ஞாயிறு, 26 மே, 2013

அஞ்சலி



அஞ்சலி

சிங்கநாதக் குரலொலியில்
சங்கநாதத் தமிழ்முழங்கும்
வெங்கலத்துச் சுடராகி
வேணுகானம் இசைத்தமகன்

பொங்கிவரும் புணல்அழகாய்
பொதிகைமலைத் தமிழழகாய்
எங்கெங்கினும் ஏழிசையால்
இசைத்தமிழை வளர்த்தமகன்

சுந்தரமாய் தமிழ்புழங்கி
மந்திரமாய் அதில்விளங்கி
சந்ததிகள் கடந்திடினும்
சரித்திரத்தை விதைத்தமகன்

பரமனுக்கும் குரல்கொடுத்தாய்
பாமரனின் துயர்படித்தாய்
வாமனனாய் உருவெடுத்து
வையகத்தில் இடம்பிடித்தாய்

எந்திரமாய் போனவரையும்
இளக்கிவிடும் குரலழகா
இங்கிருந்து போனதேனோ
இசைத்தமிழும் உரு(அழு)குதய்யா.


இறைவனடி சேர்ந்தவருக்கு 
இதயம் கனிந்த அஞ்சலி.

சனி, 29 டிசம்பர், 2012

அம்மா









பூப்பெய்து  நீராடி 
பூரித்து  நின்றபோது  
புனிதவதி  என்றழைத்துப் 
புன்னகையாய்  சொன்னார்கள் 

மாப்பிள்ளை  எனைப்பார்த்து
மணக்கோலம் கொண்டபோது
மாங்கல்யம் சூடிடவே 
மனைவி  ஆகிப்போனேன் 

புகுந்தவீட்டில்   மருமகளாய்
சீர்கொடுத்தத்  திருமகளாய் 
பலபெயர்கள்  எனக்குண்டு 
பட்டியலும்  கொஞ்சம்நீளும்

பள்ளியறைப்  படுக்கையிலே 
கணவனுக்குத்   தாசியாக 
பகல்பொழுதில்  வீட்டினிலே
பணிபுரியும்  வாசுகியாய் 


பேர்பெற்ற  போதிலும் 
பெரிதுவக்கவில்லை  நானும் 
யார்கொடுத்த  சாபமோ 
நீர்வடித்துச்  சொல்கின்றேன் 


ஊர்கொடுத்த  பெயர்என்ன
உண்மையிலே  தெரியுமா 
வேர்அறுந்த  சிறுக்கிக்கு 
வேறுபெயர்   மலடியாம்

என்சுரங்கண்ட  மார்பிரண்டும் 
பால்சுரக்க  வேண்டுமடா 
உன்விரல்தீண்டி   என்உயிரும்
பூப்பூக்க  வேண்டுமடா 


நான்எருக்குழியில்  போகுமுன்னே 
கருக்குழியை   நிறைப்பாயா 
என்அவப்பெயரைத்   துடைத்திடவே 
அம்மா  என்றழைப்பாயா.  
                          
                  

    

வியாழன், 12 ஜூலை, 2012

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு .



 

 

 

 

 

 

  ஊசிமுனை  இடம்கூட    

கிடையாது  என்றுசொல்லி 

வேசிமகன்  சிங்களனும்  

விரட்டுகிறான்  நம்மினத்தை 

 

வெந்தபுண்ணும்  ஆரும்முன்னே 

வேல்வந்து  பாய்ந்ததுபோல் 

சொந்தநாட்டில்  அகதிகளா 

சோதனைதான்  சாமிகளா 

 

வந்தவரை  வாழவைக்கும் 

வரலாறு  போதுமடா 

கந்தையாகப்   போகுமுன்னே 

கண்விழிக்க   வேணுமாடா 

 

 நிலமழித்து  நம்மினத்தை 

நிர்மூலமாய்  செய்ததுபோல் 

வளமழிக்க  அணையெடுத்து 

வன்முறைகள்   புரிகின்றார் 

 

காவிரியும்  கானல்நீராய் 

காணாமல்  போனதுபோல் 

நீர்விரியும்  பாதையெல்லாம் 

நெடுஅணைகள்   எழுந்திடுமோ 

 

கேரளமும்  வஞ்சனையால் 

கேடுகளைச்  செய்திடுமோ 

கேடுகெட்ட  காங்கிரசு 

கேள்விகளைக்  கேட்டிடுமா 

 

பாடுபட்ட   எம்மினமே 

பட்டதெல்லாம்  போதுமடா 

சூடுபட்ட  தமிழினமே 

சுரந்துயெழ வேணுமடா 

 

இத்தாலி   அறுந்ததிற்கு 

இத்தனை  தாலிகளா

அத்தாலி  ஆட்சியிலே 

அணைகளெல்லாம்  வேலிகளா 

 

விழித்திடுவாய்  தமிழினமே 

வாய்க்கரிசி  போடுமுன்னே 

ஒழித்திடுவீர்  ஒன்றிணைந்து 

உதவாக்(கறை)கரை  காங்கிரசை .    

