை



திரும்பிய தெய்வமது
திருக்கையால் தீண்டியது
துன்பமான பயணத்திலும்
இன்பமாகச் சிரித்தது



தெய்வத்தை பெற்றவர்கள்
திரும்பிக்கூட பார்க்கவில்லை
தொடுவதும் பின்முகத்தை
மூடுவதுமாய் புன்னகைபூரித்தது


களைத்துப்போன தெய்வமது
கண்ணுறங்கிப் போனது
தெய்வத்திற்கு தெரிந்திருக்க
வாய்ப்பில்லை மனிதனாவோமென்று



மனிதனாகிப் போனாலும்
தெய்வங்கள் தெரியாமல்
வந்துகொண்டே இருக்கிறார்கள் .

மண்வீடு

கரையான் புற்றெடுக்க
கருநாகம் குடிபுகுந்து
இரையாகும் கரையானின்
இடர்பாடு தெரிவதில்லை


தரையாவும் தடம்பார்த்து
தன்எச்சில் குழைத்தெடுத்து
குறையேதும் இல்லாமல்
கோபுரமாய் கட்டிடுமாம்


மண்வீடு ஆனாலும்
பொன்வீடு போலிருக்கும்
புணல்வந்து புகுந்திடினும்
அணல்போல உள்ளிருக்கும்

திரைகூட செலுத்திடாமல்
திருடனாக உட்புகுந்து
பறைசாற்றும் தன்பெயரை
பாம்புப்புற்று என்றுசொல்லி


உழைப்பேதும் இல்லாமல்
உரிமையாக்கும் அரவம்போல
பிழைப்பார்கள் சிலபேர்கள்
பிறர்மனையை கவர்ந்துவாழ .

செவ்வாய், 5 அக்டோபர், 2010

மனிதம்



நதிமூலம் தெரியாத
பிரம்ம ரகசியம்
நகலாக்கல் குழந்தையா
நாகரீக அதிசயம்


குலமகளும் பெற்றிடுவாள்
குலம்தளிரக் குழந்தை
குழாய்களில் கருவளரும்
கலியுகத்து விந்தை


எந்தையும் நுந்தையும்
தேவையில்லை இதற்கு
சந்தையிலே விற்கவரும்
சந்ததிகள் சரக்கு


வணக்கத்திற்கு உரியது
வாழ்வளித்த கருவறை
வாடகைக்கு வந்ததே
இதுஎன்ன வாழ்வுமுறை


பிறப்பிற்கும் இறப்பிற்கும்
இடைப்பட்ட வாழ்வு
பிறப்பைவைத்து நடக்கிறதே
பித்தலாட்டப் பிழைப்பு


சுகப்பிரசவம் என்பது
சுகமான பிறப்பு
சுயநல வாதத்தினாலும்
கத்திவைத்து அறுப்பு


இதையும் தாண்டி
எட்டிப்பார்த்தோம்
தாய்வழியே பூமி
கலயுகத்திலும் வாழ்கிறது
சில மருத்துவச்சாமி


சிந்தித்து செயல்படுங்கள்
மனிதகுல பிரமாக்களே
சிரம்தாழ்த்தி வணங்கிடுவோம்
நீங்கள்கூட அம்மாக்களே


மகத்துவம் நிறைந்தது
மனிதகுலப் பிறப்பு
மண்ணிலே மனிதம்வளர
மருத்துவரும் பொறுப்பு .

திங்கள், 4 அக்டோபர், 2010

தாஜ்மகல் .



வெள்ளைப் பட்டுடுத்தி
வேய்ந்துவைத்த கூரையென
கொள்ளை அழகெல்லாம்
கொட்டிவைத்த பெட்டகமாய்

முல்லைக் கொடியிடையாள்
மும்தாசு நினைவாக
வெள்ளியை விதைத்ததுபோல்
வேந்தரவர் கட்டுவித்தார்

பள்ளியறை முழுவதுமே
பாவையர்கள் நிறைந்திருக்க
கள்ளியவள் என்செய்தால்
காவியத்தைப் படைத்துவைக்க

