ஞாயிறு, 1 ஆகஸ்ட், 2010

குற்றமென்ன.


கட்டுமரக் கலம்ஏறி
மீன்பிடிக்கச் சென்றவர்கள்
பட்டதுயர் கொஞ்சமல்ல
பட்டபாட்டை என்னசொல்ல

பட்டினியால் சாவுவந்தால்
பஞ்சமென்று சொல்லிடலாம்
எட்டிச்சென்று கேள்விகளை
எமனிடத்தில் கேட்டிடலாம்

கொட்டிவைத்த செல்வெமென
கோடிவளம் கடலினிலே
சுட்டுயிவர் பார்க்கின்றார்
மீனவரின் உடலினிலே

எல்லைதாண்டி வந்ததாக
எடுத்திங்கே இயம்புகின்றார்
கொள்ளையிட்டுச் செல்வதாக
கொடுமைகளும் புரிகின்றார்


அங்கமெல்லாம் ஊனமாக்கி
ஆழ்கடலில் பிணமாக்கி
சிங்களவன் புரிகின்ற
சீர்கேட்டை தினம்எண்ணி

கண்டுமிவர் கலங்குகின்றார்
கடிதங்களும் வரைகின்றார்
கண்ணீரும் வற்றிவிடும்
கால்வயிரும் ஒட்டிவிடும்

இவர்வரையும் மடல்மட்டும்
இறுதிவரை முட்டையிடும்
தவறிருந்தால் சொல்லிடுவீர்
தலைவணங்கி ஏற்கின்றேன்


தமிழனாகப் பிறந்ததுதான்
இவர்கள் செய்தகுற்றமா
அமிர்தமான ஆழ்கடலும்
அவலமெண்ணி வற்றிடுமா .

வெள்ளி, 23 ஜூலை, 2010

கறுப்புப் பள்ளி .



சிவகாமி
பெற்றெடுத்த
சிந்தைமிகு தவப்புதல்வர்
இவர்போல பிறப்பாரா
இன்னுமொரு செயல்வீரர்


வறுமையான வயதிலும்
வாட்டமிவர் கொண்டதில்லை
பெருமையாகப் போற்றிடுவோம்
பெருந்தலைவர் புகழதனை


இளவயதில் கல்விகற்க
இயலாத காரணத்தால்
குலவிளக்காய் கல்விதனை
குன்றாமல் காத்துச்சென்றார்


நாட்டுப்பற்றை இயல்பெனவே
நரம்போடு உரமேற்றி
வீட்டுப்பற்றை உதறிவிட்ட
விந்தைமிகு மாமனிதர்


போராட்டம் பலகண்டு
புகுந்துவிட்டார் சிறைதனிலே
பாராட்டை விரும்பாத
பண்பான இன்குணத்தார்


காங்கிரசு இயக்கத்தின்
காவலராய் பொருப்பேற்று
பாங்குடனே வழிநடத்தி
பணிபுரிந்த கர்மவீரர்


உருவத்திலே மிடுக்காக
உயர்ந்துநின்ற புனிதனவர்
கருமத்தை கடைசிவரை
கண்ணாகக் காத்துநின்றார்


சுயநலத்தை விரும்பாத
சுத்தமான தங்கமிவர்
பயமறியா தலைவரிவர்
பார்வையிலே சிங்கமிவர்


தமிழகத்தின் முதல்வராக
தலைமையேற்று ஆட்சிசெய்தார்
அமிழ்தான திட்டங்கள்
அரங்கேற்றி மீட்சிசெய்தார்


கல்வியோடு உணவளித்த
கருணைமிகு கறுப்புக்காந்தி
நல்வழியில் சென்றுயர்ந்த
நாடுபோற்றும் புகழேந்தி


எளிமையின் இலக்கணத்தை
இவரைப்பார்த்துக் கற்றிடலாம்
அழியாப்புகழ் பிள்ளைகளை
அன்னைமார்கள் பெற்றிடலாம்


அரசியலில் இவரொரு
ஆற்றல்மிகு முன்னோடி
சிரசிலேற்றி செல்லவேண்டும்
சிறுமதியினர் பின்னாடி


விளக்கணைக்கச் சொல்லிச்சென்ற
விருதுநகர் விடிவெள்ளி
களங்கமில்லா காமராசர்
கறைபடியா கறுப்புப்பள்ளி.