                          

ஞாயிறு, 27 நவம்பர், 2011

பைந்தமிழில் நுழைந்துள்ள பார்த்தீனியத்தை ஒழிப்போம் .

நெல்லுக்கு இறைத்தநீர்
வாய்க்கால் வழிஓடிப்
புல்லுக்கும் ஆங்கே
புசியுமாம் . தொல்லுலகில் ,


புல்லானப் பலமொழியை
பூந்தமிழில் புகுத்தலாமோ
நெல்லான நம்மொழியின்
நெஞ்சத்தை உறுத்தலாமோ

விழிகளிலே பழுதென்றால்
வேறுவிழி பொருத்திடலாம்
தமிழ்மொழியில் பழுதென்றால்
எவ்வாறு தடுத்திடலாம்

ஒண்டவந்த பிடாரியெல்லாம்
ஊர்பிடாரியை விரட்டிடுமாம்
ஒண்டமிழின் புகழைக்கூட
அதுபோலக் கெடுத்திடுமாம்

அண்டவிட வேண்டாமே
அருந்தமிழைக் காத்திடுவோம்
வண்டமிழின் சோலைதனில்
வண்ணமாகப் பூத்திடுவோம்

தாய்மொழியும் நாய்மொழியும்
தரத்தினிலே ஒன்றிடுமா
வாய்மொழியாய் வந்ததெல்லாம்
வள்ளுவத்தை வென்றிடுமா

கற்றிடலாம் பலமொழிகள்
கற்பதிலே குறையுமில்லை
நற்றமிழில் நடவுசெய்தல்
நியாயமென்ன சொல்லிடுவீர்

உண்டிதனில் கலப்படங்கள்
உண்டவர்க்கு நஞ்சாகும்
அண்டிவரும் அயல்மொழியால்
அனைத்தமிழ் அழகுகெடும்

செங்குருதி ஓட்டத்திலும்
சிலவேறு பிரிவுஉண்டு
அங்கேனும் கலப்படத்தால்
அப்பொழுதே உயிர்பிரியும்


பைந்தமிழில் நுழைந்துள்ள
பார்த்தீனியக் களையெடுப்போம்
நைந்துவிடா நம்தமிழை
நாள்தோறும் நாம்வளர்ப்போம் .

ஞாயிறு, 13 நவம்பர், 2011

நூலகம் ஓர் ஆலயம் .

நூலகமும் ஆலயமும்
ஒன்றிணைந்த திருவடிவாய்
வேலனவன் தமிழ்மொழியை
வேய்ந்துவைத்த மன்னவராம்

ஞாலமெலாம் போற்றுகின்ற
ஞானமொழி சொன்னவராம்
காலமெல்லாம் கவிவடிக்கும்
வீரபாண்டித் தென்னவராம்

தலைமைக்கு முதல்வணக்கம்
தகையோர்க்கும் தலைவணக்கம்
கலைபடிக்கும் நூலகத்தின்
கதவுகளைத் திறப்போமா

ஆறில்லா ஊருக்கு
அழகதுவும் பாழென்று
அறிவுருத்திச் சென்றாளே
ஔவையவள் மூதாட்டி

ஊருக்கு அழகென்றால்
ஒருஆறு போதுமங்கே
தேருக்கு அழகென்றால்
தெய்வமது வேண்டுமங்கே

தெய்வங்கள் உறைந்திருக்கும்
திருவிடங்கள் பலவும்உண்டு
மெய்யதுவும் கோவிலாகும்
மேன்மையினை அறிந்திடுவீர்

பொய்மைதனை நீக்கிடவே
பொறையின்றி கற்றிடுவீர்
உய்வதற்கு முன்னாலே
உயர்வுநிலை எட்டிடுவீர்

கண்ணிற்குத் தெரியாத
கடவுளர்கள் கற்சிலையில்
மண்ணிலே உலவிவரும்
மகத்துவத்தை அறிவீரோ

அன்பே சிவமென்றால்
அறிவன்றோ தெய்வமாகும்
முன்பதனை வழிமொழிந்து
மூத்தவர்கள் சொல்லிவைத்தார்

அன்பினாலே அனுதினமும்
ஆலயங்கள் செல்வோரே
பண்பதனை அறிந்திடவே
பாடசாலை சென்றிடுவீர்

மலர்விட்டு மலர்தாவி
மகரந்தம் தனைநீவி
உலர்வதற்கு முன்னாலே
உள்கூட்டில் சேர்த்திடுமாம்

சிறுதேனி ஆனாலும்
சிந்தையெல்லாம் தினந்தேடல்
ஒருநாளும் சோர்வுயில்லை
ஒலித்திடுமே குறும்பாடல்

ஈயாத தேட்டையெல்லாம்
தீயவர்கள் கொள்வாராம்
ஈவதற்கு இங்குண்டு
இயன்றவர்கள் எடுத்திடுவீர்