வில்லொத்த பார்வையிலே
விண்மீன்கள் கண்சிமிட்ட
கள்ளொத்த கனிமொழியால்
காதலினை வளர்த்தாலோ

துள்ளிவரும் யமுனைகரை
துயில்கொண்டால் பேரழகி
சொல்லொணாத் துயரத்தில்
சோர்ந்துபோன மன்னவரும்

கள்ளமில்லாக் காதலினைக்
காலங்கள் உணர்ந்திடவே
உள்ளத்திலே
உணர்வொழுக
உருவெடுத்தார் தாசுமகால்

பல்லவர்கள் புகழ்பாடும்
பாறைகளின் சிற்பம்போல
நல்லதொரு காதல்சின்னம்
நவரசங்கள் இங்குமின்னும்.

சனி, 25 செப்டம்பர், 2010

முதற்குழந்தை .


முன்னூறுநாள்
சுமந்து
முகிழ்தெடுக்கா முதற்குழந்தை
கண்ணூறும் பார்வையிலே
களைந்திடுமென் துயரெல்லாம்

தொண்ணூறு வயதாகி
துவண்டுவிடும் போதிலும்
என்னுயிராய் தொடர்ந்திடுவாள்
எனதருமை முதற்குழந்தை

சொல்கேட்டு செவியின்பம்
சுந்தரமாய் பெருகிவர
பல்விட்டுப் போனாலும்
பைந்தமிழைப் பருகிடுவேன்


மெய்தீண்டும் இன்பமதில்
மேனியது சிலிர்த்திருக்க
பொய்தாண்டிப் போனபின்பும்
பொலிவுடனே காத்திருப்பாள்

காலனவன் போட்டுவைத்தக்
கணக்கினை முடிக்கும்வரை
கோலமயில் துணைவருவாள்
குலதெய்வம் வடிவாகி

தந்தையென்ற தவப்பெயரை
தவறாமல் வழங்கிடுவாள்
முந்தையென்ன தவம்செய்தேன்
முழுமதியே சொல்லிடுவாய்


பெண்ணாகப் பிறந்ததினால்
பேறுபெற்ற மங்கையவள்
கண்ணாகக் காப்பதிலே
கனிவான அன்னையவள்


பொன்னாசை இல்லாத
புதிரானக் குழந்தையவள்
என்னாசை நிறைவேற
எப்போதும் வருந்தியவள்


கண்ணனென நான்செய்யும்
குறும்புகளை மறந்துவிட்டு
மன்னனாக எனைத்தாங்கும்
மாதரசி பெண்மையவள்


துணையாகி பிள்ளைகளெல்லாம்
தோள்கொடுக்க வந்தாலும்
ம(எ )னையாள வந்தவளே
மகிழ்ச்சிதரும் முதற்குழந்தை .

ஞாயிறு, 1 ஆகஸ்ட், 2010

குற்றமென்ன.


கட்டுமரக் கலம்ஏறி
மீன்பிடிக்கச் சென்றவர்கள்
பட்டதுயர் கொஞ்சமல்ல
பட்டபாட்டை என்னசொல்ல

பட்டினியால் சாவுவந்தால்
பஞ்சமென்று சொல்லிடலாம்
எட்டிச்சென்று கேள்விகளை
எமனிடத்தில் கேட்டிடலாம்

கொட்டிவைத்த செல்வெமென
கோடிவளம் கடலினிலே
சுட்டுயிவர் பார்க்கின்றார்
மீனவரின் உடலினிலே

எல்லைதாண்டி வந்ததாக
எடுத்திங்கே இயம்புகின்றார்
கொள்ளையிட்டுச் செல்வதாக
கொடுமைகளும் புரிகின்றார்


அங்கமெல்லாம் ஊனமாக்கி
ஆழ்கடலில் பிணமாக்கி
சிங்களவன் புரிகின்ற
சீர்கேட்டை தினம்எண்ணி

கண்டுமிவர் கலங்குகின்றார்
கடிதங்களும் வரைகின்றார்
கண்ணீரும் வற்றிவிடும்
கால்வயிரும் ஒட்டிவிடும்

இவர்வரையும் மடல்மட்டும்
இறுதிவரை முட்டையிடும்
தவறிருந்தால் சொல்லிடுவீர்
தலைவணங்கி ஏற்கின்றேன்


தமிழனாகப் பிறந்ததுதான்
இவர்கள் செய்தகுற்றமா
அமிர்தமான ஆழ்கடலும்
அவலமெண்ணி வற்றிடுமா .