சனி, 22 மே, 2010

சுயமான தலைவர் .


பல்துறை வித்தகர் பண்பாளர் மாண்புகள்
சொல்லியே போற்றுவார் சொல்வீரர் _சொல்லில்
நயமுடன் ஆற்றுவார் நாடகம் பார்பார்
சுயமான தலைவர் இவர் .


இனமழித்து நம்மொழியை என்றென்றும் காப்பார்
மனமழித்து வாழ்கின்றார் மண்ணில் _மனமே
இவர்புரியும் இந்த இழிச்செயலை தவறென
எவரெல்லாம் சொல்வார் இவர்க்கு.

செவ்வாய், 23 மார்ச், 2010

இ(தழ்)லைகளின் மேல் ஒரு அமுதமழை.


விதையாகி மண்ணிலே
புதையுண்ட காலம்முதல்
தவமாக நானிருந்து
தளிர்த்து வந்தேன் பூமியிலே

செடியாகச் செழித்துவந்த
சின்னஞ்சிறு பருவத்திலே
மடியாக நான்நினைத்து
மனம் மகிழ்ந்தேன் மண்மீது

ஆகாய மழைதூவி
அதுவந்து எனைத்தழுவி
பூவாகப் போகுமுன்னே
பிடுங்கிவிட்டார் போதுமென்று

நாற்றாங்கால் மறுநடவாய்
நட்டுவைத்தார் தொட்டியிலே
மாற்றங்கள் இதுதானா
சொல்லிடுவாய் மானிடமே

நினைக்கின்ற நேரங்களில்
எனக்காக நீருற்றி
அணைக்கின்ற ஆதவனை
அளவோடு தினம்காட்டி

அலுவலக நேரங்களில்
வீட்டிற்குள் எனைப்பூட்டி
அய்யகோ என்னசெய்வேன்
அறைக்குள்ளா என்வாழ்வு

ஆறுதலாய் காற்றுவந்து
அனுதினமும் தழுவிடவே
தேற்றிக்கொண்டேன் என்மனதை
மாற்றமாக புதுவாழ்வு

வளர்ந்து விட்டேன் கொடியாக
மகரந்தச் செடியாக
பூத்துவிட்டேன் ஓர்நாளில்
வண்ணமிகு மலர்கள்தாங்கி

இதழ்களிலே தேன்துளிகள்
முதல்மழையாய் நினைவலைகள்
வண்டுவந்து தீண்டிடுமா
உண்டவுடன் சென்றிடுமா

கட்டுக்குள் அடைபட்ட
கன்னிமலர் இ(தழ்)லைகளிலே
சிந்துகின்ற அமுதமழை
கண்ணீரின் அவலநிலை.


சனி, 20 மார்ச், 2010

பெண்ணின் பெருமை .

முறத்தாலே துரத்தினாளாம்
முன்னாளில் பெண்ணொருத்தி
புறங்காட்டி ஓடியதாம்
புலியதுவும் உயிர்வருத்தி


தன்னுயிரைக் காத்திட்ட
தமிழச்சி வரலாறு
மண்ணிலே இன்றுவரை
மங்காதப் புகழாக


அந்நாளின் பெருமைதனை
அடியோடு தகர்த்தெறிய
இந்நாளில் புறப்பட்ட
இளநங்கை சுகந்தியவள்


பள்ளிசென்ற வாகனமும்
பள்ளத்தில் விழுந்திடவே
துள்ளிச்சென்று ஓடிவிட்டார்
துயரறியா ஓட்டுனரும்


முடிந்தவரைப் போராடி
மூச்சடக்கி நீர்தேடி
மழலைகளை காத்துச்சென்ற
மாண்புதனை என்னசொல்ல


உள்ளங்களிலே உறுதிகொண்ட
உனைப்போன்ற பெண்களாலே
பெண்ணினத்தின் பெருமையெல்லாம்
பெயர்பெற்று வாழுமடி


கண்ணியத்தின் கடவுளாக
கடைசிவரை போற்றுமடி
கண்களிலே நீர்கசிந்து
காலடியில் வீழுமடி .