திரட்டிவைத்த தேன்கூடாய்
திரவியங்கள் பலவுமுண்டு
புரட்சிகளின் வரலாறும்
புதையலாக இங்குண்டு

அறிவையெல்லாம் அடைகாக்கும்
ஆலயத்தைக் கண்டிடுவீர்
அறிந்தவர்கள் அதன்சிறப்பை
அனைவருக்கும் சொல்லிடுவீர்

புறமெல்லாம் நூற்பதற்கு
பூவுலகில் கோடியுண்டு
அகமதனை நூற்பதற்கு
நூலகமே தேவைஇன்று

அர்சனைகள் இங்குஇல்லை
அபிசேகம் தேவையில்லை
அனுமதியாய் சிறப்புச்சீட்டு
அலுவலர்கள் தருவதில்லை

சாதிமத பேதமில்லை
சடங்குகளும் நடப்பதில்லை
நீதிஒன்றே சாமிஇங்கு
நிந்தனைகள் ஏதுமில்லை

மதங்கள்கூட தடையுமில்லை
மனிதநேயம் சுடவுமில்லை
உதயமதை வேண்டுவோர்கள்
உளமுடனே சென்றிடலாம்

ஆலயமும் தொழுவதென்றால்
அதுவன்றோ சாலமாகும்
நூலகமும் ஆலயமே
நூல்படிக்கச் செல்லலாமா .

தீக்குச்சி .


அழிவி்ற்காகவே அடைக்கப்பட்ட
ஆச்சர்யக்குறிகள்

ஒற்றைக்காலில் படுத்துறங்கும்
ஒசாமா பின்லேடன்கள்

சிரசுகள் உரசப்படும்போதெல்லாம்
தீக்குளிக்கும் பே(சீ )தைகள்

கந்தகச்சுமை தலைக்கேறியதால்
கரியாகிப்போகும் கடன்காரன்கள்

க(இ)ல்லாத குழந்தைகளின்
களவாடப்பட்ட விரல்கள்

வரங்கள் சாபங்களானதால்
நிறங்கள் மாறிய மரங்கள்.

குப்பைத்தொட்டி .


கழிவுகளை மட்டுமே
கையேந்தும் கருணைஇல்லம்

கழிப்பறைக் கருவறைகளால்
கண்ணியமான காப்பகம்

பிச்சைக்காரர்களுக்கும் உணவளிக்கும்
அட்சயப் பாத்திரம்

பிறர்செய்த பாவங்களைச்
சுமந்துநிற்க தே(வை )வ
இந்த தூதன்.

பார்வை .


கொங்கை வனப்பதனில்
கோடிஇன்பம் கண்டிருந்தேன்

முல்லை இவளல்லோ
மோகத்தீ மூட்டினாளே

கள்ளைக் குடித்ததுபோல்
கலவிடவே ஆவல்கொண்டேன்

தொல்லை கொடுத்தாளே
தொலைவில் அவள் இருந்தாலும்

நெல்லைத் தூற்றியதால்
பறந்துவந்த பதரதுவும்

வெள்ளை விழியதனை
வேதனையில் ஆழ்தியதே

பிள்ளைப் பாலூற்ற
பிரிந்திடுமாம் வலியெல்லாம்

பல்லை இளித்துநானும்
பார்த்த அந்தப்பார்வையெல்லாம்

எல்லை தாண்டிடவே
எதார்த்தம் விளங்கியது .

செவ்வாய், 18 அக்டோபர், 2011

தி(தெ)ருவோடு.


உள்ளாட்சித் தேர்தலுக்காய்
ஊர்வலமாய் வந்தோம்க
நல்லாட்சி தந்திடுவோம்
நிச்சயமாய் நம்பிடுங்க


பல்லிளிச்சுப் போயிடாம
பணமும்கூட தந்திடுவோம்
கள்ளுக்கடைப் பக்கம்வந்தா
கறியும்சோறும் போட்டுருவோம்


காசுபணம் வேண்டாமென்றால்
கமுக்கமாகச் சொல்லிடுங்க
ஏசிகூட வாங்கித்தாறோம்
ஏழைஎன்னை நம்பிடுங்க


உங்களுக்காக உழைக்கவந்த
உத்தமன பாருங்க
எங்களுக்கு நீங்களன்றி
யாரிருக்கா சொல்லிடுங்க

அஞ்சுவருசம் முன்னாடி
அம்மாதாயே பார்த்ததுங்க
நெஞ்சத்தொட்டு சொல்றேங்க
ஞாபகமும் வச்சுக்கோங்க


பொன்னான ஓட்டமட்டும்
பொழுதோட போட்ருங்க
அண்ணனோட அருமைச்சின்னம்
தி(தெ)ருவோட்ட மறக்காதிங்க .