வெள்ளி, 23 ஜூலை, 2010

கறுப்புப் பள்ளி .



சிவகாமி
பெற்றெடுத்த
சிந்தைமிகு தவப்புதல்வர்
இவர்போல பிறப்பாரா
இன்னுமொரு செயல்வீரர்


வறுமையான வயதிலும்
வாட்டமிவர் கொண்டதில்லை
பெருமையாகப் போற்றிடுவோம்
பெருந்தலைவர் புகழதனை


இளவயதில் கல்விகற்க
இயலாத காரணத்தால்
குலவிளக்காய் கல்விதனை
குன்றாமல் காத்துச்சென்றார்


நாட்டுப்பற்றை இயல்பெனவே
நரம்போடு உரமேற்றி
வீட்டுப்பற்றை உதறிவிட்ட
விந்தைமிகு மாமனிதர்


போராட்டம் பலகண்டு
புகுந்துவிட்டார் சிறைதனிலே
பாராட்டை விரும்பாத
பண்பான இன்குணத்தார்


காங்கிரசு இயக்கத்தின்
காவலராய் பொருப்பேற்று
பாங்குடனே வழிநடத்தி
பணிபுரிந்த கர்மவீரர்


உருவத்திலே மிடுக்காக
உயர்ந்துநின்ற புனிதனவர்
கருமத்தை கடைசிவரை
கண்ணாகக் காத்துநின்றார்


சுயநலத்தை விரும்பாத
சுத்தமான தங்கமிவர்
பயமறியா தலைவரிவர்
பார்வையிலே சிங்கமிவர்


தமிழகத்தின் முதல்வராக
தலைமையேற்று ஆட்சிசெய்தார்
அமிழ்தான திட்டங்கள்
அரங்கேற்றி மீட்சிசெய்தார்


கல்வியோடு உணவளித்த
கருணைமிகு கறுப்புக்காந்தி
நல்வழியில் சென்றுயர்ந்த
நாடுபோற்றும் புகழேந்தி


எளிமையின் இலக்கணத்தை
இவரைப்பார்த்துக் கற்றிடலாம்
அழியாப்புகழ் பிள்ளைகளை
அன்னைமார்கள் பெற்றிடலாம்


அரசியலில் இவரொரு
ஆற்றல்மிகு முன்னோடி
சிரசிலேற்றி செல்லவேண்டும்
சிறுமதியினர் பின்னாடி


விளக்கணைக்கச் சொல்லிச்சென்ற
விருதுநகர் விடிவெள்ளி
களங்கமில்லா காமராசர்
கறைபடியா கறுப்புப்பள்ளி.

சனி, 22 மே, 2010

சுயமான தலைவர் .


பல்துறை வித்தகர் பண்பாளர் மாண்புகள்
சொல்லியே போற்றுவார் சொல்வீரர் _சொல்லில்
நயமுடன் ஆற்றுவார் நாடகம் பார்பார்
சுயமான தலைவர் இவர் .


இனமழித்து நம்மொழியை என்றென்றும் காப்பார்
மனமழித்து வாழ்கின்றார் மண்ணில் _மனமே
இவர்புரியும் இந்த இழிச்செயலை தவறென
எவரெல்லாம் சொல்வார் இவர்க்கு.

செவ்வாய், 23 மார்ச், 2010

இ(தழ்)லைகளின் மேல் ஒரு அமுதமழை.