உல்லாச உலகம் .


முன்னொரு காலத்தில்
கடவுளெல்லாம் கண்முன்னே
கணநேரம் முன்வந்து
களைந்திடுமாம் துயரெல்லாம்


ஊமைக்குப் பாலுட்டி
ஆமைக்கும் வழிகாட்டி
அழகுதமிழ்ச் சீராட்டி
ஆன்மீகம் வளர்ந்ததையா


தனிமனித ஒழுக்கங்கண்டு
கனிகள்தரும் மரங்கள்கூட
கணிவாக வரங்கள் தந்து
பணிவாக நின்றதன்று


சுயநலமாய் மனிதமனம்
சுருங்கிவிட்ட காரணத்தால்
பயங்கொண்டு கடவுள்களும்
பாறைகளில் பதுங்கிவிட்டார்


ஒதுங்கிவிட்ட அவர்புகழை
ஓதுவதாய் இவர்சொல்லி
ஓராயிரம் போதகர்கள்
ஓயாமல் வந்துவிட்டார்


தன்மனத்தை அறியாமல்
தத்துவங்கள் புரியாமல்
தஞ்சமென இவர்பின்னே
தரணியெங்கும் பெருங்கூட்டம்


தேகத்தினை முன்னிறுத்தி
தேவைகளுக்கு தினம்ஒருத்தி
மடிகளிலே தவழ்கின்றார்
நடிகைகளும் குலவுகின்றார்


கருவறையில் காமலீலை
கடவுள்களும் அங்கில்லை
பதுங்கிவிட்ட கடவுள்களும்
பத்திரமாய் தூங்குகின்றார்



பக்திஎன்ற பெயர்சொல்லி
பாழாய்ப்போன இவர்பின்னே
புத்தியினை அடகுவைத்து
புலம்புவதை விட்டுவிட்டு


கடந்து உள்ளே சென்றிடுவீர்
கடவுளினைக் கண்டிடலாம்
மடங்களிலே மண்டியிடும்
மடமையினை வென்றிடலாம்


சல்லாப சாமிகளின்
உல்லாச உலகமடா
கல்லாகிப் போனாலும்
கடவுள்கள் பாவமடா .






புதன், 30 டிசம்பர், 2009

பிறப்பு.




இறப்பிற்கும் சிறப்பிற்கும்
திறக்கப்பட்ட முதல் கதவு


இல்லற வினாவின்
விடை தெரியாத விடை


பூமிப்பந்தை உதைக்க
வந்த மனிதசக்தி


அனாதை இல்லங்களுக்கும்
ஆரம்பிக்கப்பட்ட திறப்பு விழா


வாடகைத் தாயின் வசூலால்
குப்பைத் தொட்டிக்கும் கிடைத்த வட்டி


இல்லாமையை இனிப்பாக்கும்
இனிமையான வரவு


ஆதாயம் படைத்தவருக்கு
ஆண்டுதோறும் கொண்டாட்டம்


வறுமைக்கும் சிலசமயம்
வாய்ப்புகள் கொடுக்கும் பெருமை


மந்தை மந்தையாய் பிறந்தாலும்
விந்தையாகவும் சில மனிதநேய பிறப்புகள்.

சிங்கை .


சிங்கை என்பது போதிமரம்
சிருங்காரம் நிறைந்திட்ட சீர்நகரம்


உழைப்பினால் உயர்ந்திட்ட அலைநகரம்
உயர்வுக்கு ஏற்றத் தலைநகரம்


பலஇன மொழி நிறைந்திட்ட கலைநகரம்
பாட்டாளி மக்களின் உழை(லை)நகரம்


புதுமைக்குப் பெயர்போன புதுநகரம்
வறுமைக்கு விடை சொல்லும் வளநகரம்


பூச்சோலை நிறைந்திட்ட பூ நகரம்
பாச்சோலை நிறைந்திட்ட பா நகரம்


தமிழுக்கு இடம் தந்த தமிழ்நகரம்
தரணியில் உயர்ந்திடும் தளிர்நகரம்


வணிகச் சந்தையினால் பணநகரம்
வளர்ந்து வரும் நாடுகளுக்கு முன்னுதாரணம்

வாய்ப்பிருந்தால் நீங்கள்
ஒருமுறையேனும் வரவேண்டும் .