செவ்வாய், 12 ஜூலை, 2011

பாதம்

உன் பூப்பாதங்கள்
பட்டபின்புதான்
பூமியென்ற அகலிகை
புனிதமடைந்தாளோ

செவ்வாய், 5 ஜூலை, 2011

கடன்






கடன்பட்டான்
நெஞ்சம்போல
கலங்கினான் வேந்தனென்று
உடன்பட்ட கம்பனுக்கு
உள்ளத்திலே எவ்வலியோ


குடமுடைத்து குழந்தைவரும்
காலம்
தொட்டு மனிதரெல்லாம்

வடம்பிடித்து இழுத்திடுவர்
வாழ்கையெனும் கடன்தேரை



தாய்கொடுத்த பால்கடனும்
தந்தையிடம் நூல்கடனும்
வாய்விட்டு கேட்டிடாத
வாய்த்தநல்ல இருகடனாம்


பொய்யான இவ்வுடலை
பொதிசுமக்கும் கழுதைபோல
மெய்யாக எண்ணியதால்
மேனியதும் சுமைகடனாம்

உடன்பிறந்த கடனாக
உறவுகளும் தொடர்ந்துவர
கடன்பிறந்து கால்முளைத்து
காலனையும் அழைத்துவரும்


திடம்கொண்டு சிக்கனமாய்
திட்டமிட்டு வாழ்பவரும்
படமெடுத்து பரிதவித்து
பரலோகம் தொட்டவரும்

கடனென்றால் அஞ்சிடுவர்
கைகூப்பிக் கெஞ்சிடுவர்
விடமென்றால் என்னவென்று
வினவிடுவர் எல்லோரும்


கடன்பட்டு மீண்டிடுவீர்
கண்ணுறக்கம் கொண்டிடுவீர்.

திங்கள், 7 பிப்ரவரி, 2011

அமைதியில் குருமகான் .



தும்பைப் பூஉடையில்
தூயவராய் உலவிடுவார்
இம்மை மறுமைக்கும்
இலக்கணங்கள் சொல்லிடுவார்

அம்மை அப்பரவர்
ஆட்கொண்ட அருள்மலையில்
நம்மைக் காத்திடவே
நடமாடும் அவதாரம்

ஏழகவை நாளதனில்
ஏற்றுக்கொண்ட தீட்சையினால்
பூவுலகை மாற்றவந்த
புனிதமான குருவருளே

வெள்ளைத் தாமரையில்
வீற்றிருக்கும் கலைமகளின்
பிள்ளை வடிவாகிப்
பிறந்துவந்த பெருவருளே

முல்லைக் கொடிபோல
முகிழ்த்துவந்த வெண்மதியே
தில்லை அம்பலத்தில்
திளைத்துவந்த நிம்மதியே

மானுடத்தின் மகத்துவத்தை
மண்ணுலகில் காத்திடவே
கானகத்தில் குடிலமைத்த
கருணைமிகு இறையருளே

வானகத்துத் தேவர்களும்
வந்துலவும் பொதிகைமலை
தேனருவி துள்ளிவிழும்
தென்கயிலை மூர்த்திமலை

அத்தரி மகரிசியும்
அனுசுயா தேவியரும்
இத்தரையில் நடம்புரிந்த
இடமெனவே அறிந்ததினால்

சித்தமெல்லாம் சிவயோகம்
சிந்தையெல்லாம் தவயோகம்
உத்தமமாய் உறைந்திடவே
உருவெடுத்த பிரணவாலயம்

அகிலமெல்லாம் மையல்கொண்ட
திருவருளே அமைதியாகும்
மகிமைகொண்ட பரஞ்சோதி
மாமுனியின் வடிவாகும்

கருணைமிகு தத்துவங்கள்
கடலளவு கொண்டபோதும்
அருமைமிகு தவயோகி
அமைதியான திருஉருவம்


பரிணாம மாற்றத்தில்
படைப்புகளும் மாறிடுமாம்
புரியாமல் பூவுலகை
புடம்போட நேரிடுமாம்

சுயநலமாய் மனிதமனம்
சுருங்கிவிட்ட நாள்முதலாய்
கயமையினால் பாவங்களை
கணக்கில்லாமல் செய்துவித்தார்

நிலம்அழித்து நீர்அழித்து
நிலவுலகின் வளம்அழித்து
குலம்அழித்து குணம்அழித்து
கொடுமைகளில் தினம்திளைத்து

மதியிழந்து மாந்தரெல்லாம்
மாண்டுபோகும் வேளையிலே
விதிப்பயனாய் விண்ணுலகின்
வேதமகன் வருவாராம்

தவப்பயனாய் வந்துதித்த
தகத்தகாய கதிரவனாய்
இவர்பிறந்தார் இருள்விலக
ஈரோட்டு நாயகனாய்

இறைமறுத்த முற்பிறப்பும்
இவரன்றி யாரறிவார்
குறையேதும் இல்லாத
குன்றாத இப்பிறப்பு

உலகமெல்லாம் அமைதிவேண்டி
உடுமலையின் உயரம்தாண்டி
கலகமெல்லாம் களையவேண்டி
காட்சிதந்த மலையாண்டி