விதையாகி மண்ணிலே
புதையுண்ட காலம்முதல்
தவமாக நானிருந்து
தளிர்த்து வந்தேன் பூமியிலே

செடியாகச் செழித்துவந்த
சின்னஞ்சிறு பருவத்திலே
மடியாக நான்நினைத்து
மனம் மகிழ்ந்தேன் மண்மீது

ஆகாய மழைதூவி
அதுவந்து எனைத்தழுவி
பூவாகப் போகுமுன்னே
பிடுங்கிவிட்டார் போதுமென்று

நாற்றாங்கால் மறுநடவாய்
நட்டுவைத்தார் தொட்டியிலே
மாற்றங்கள் இதுதானா
சொல்லிடுவாய் மானிடமே

நினைக்கின்ற நேரங்களில்
எனக்காக நீருற்றி
அணைக்கின்ற ஆதவனை
அளவோடு தினம்காட்டி

அலுவலக நேரங்களில்
வீட்டிற்குள் எனைப்பூட்டி
அய்யகோ என்னசெய்வேன்
அறைக்குள்ளா என்வாழ்வு

ஆறுதலாய் காற்றுவந்து
அனுதினமும் தழுவிடவே
தேற்றிக்கொண்டேன் என்மனதை
மாற்றமாக புதுவாழ்வு

வளர்ந்து விட்டேன் கொடியாக
மகரந்தச் செடியாக
பூத்துவிட்டேன் ஓர்நாளில்
வண்ணமிகு மலர்கள்தாங்கி

இதழ்களிலே தேன்துளிகள்
முதல்மழையாய் நினைவலைகள்
வண்டுவந்து தீண்டிடுமா
உண்டவுடன் சென்றிடுமா

கட்டுக்குள் அடைபட்ட
கன்னிமலர் இ(தழ்)லைகளிலே
சிந்துகின்ற அமுதமழை
கண்ணீரின் அவலநிலை.


சனி, 20 மார்ச், 2010

பெண்ணின் பெருமை .

முறத்தாலே துரத்தினாளாம்
முன்னாளில் பெண்ணொருத்தி
புறங்காட்டி ஓடியதாம்
புலியதுவும் உயிர்வருத்தி


தன்னுயிரைக் காத்திட்ட
தமிழச்சி வரலாறு
மண்ணிலே இன்றுவரை
மங்காதப் புகழாக


அந்நாளின் பெருமைதனை
அடியோடு தகர்த்தெறிய
இந்நாளில் புறப்பட்ட
இளநங்கை சுகந்தியவள்


பள்ளிசென்ற வாகனமும்
பள்ளத்தில் விழுந்திடவே
துள்ளிச்சென்று ஓடிவிட்டார்
துயரறியா ஓட்டுனரும்


முடிந்தவரைப் போராடி
மூச்சடக்கி நீர்தேடி
மழலைகளை காத்துச்சென்ற
மாண்புதனை என்னசொல்ல


உள்ளங்களிலே உறுதிகொண்ட
உனைப்போன்ற பெண்களாலே
பெண்ணினத்தின் பெருமையெல்லாம்
பெயர்பெற்று வாழுமடி


கண்ணியத்தின் கடவுளாக
கடைசிவரை போற்றுமடி
கண்களிலே நீர்கசிந்து
காலடியில் வீழுமடி .

உல்லாச உலகம் .


முன்னொரு காலத்தில்
கடவுளெல்லாம் கண்முன்னே
கணநேரம் முன்வந்து
களைந்திடுமாம் துயரெல்லாம்


ஊமைக்குப் பாலுட்டி
ஆமைக்கும் வழிகாட்டி
அழகுதமிழ்ச் சீராட்டி
ஆன்மீகம் வளர்ந்ததையா


தனிமனித ஒழுக்கங்கண்டு
கனிகள்தரும் மரங்கள்கூட
கணிவாக வரங்கள் தந்து
பணிவாக நின்றதன்று


சுயநலமாய் மனிதமனம்
சுருங்கிவிட்ட காரணத்தால்
பயங்கொண்டு கடவுள்களும்
பாறைகளில் பதுங்கிவிட்டார்


ஒதுங்கிவிட்ட அவர்புகழை
ஓதுவதாய் இவர்சொல்லி
ஓராயிரம் போதகர்கள்
ஓயாமல் வந்துவிட்டார்


தன்மனத்தை அறியாமல்
தத்துவங்கள் புரியாமல்
தஞ்சமென இவர்பின்னே
தரணியெங்கும் பெருங்கூட்டம்