வரப்பிரசாதம்.


தவங்கள் வேண்டி தனிமையில் தனித்திருந்தேன்
தரிசனம் கிடைத்ததால் தவம் கலைந்தேன்


புன்னகை இதழ்மலர பூரித்திருந்தேன்
பூவாய் மொழிகேட்டு தினம் மகிழ்ந்தேன்


குறுநகைப் பார்வையில் குதுகளித்தேன்
கூந்தல் போர்வையில் துயில் களைந்தேன்


இதழ்வழித் தேனில் நனைந்திருந்தேன்
இளமையைப் பரிமாற உயிர்த்தெழுந்தேன்


வசந்தத்தின் வாசலை அடைந்திருந்தேன்
வளமெல்லாம் பெருகிட வாழ்ந்திருந்தேன்


மெளனமாகிப் போனதால் உயிர்இழந்தேன்
வாழ்வியல் அர்த்தத்தை இன்றுணர்ந்தேன்


சுகமானது மட்டுமே சுகப்பிரசவம் அல்ல
வலிகள் கூட வரப்பிரசாதம்தான்.

புதன், 23 டிசம்பர், 2009

கடவுள் .

இருக்கிறது இல்லை
இன்றுவரை நடக்கும்
இ(ம)றை விவாதம் .


அன்பென்ற படகினால்
மட்டுமே கடந்திடும்
அற்புதக்கடல் .


கருணை உணர்வினால்
கண்களைத் திறக்கும்
களங்கமில்லா ஊற்று.


பக்திப் போர்வைக்குள்
பதுங்கிக் கொண்டிருக்கும்
தத்துவ ஞானி.


ஏழைகளின் சிரிப்பில்
பூத்துக் குலுங்கும்
புனித மலர் .


கடந்து உள்ளே
செல்பவர் மட்டும்
அறிந்திடும் காரிய
ச(மு)க்தி.


கலவரங்களுக்குக் காரணமான
களங்கமில்லாத காலத்தின்
காரணி .


அறிந்திடத் துணிபவருக்கு
மட்டுமே வாய்த்திடும்
அரூபமான காட்சி .


உதவிடும் குணத்தில்
உலவிக் கொண்டிருக்கும்
உன்மத்தன்.


தூய்மை உள்ளங்களில்
குடிகொண்ட தொலைந்திடாத
இன்பம் .

பள்ளிக்கூடம்.

இளமைப் பட்டாம் பூச்சிகள்
சிறகுகள் விரிக்கும்
வ(எ)ண்ணமிகுத் தோட்டம் .


அறிவை விருத்தி
செய்யும் ஆற்றல்மிகு
அனுபவச் சாலை .


ஒழுக்கம் உயர்வைப்
போதிக்கும் உன்னதக்
கலைக்கூடம்.


நாளைய தலைமுறைகளை
நடவு செய்யும்
நம்பிக்கை வயல்கள் .


கல்விக் கடவுளை
கண்களுக்குக் காட்டும்
கருணை ஆலயம் .


வியாபாரச் சந்தையாகவும்
மாறிவிட்ட விந்தைமிகு
விற்பனை .

வியாழன், 3 டிசம்பர், 2009

சோ(ஆ)று

மண்ணில் பூத்த
மணிநீர் இந்த சோறு
மானிட வாழ்வில்
மாபெரும் வரலாறு


நிலவு காட்டி
அன்னை ஊட்டிய
நிலாச் சோறு


நினைவு காட்டி
தந்தை ஊட்டிய
பலாச் சோறு


பால்ச்சோறு தயிர்சோறு
நெய்ச்சோறு இருப்பவர்
வாழ்வில் பலநூறு



கண்ணீரு செந்நீறு
கால்வயிறு இல்லாதவர்
வாழ்விற்குக் காரணம்யாரு



மனைவி உண்ட
மண்சோறு மணிமேகலை
கண்ட மந்திரச்சோறு

அரியும் சிவனும்
இணைந்த சோறு
அரிதாகி வருகிற
அவலத்தைப் பாரு


சோமாலியாவிலும்
ஓடியதோர் ஆறு
சோகங்கள் நிறைந்த
பஞ்சத்தின் ஆறு


பஞ்சங்கள் மறைவதற்குப்
படைக்கப்பட்ட ஆறு
மஞ்சத்திலே திளைத்திருந்தால்
மகிமை புரியாது