பூவுலகம் சாந்திகாண
புனிதமாக அவதரித்து
நோவுகளை நீக்கிடவும்
நோன்பிருந்து அமைதிகாத்தார்

பந்தபாசம் அற்றபோதும்
பாமரரின் நிலையெண்ணி
சந்தோசம் எனும்சொல்லை
சகலருக்கும் சொல்லிவைத்தார்

கொந்தளிக்கும் எரிமலையும்
குளிர்ந்துவிடும் தென்றலென
சந்திரனார் வாக்கினிலே
சத்தியமும் வென்றதென்ன

நதிகளெல்லாம் ஒன்றிணைய
நவின்ற ஒருசொல்லினாலே
சதிகளெல்லாம் உடைத்தெறிந்து
சட்டங்களும் பிறந்ததென்ன

போர்புரிந்து பூவுலகம்
புதைந்தொழிந்து போகும்வேளை
பார்விரிந்து பசுமைகாண
பசுந்தளிர்கள் நட்டுவைத்தார்

யாகமென்னும் வேள்விதனை
யாவருக்கும் நலங்கள்வேண்டி
தாகமென்னும் தவவேள்வி
தவறாமல் இயற்றிவந்தார்


உண்மைநிலை என்னவென்று
உணர்ந்திடுவீர் மானுடமே
வெண்மையான திருவடியை
விரைந்துவந்து பற்றிடுவீர்

உலகமெல்லாம் சமாதானம்
ஓங்கியதோர் சன்னிதானம்
நலமெல்லாம் பெருகவேண்டி
நாடிவந்தால் மோட்சம்கிட்டும்

ஆர்பரிக்கும் அலைகடலும்
ஆழத்திலே அமைதிகொள்ளும்
பார்வையிலே அமைதிபூண்ட
பரஞ்சோதி உலகைவெல்லும்



வெள்ளி, 21 ஜனவரி, 2011

வீரத்தைப் போற்றிடுவோம் .



தென்றலோடு தேன்கலந்து
தேமதுரத் தமிழ்குழைந்து
மன்றத்திலே கவிபாடும்
மாமதுரைக் கவிஞரிவர்


குன்றிலிட்ட மணிவிளக்காய்
குரலினிலே இடிமுழங்க
நன்றமர்ந்த நாயகரே
நரைத்த இளஞ்சூரியரே


வீரபாண்டித் தென்னவரே
வணக்கமைய்யா முன்னவரே
சிரம்தாழ்த்தி வணங்குகிறேன்
செவிமடுக்க அவையோரை



வங்கமண் வளர்த்தெடுத்த
வரலாற்று நாயகனாம்
மங்காதப் புகழ்படைத்த
மாவீரர் நேதாஜி


அடிமையென விலங்குபூட்டி
ஆளவந்த கூட்டத்தின்
அடிமடியைக் கலங்கடித்த
ஆற்றல்மிகு வீரமகன்



தன்மானம் சுயவேட்கை
தளராத செயல்வேகம்
எந்நாளும் போற்றிடவே
எழுந்துவந்த மதியூகம்


வெட்டிபேச்சில் வீண்பேச்சில்
விடியாது என்றெண்ணி
பட்டதெல்லாம் போதுமென்று
பாய்ச்சல்கண்ட வங்கப்புலி


பக்கிங்காம் பளபளக்க
பாரதத்தாய் கண்ணீர்சிந்த
கொக்கரித்துக் கோபங்கொண்டு
கொதித்தெழுந்த கொள்கைவீரர்


பேச்சினிலே புயல்வேகம்
பெருங்கூட்டம் சேரக்கண்டு
மூச்சதனை நிறுத்திடவே
முயன்றவர்கள் தோல்வியுற்றார்


தாய்நாட்டின் விடுதலையை
நாய்களிடமா கேட்பதென்று
சாய்த்திடவே எண்ணியவர்
சரித்திரத்தை மாற்றிவிட்டார்

சிங்கைநகர் சீரமைத்த
சீற்றமிகு படையாலே
சங்கநாத ஒலிஎழுப்பி
சமுத்திரத்தைக் கலங்கடித்தார்

பொங்குதமிழ் மறவரெல்லாம்
புடைசூழ்ந்து பின்தொடர
மங்கையரும் பங்குபெற்ற
மகத்தான யுகப்புரட்சி


இளைஞரெல்லாம் எழுச்சியுற்று
எழுந்துவந்த எரிமலையாய்
அலைஅலையாய் திரண்டுவந்து
அணிவகுத்தப் பெருங்கூட்டம்


மிடுக்கான உடையமைப்பில்
மிரண்டுபோன பகைவரெல்லாம்
நடுக்கமுடன் எதிர்கொண்டு
நாளெல்லாம் போரிட்டார்


வஞ்சகங்கள் ஒன்றுசேர
வாய்ப்புக்காக பின்வாங்கி
துஞ்சாமல் துயிலாமல்
தூரதேசம் சென்றுவிட்டார்