தேகத்தினை முன்னிறுத்தி
தேவைகளுக்கு தினம்ஒருத்தி
மடிகளிலே தவழ்கின்றார்
நடிகைகளும் குலவுகின்றார்


கருவறையில் காமலீலை
கடவுள்களும் அங்கில்லை
பதுங்கிவிட்ட கடவுள்களும்
பத்திரமாய் தூங்குகின்றார்



பக்திஎன்ற பெயர்சொல்லி
பாழாய்ப்போன இவர்பின்னே
புத்தியினை அடகுவைத்து
புலம்புவதை விட்டுவிட்டு


கடந்து உள்ளே சென்றிடுவீர்
கடவுளினைக் கண்டிடலாம்
மடங்களிலே மண்டியிடும்
மடமையினை வென்றிடலாம்


சல்லாப சாமிகளின்
உல்லாச உலகமடா
கல்லாகிப் போனாலும்
கடவுள்கள் பாவமடா .






புதன், 30 டிசம்பர், 2009

பிறப்பு.




இறப்பிற்கும் சிறப்பிற்கும்
திறக்கப்பட்ட முதல் கதவு


இல்லற வினாவின்
விடை தெரியாத விடை


பூமிப்பந்தை உதைக்க
வந்த மனிதசக்தி


அனாதை இல்லங்களுக்கும்
ஆரம்பிக்கப்பட்ட திறப்பு விழா


வாடகைத் தாயின் வசூலால்
குப்பைத் தொட்டிக்கும் கிடைத்த வட்டி


இல்லாமையை இனிப்பாக்கும்
இனிமையான வரவு


ஆதாயம் படைத்தவருக்கு
ஆண்டுதோறும் கொண்டாட்டம்


வறுமைக்கும் சிலசமயம்
வாய்ப்புகள் கொடுக்கும் பெருமை


மந்தை மந்தையாய் பிறந்தாலும்
விந்தையாகவும் சில மனிதநேய பிறப்புகள்.

சிங்கை .


சிங்கை என்பது போதிமரம்
சிருங்காரம் நிறைந்திட்ட சீர்நகரம்


உழைப்பினால் உயர்ந்திட்ட அலைநகரம்
உயர்வுக்கு ஏற்றத் தலைநகரம்


பலஇன மொழி நிறைந்திட்ட கலைநகரம்
பாட்டாளி மக்களின் உழை(லை)நகரம்


புதுமைக்குப் பெயர்போன புதுநகரம்
வறுமைக்கு விடை சொல்லும் வளநகரம்


பூச்சோலை நிறைந்திட்ட பூ நகரம்
பாச்சோலை நிறைந்திட்ட பா நகரம்


தமிழுக்கு இடம் தந்த தமிழ்நகரம்
தரணியில் உயர்ந்திடும் தளிர்நகரம்


வணிகச் சந்தையினால் பணநகரம்
வளர்ந்து வரும் நாடுகளுக்கு முன்னுதாரணம்

வாய்ப்பிருந்தால் நீங்கள்
ஒருமுறையேனும் வரவேண்டும் .

வரப்பிரசாதம்.


தவங்கள் வேண்டி தனிமையில் தனித்திருந்தேன்
தரிசனம் கிடைத்ததால் தவம் கலைந்தேன்


புன்னகை இதழ்மலர பூரித்திருந்தேன்
பூவாய் மொழிகேட்டு தினம் மகிழ்ந்தேன்


குறுநகைப் பார்வையில் குதுகளித்தேன்
கூந்தல் போர்வையில் துயில் களைந்தேன்


இதழ்வழித் தேனில் நனைந்திருந்தேன்
இளமையைப் பரிமாற உயிர்த்தெழுந்தேன்


வசந்தத்தின் வாசலை அடைந்திருந்தேன்
வளமெல்லாம் பெருகிட வாழ்ந்திருந்தேன்


மெளனமாகிப் போனதால் உயிர்இழந்தேன்
வாழ்வியல் அர்த்தத்தை இன்றுணர்ந்தேன்


சுகமானது மட்டுமே சுகப்பிரசவம் அல்ல
வலிகள் கூட வரப்பிரசாதம்தான்.

புதன், 23 டிசம்பர், 2009

கடவுள் .