பாலாறு தேனாறு
பலப்பல ஆறு
காணாமல் போனது
யார்செய்த கோளாறு



வைத்த கை எடுத்ததால்
வைகை ஆறு
வறண்டு போய்
வடிக்கிறது கண்ணீறு


கா விரிந்து ஓடியதால்
காவிரி ஆறு
கலகத்திற்குக் காரணமான
கானல் நீறு


வடக்கிலே ஓடிவரும்
மூவாறு வற்றாது
வலம்வந்த வானாறு
நாகரீக நலப்பாட்டால்
நலிந்ததைப் பாரு


நதிகள் இணைப்பை
நவில்ந்தவர் நம்ம
பாரதியாரு

ஆறில்லா ஊருக்கு
ஆழகு பாழ் என்பது
ஔவை மொழி


சோறில்லா ஊருக்கு
சுகமில்லை என்பது
சோகத்தின் வ(ஒ )லி .

செவ்வாய், 1 டிசம்பர், 2009

தியாகம் .

தன்வாழ்வை இரையாக்கி
நடக்கின்ற யாகம்
தளராமல் குறைபோக்கி
சுரக்கின்ற வேகம்


கண்ணீரைத் தனதாக்கி
கடக்கின்ற மேகம்
செந்நீரைப் புனிதாக்கி
சிறக்கின்ற தேகம்


தமக்கெனவே உரித்தாக்கி
பிறக்கின்ற சோகம்
பிறர்கெனவே துயர்போக்கி
கிடைக்கின்ற யோகம்


எந்நாளும் நினைவாக்கி
வளர்கின்ற மோகம்
சொன்னாலும் மனம்தாக்கி
கிளர்கின்ற ராகம்


நல்வாழ்வை உரமாக்கி
செழிக்கின்ற போகம்
இல்வாழ்வை மரமாக்கி
இனிக்கின்ற பாகம்


யாவரையும் உறவாக்கி
கரைகின்ற காகம்
ஊணுயிரை நீராக்கி
நிறைகின்ற தாகம்

செய்தவருக்கு உயிராகி
நிலவுகின்ற அகம்
உய்தவருக்கு பெயராகி
உலவுகின்ற சுகம்


மனிதருக்கு மருந்தாகி
மகிழ்கின்ற தவம்
மாண்புகளில் சிறந்ததாகி
மலர்கின்ற தியாகம் .

உலகியல் வெப்பம் .


உலகியல் வெப்பத்தை
உலகமெல்லாம் உரைத்திடவே
அழகியல் மாற்றத்தால்
அழிந்துவரும் பூமியில்


நிலவியல் தேற்றத்தில்
நிபுணத்துவம் பெற்றவரும்
உளவியல் மாற்றத்தால்
உணர்ந்துவிட்டார் இப்பொழுது


அலைகடலின் நீருயர
அழிவைநோக்கி மாலத்தீவு
விலைபலவும் கொடுத்தோமே
வேதனைக்கு ஏதுதீர்வு


கலைபலவும் தான்வளர
மலைபலவும் மண்உடைத்தோம்
சிலைபலவும் செய்துவித்தோம்
சிந்தைகளால் மலைகொய்தோம்


உலைபலவும் அமைத்துவைத்து
உயிருக்குலை தினம்வைத்து
கொலைபலவும் புரிகின்றோம்
கொதிக்காதா இந்தபூமி



முல்லைக்குத் தேர்ஈந்த
முன்னோனும் இன்றிருந்தால்
முழம்முல்லை மூன்றெண்டா
விலைபேசி விற்றிருப்பான்


இயற்கையின் கொடியிலே
இதயத்தைக் காயவைத்தால்
செயற்கையெல்லாம் ஓடிவிடும்
செழும்பசுமை வேர்தழைக்கும்


வளமைமிகு வாழ்வென்றால்
வசந்தங்கள் வந்துசேரும்
வாழ்வுமட்டும் போதுமென்றால்
வளம்அழிந்து பார்மாளும்


சூடாகித் தெரித்தானே
சூரியனும் சிதறுண்டு
சுற்றிவரும் பூமியும்
சூடானால் பிளவுண்டு


காடாகிப் போனமண்ணில்
காணவில்லை பசுமையின்று
மேடாகிப் போகிறது
மேகம்கூட நீர்வறண்டு


காத்திடுவோம் தலைமுறைகள்
காலமெல்லாம் பசுமைகாண
பூத்திடுவோம் பசுமையாக
பூவுலகம் புதுமைகாண .