விடியலாகப் பின்னாலே
விடுதலையைப் பெற்றபோதும்
விடிவெள்ளி வீரமதை
விதைநெல்லாய் தூவிச்சென்றார்


இறந்துவிட்டார் என்றெண்ணி
இறுமார்ந்த ஓநாய்கள்
பிறந்துவந்த பிள்ளைதனின்
பெயரதனை அறிவாரோ


வீரனுக்கு மரணமில்லை
வெகுண்டெழுவார் வேலுப்பிள்ளை
பிரபாவதி பெற்றெடுத்து
பேராண்மை பெற்றவரே


மறவாது இவ்வுலகம்
மகத்தான வீரமதை
இறவாத புகழ்வாழ்க
இலங்கையிலும் தமிழ்மீள்க


பஞ்சத்திற்கு அடிபணியும்
பரதேசிக் கூட்டம்போல
வ்ஞ்சகத்தில் வழிதவறி
வாக்களித்துச் சென்றிடாதீர்


கொள்ளையிட்ட பணம்கோடி
கொள்கையெல்லாம் தெருக்கோடி
வெள்ளையனே தேவலடா
விளங்கவில்லை லட்சங்கோடி


ஆட்டுமந்தைக் கூட்டமல்ல
அறிந்திடுவீர் தோழர்களே
நோட்டுவிந்தைக் காட்டினாலும்
நேர்மையுடன் நின்றிடுவீர்


உரிமைக்காக உயிர்நீத்த
உத்தமர்கள் பூமியிது
நரிகலெல்லாம் நாடாண்டால்
நாணிலமும் தாங்காது


அஞ்சாத நெஞ்சத்தின்
அருஞ்சொற்பொருள் அறிந்திடுவீர்
நெஞ்சார வீரத்தை
நேசித்துப் போற்றிடுவீர் .

கவிஞர் .மதுரா .வேள்பாரி

ஞாயிறு, 16 ஜனவரி, 2011

பந்தயம் .


ஊரெல்லாம் ஒன்னுகூடி
ஒருநாளைக் குறிச்சாக
பெயரெல்லாம் கொடுத்தாக
பெருமையான பயமக்க


ஆகாரம் ஒருமாதம்
அளவில்லாம கொடுத்தாக
சேதாரம் ஆகுமுன்னு
செவியோரம் சொல்லலையே


நீச்சலெல்லாம் அடிச்சேங்க
நிச்சியமாய் நம்புங்க
பாய்ச்சலுக்குத் தயாராகி
பந்தயமும் வந்ததுங்க


வண்டியில பூட்டிவிட்டு
வாட்டமாக ஏறுனாக
சண்டிப்பய ரெண்டுபேரு
சத்தியமும் செஞ்சாங்க

முதல்பரிசு இணைப்பாக
முப்பதாயிரம் ரூபாயாம்
அதமட்டும் வாங்கிடனும்
அவ்வளவுதான் சொல்லிப்புட்டேன்


விசிலெல்லாம் அடிச்சாக
விலாஎலும்ப ஒடிச்சாக
பசியெல்லாம் மறந்தநானும்
பருந்தாகப் பறந்தேங்க


என்னோட இனஞ்சேர்ந்த
இளவட்ட மாடுக
முன்னோட கோபமாக
முறுக்குனாக என்வாலை


கண்ணீரு பெருக்கெடுத்து
கரைபுரண்டு ஓடுனத
கண்டுகொள்ளா மனுசபய
கைதட்டிக் குதிச்சாக


மூத்திரமும் ஒழுகிடவே
மூனுகிலோமீட்டர் ஓடினேங்க
ஆத்திரமும் வந்ததுங்க
அடிமையென்ன செய்வேங்க


பின்னால குத்துனாக
பிருட்டமெல்லாம் புண்ணாக
தன்னால குருதிவழிய
தசையெல்லாம் வலிச்சதுங்க


ஒருவழியா ஓடிநானும்
உச்சக்கோட்டை தொட்டேங்க
மறுபிறவி எடுத்ததுபோல்
மயங்கிப்போய் நின்னேங்க


பரிசெல்லாம் வாங்கிக்கிட்டு
பந்தாவாகச் சொன்னாக
சரிசரி நேரமாச்சு
செவலைக்குத் தண்ணிகாட்டு


நாவறண்டு நான்குடிச்சேன்
நாலுவாயித் தண்ணி
போதுமடாசாமி புலம்புகிறேன்
என்பொறப்பை எண்ணி .

திங்கள், 10 ஜனவரி, 2011

தை மகளே .