இருக்கிறது இல்லை
இன்றுவரை நடக்கும்
இ(ம)றை விவாதம் .


அன்பென்ற படகினால்
மட்டுமே கடந்திடும்
அற்புதக்கடல் .


கருணை உணர்வினால்
கண்களைத் திறக்கும்
களங்கமில்லா ஊற்று.


பக்திப் போர்வைக்குள்
பதுங்கிக் கொண்டிருக்கும்
தத்துவ ஞானி.


ஏழைகளின் சிரிப்பில்
பூத்துக் குலுங்கும்
புனித மலர் .


கடந்து உள்ளே
செல்பவர் மட்டும்
அறிந்திடும் காரிய
ச(மு)க்தி.


கலவரங்களுக்குக் காரணமான
களங்கமில்லாத காலத்தின்
காரணி .


அறிந்திடத் துணிபவருக்கு
மட்டுமே வாய்த்திடும்
அரூபமான காட்சி .


உதவிடும் குணத்தில்
உலவிக் கொண்டிருக்கும்
உன்மத்தன்.


தூய்மை உள்ளங்களில்
குடிகொண்ட தொலைந்திடாத
இன்பம் .

பள்ளிக்கூடம்.

இளமைப் பட்டாம் பூச்சிகள்
சிறகுகள் விரிக்கும்
வ(எ)ண்ணமிகுத் தோட்டம் .


அறிவை விருத்தி
செய்யும் ஆற்றல்மிகு
அனுபவச் சாலை .


ஒழுக்கம் உயர்வைப்
போதிக்கும் உன்னதக்
கலைக்கூடம்.


நாளைய தலைமுறைகளை
நடவு செய்யும்
நம்பிக்கை வயல்கள் .


கல்விக் கடவுளை
கண்களுக்குக் காட்டும்
கருணை ஆலயம் .


வியாபாரச் சந்தையாகவும்
மாறிவிட்ட விந்தைமிகு
விற்பனை .

வியாழன், 3 டிசம்பர், 2009

சோ(ஆ)று

மண்ணில் பூத்த
மணிநீர் இந்த சோறு
மானிட வாழ்வில்
மாபெரும் வரலாறு


நிலவு காட்டி
அன்னை ஊட்டிய
நிலாச் சோறு


நினைவு காட்டி
தந்தை ஊட்டிய
பலாச் சோறு


பால்ச்சோறு தயிர்சோறு
நெய்ச்சோறு இருப்பவர்
வாழ்வில் பலநூறு



கண்ணீரு செந்நீறு
கால்வயிறு இல்லாதவர்
வாழ்விற்குக் காரணம்யாரு



மனைவி உண்ட
மண்சோறு மணிமேகலை
கண்ட மந்திரச்சோறு

அரியும் சிவனும்
இணைந்த சோறு
அரிதாகி வருகிற
அவலத்தைப் பாரு


சோமாலியாவிலும்
ஓடியதோர் ஆறு
சோகங்கள் நிறைந்த
பஞ்சத்தின் ஆறு


பஞ்சங்கள் மறைவதற்குப்
படைக்கப்பட்ட ஆறு
மஞ்சத்திலே திளைத்திருந்தால்
மகிமை புரியாது


பாலாறு தேனாறு
பலப்பல ஆறு
காணாமல் போனது
யார்செய்த கோளாறு



வைத்த கை எடுத்ததால்
வைகை ஆறு
வறண்டு போய்
வடிக்கிறது கண்ணீறு


கா விரிந்து ஓடியதால்
காவிரி ஆறு
கலகத்திற்குக் காரணமான
கானல் நீறு


வடக்கிலே ஓடிவரும்
மூவாறு வற்றாது
வலம்வந்த வானாறு
நாகரீக நலப்பாட்டால்
நலிந்ததைப் பாரு


நதிகள் இணைப்பை
நவில்ந்தவர் நம்ம
பாரதியாரு

ஆறில்லா ஊருக்கு
ஆழகு பாழ் என்பது
ஔவை மொழி


சோறில்லா ஊருக்கு
சுகமில்லை என்பது
சோகத்தின் வ(ஒ )லி .