கலப்பைதனை கையில்ஏந்தி
கனவுகளை நெஞ்சில்தாங்கி
நிலப்பைதனின் நெஞ்சைக்கீறி
நீரிடுவர் விதையைத்தூவீ


பகலவனின் ஒளியைவாங்கி
பசுந்தழைகள் மண்ணைநீவி
பகலிரவாய் வளர்ந்துவரும்
பாரெங்கும் பஞ்சம்தீர


வியர்வைதனை நித்தம்சிந்தி
விடியுமென்றே சித்தம்எண்ணி
உயர்வுதனை அறியாமல்
உழைக்கின்ற உழவர்மக்கள்


நிலமகளை வணங்குகின்ற
நிறைவான பெருநாளாம்
குலம்வாழ குடிவாழ
குளிர்ந்துவரும் தைநாளாம்


பழமைகளை தீயிலிட்டு
பாதையிலே கோலமிட்டு
வளமைமிகு வசந்தத்தை
வரவேற்று வாழ்த்திடுவர்


மாவிலைத் தோரணமும்
மஞ்சள்கொத்து சூடிடவே
பூஇலை வாழைகட்டி
புடம்போட்ட பானையிலே


பச்சரிசி பனைவெல்லம்
பசும்பாலும் சேர்ந்திடவே
உச்சிவெயில் வரும்முன்னே
உவகையுடன் பொங்கல்வைப்பர்


பொங்கிவரும் வேளையிலே
பெண்மணிகள் குலவையிட
தங்கிடவே செல்வமெல்லாம்
தரணிக்கே சொல்லிடுவார்


பொங்கலோ பொங்கலென்று
பூரித்துக் கும்பிடுவார்
அங்கமெல்லாம் சிலிர்த்துவிடும்
அருந்தமிழ்ப் பண்டிகையாம்

காய்கனிகள் தேங்காயும்
கறும்போடு தேனினையும்
பாய்போல வாழையையும்
படையலுக்கு வைத்திடுவர்


கதிரவனைத் துதிபாடி
காணிக்கை செலுத்திடுவர்
புதிதாக நூலாடை
பூமிக்கும் சூடிடுவர்


காடுகழனி உழைக்கின்ற
கால்நடைக்கும் நன்றிசொல்லி
சூடிடுவார் குங்குமமும்
சூரணமும் சந்தனமும்


ஆநிரைக்கும் அழகுசேர்த்து
அமுதுபொங்கல் விருந்தளித்து
வாய்நிறைய வாழ்த்துச்சொல்லி
வணங்கிடும் பொ(ந)ன்னாளே

ஆண்டாண்டு வருவாயே
அகம்யாவும் மகிழ்ந்திடவே
வேண்டிடுவோம் தைமகளே
வேதனைகள் களைந்திடுவாய் .

திங்கள், 13 டிசம்பர், 2010

பயணம் .

பொள்ளாச்சிப் பேருந்தில்
போதுமான கூட்டமில்லை
தேய்ந்துபோன இருக்கையில்
தெய்வம்வந்து அமர்ந்தது

புறப்பட்டப் பேருந்தில்
புலம்பல்கள் ஏராளம்
கைத்தொலைபேசியில்
கடலைகள் தாராளம்

மனிதருக்கு மட்டுமே
முழுக்கட்டணமாம்
குட்டியான தெய்வங்களுக்கு
குறைந்த கட்டணம் மட்டுமே


மலிவுக்கட்டணம் என்றாலும்
மடியில்தான் அமரவேண்டுமாம்
நடமாடும் தெய்வத்திற்கு
இருக்கை பிடிக்கவில்லை



திரும்பிய தெய்வமது
திருக்கையால் தீண்டியது
துன்பமான பயணத்திலும்
இன்பமாகச் சிரித்தது



தெய்வத்தை பெற்றவர்கள்
திரும்பிக்கூட பார்க்கவில்லை
தொடுவதும் பின்முகத்தை
மூடுவதுமாய் புன்னகைபூரித்தது


களைத்துப்போன தெய்வமது
கண்ணுறங்கிப் போனது
தெய்வத்திற்கு தெரிந்திருக்க
வாய்ப்பில்லை மனிதனாவோமென்று



மனிதனாகிப் போனாலும்
தெய்வங்கள் தெரியாமல்
வந்துகொண்டே இருக்கிறார்கள் .

மண்வீடு

கரையான் புற்றெடுக்க
கருநாகம் குடிபுகுந்து
இரையாகும் கரையானின்
இடர்பாடு தெரிவதில்லை


தரையாவும் தடம்பார்த்து
தன்எச்சில் குழைத்தெடுத்து
குறையேதும் இல்லாமல்
கோபுரமாய் கட்டிடுமாம்


மண்வீடு ஆனாலும்
பொன்வீடு போலிருக்கும்
புணல்வந்து புகுந்திடினும்
அணல்போல உள்ளிருக்கும்

திரைகூட செலுத்திடாமல்
திருடனாக உட்புகுந்து
பறைசாற்றும் தன்பெயரை
பாம்புப்புற்று என்றுசொல்லி


உழைப்பேதும் இல்லாமல்
உரிமையாக்கும் அரவம்போல
பிழைப்பார்கள் சிலபேர்கள்
பிறர்மனையை கவர்ந்துவாழ .

செவ்வாய், 5 அக்டோபர், 2010

மனிதம்



நதிமூலம் தெரியாத
பிரம்ம ரகசியம்
நகலாக்கல் குழந்தையா
நாகரீக அதிசயம்


குலமகளும் பெற்றிடுவாள்
குலம்தளிரக் குழந்தை
குழாய்களில் கருவளரும்
கலியுகத்து விந்தை


எந்தையும் நுந்தையும்
தேவையில்லை இதற்கு
சந்தையிலே விற்கவரும்
சந்ததிகள் சரக்கு


வணக்கத்திற்கு உரியது
வாழ்வளித்த கருவறை
வாடகைக்கு வந்ததே
இதுஎன்ன வாழ்வுமுறை


பிறப்பிற்கும் இறப்பிற்கும்
இடைப்பட்ட வாழ்வு
பிறப்பைவைத்து நடக்கிறதே
பித்தலாட்டப் பிழைப்பு


சுகப்பிரசவம் என்பது
சுகமான பிறப்பு
சுயநல வாதத்தினாலும்
கத்திவைத்து அறுப்பு


இதையும் தாண்டி
எட்டிப்பார்த்தோம்
தாய்வழியே பூமி
கலயுகத்திலும் வாழ்கிறது
சில மருத்துவச்சாமி


சிந்தித்து செயல்படுங்கள்
மனிதகுல பிரமாக்களே
சிரம்தாழ்த்தி வணங்கிடுவோம்
நீங்கள்கூட அம்மாக்களே


மகத்துவம் நிறைந்தது
மனிதகுலப் பிறப்பு
மண்ணிலே மனிதம்வளர
மருத்துவரும் பொறுப்பு .

திங்கள், 4 அக்டோபர், 2010

தாஜ்மகல் .



வெள்ளைப் பட்டுடுத்தி
வேய்ந்துவைத்த கூரையென
கொள்ளை அழகெல்லாம்
கொட்டிவைத்த பெட்டகமாய்

முல்லைக் கொடியிடையாள்
மும்தாசு நினைவாக
வெள்ளியை விதைத்ததுபோல்
வேந்தரவர் கட்டுவித்தார்

பள்ளியறை முழுவதுமே
பாவையர்கள் நிறைந்திருக்க
கள்ளியவள் என்செய்தால்
காவியத்தைப் படைத்துவைக்க

வில்லொத்த பார்வையிலே
விண்மீன்கள் கண்சிமிட்ட
கள்ளொத்த கனிமொழியால்
காதலினை வளர்த்தாலோ

துள்ளிவரும் யமுனைகரை
துயில்கொண்டால் பேரழகி
சொல்லொணாத் துயரத்தில்
சோர்ந்துபோன மன்னவரும்

கள்ளமில்லாக் காதலினைக்
காலங்கள் உணர்ந்திடவே
உள்ளத்திலே
உணர்வொழுக
உருவெடுத்தார் தாசுமகால்

பல்லவர்கள் புகழ்பாடும்
பாறைகளின் சிற்பம்போல
நல்லதொரு காதல்சின்னம்
நவரசங்கள் இங்குமின்னும்.

சனி, 25 செப்டம்பர், 2010

முதற்குழந்தை .


முன்னூறுநாள்
சுமந்து
முகிழ்தெடுக்கா முதற்குழந்தை
கண்ணூறும் பார்வையிலே
களைந்திடுமென் துயரெல்லாம்

தொண்ணூறு வயதாகி
துவண்டுவிடும் போதிலும்
என்னுயிராய் தொடர்ந்திடுவாள்
எனதருமை முதற்குழந்தை

சொல்கேட்டு செவியின்பம்
சுந்தரமாய் பெருகிவர
பல்விட்டுப் போனாலும்
பைந்தமிழைப் பருகிடுவேன்


மெய்தீண்டும் இன்பமதில்
மேனியது சிலிர்த்திருக்க
பொய்தாண்டிப் போனபின்பும்
பொலிவுடனே காத்திருப்பாள்

காலனவன் போட்டுவைத்தக்
கணக்கினை முடிக்கும்வரை
கோலமயில் துணைவருவாள்
குலதெய்வம் வடிவாகி

தந்தையென்ற தவப்பெயரை
தவறாமல் வழங்கிடுவாள்
முந்தையென்ன தவம்செய்தேன்
முழுமதியே சொல்லிடுவாய்


பெண்ணாகப் பிறந்ததினால்
பேறுபெற்ற மங்கையவள்
கண்ணாகக் காப்பதிலே
கனிவான அன்னையவள்


பொன்னாசை இல்லாத
புதிரானக் குழந்தையவள்
என்னாசை நிறைவேற
எப்போதும் வருந்தியவள்


கண்ணனென நான்செய்யும்
குறும்புகளை மறந்துவிட்டு
மன்னனாக எனைத்தாங்கும்
மாதரசி பெண்மையவள்


துணையாகி பிள்ளைகளெல்லாம்
தோள்கொடுக்க வந்தாலும்
ம(எ )னையாள வந்தவளே
மகிழ்ச்சிதரும் முதற்குழந்தை .