திங்கள், 30 நவம்பர், 2009

உயிர்வலி.


அன்னை பெற்றெடுத்த அன்பின்வலி
ஆண்மையை வென்ற பெண்மையின்வலி
இன்பத்தில் நின்ற உண்மையின்வலி
ஈன்ற பொழுதில் உவகையின்வலி
உயிர்பெற்று வந்த ஊணுடலின்வலி
ஊர்போற்ற வேண்டிய மானுடலின்வலி
எவ்வலியும் அறியாத பூ மடலின்வலி
ஏந்திழையால் நீர்சொரிய உயிர்தலின்வலி
ஐம்பெரும் பூதங்களை அறிதலின்வலி
ஒப்பனைகள் இல்லாத முகிழ்தலின்
ஓர்நாளும் சொல்லாத பகிர்தலின்வலி
ஔவியம் பேசாத நெகிழ்தலின் வலி .

ஞாயிறு, 29 நவம்பர், 2009

பரிமாற்றம்.

வள்ளுவன் சொல்லாத
வாழ்வியல் நெறியா
ஔவை சொல்லாத
அமுதமான மொழியா

கம்பன் இயற்றாத
காவிய ரசமா
பாரதி பாடாத
பார்யுகப் புரட்சியா

படைத்தவைகள் இங்கே
பரிமற்றம் பாத்திரத்திற்கு
ஏற்ற உருமாற்றம்

நடையை மாற்று
என்றொரு நண்பர்
அடியை மாற்று
என்றொரு அன்பர்

பரிமாற வந்த
பதார்த்தங்களே
படைத்தவைகள் எல்லாம்
எதார்த்தங்களே

அன்னப் பறவையின்
நடையொரு அழகு
சின்னப் பறவையின்
சிறுநடை அழகு


வண்ணக் கிளியின்
வாய்மொழி அழகு
சின்னக் குழந்தையின்
தேன்மொழி அழகு

எண்ணக் குவியலின்
எல்லாமே அழகு
முதலில் நீ பரிமாறப் பழகு.

தாய் முகம் .

கற்றைக்குழல் முடித்துக்
காலையிலே விழித்திடுவாள்
சற்றேனும் ஓய்வின்றி
சலசலத்து உழைத்திடுவாள்


பற்றவைத்த அடுப்பினிலே
பலகாரம் செய்திடுவாள்
விற்றஒற்றைப் பணத்திலே
விறகுகளை வாங்கிடுவாள்


கற்றவித்தை எதுவென்றால்
கண்ணீரைச் சொரிந்திடுவாள்
குற்றமற்றத் தாயுள்ளம்
குறையேதும் கண்டதில்லை


அற்றைத்திங்கள் வெண்ணிலவும்
ஆழகில்லை அந்நாளில்
ஒற்றை நிலவாகி
ஒளிவீசிச் சென்றாயே


நெற்றியில் நீர்வடிய
நெருப்பூட்டிச் சமைத்தாயே
வெற்றியைக் காணுமுன்னே
வெந்தணலில் வெந்தாயே


பட்டதுயர் கொஞ்சமல்ல
பட்டபாடு என்னசொல்ல
சுட்டெரிக்கும் அகல்விளக்கில்
சூடுபட்டு நின்றபோது


பட்டறிவு வேண்டுமென்று
பாடம்சொல்லிச் சென்றாயே
சட்டமிட்டு உன்வடிவை
சாமியென வணங்கும்போது



எரிகின்ற எள்விளக்கில்
என்தாயின் ஆழகுமுகம்
தெரிகின்ற தேவதையின்
தேன்சிந்தும் நிலவுமுகம்.

வெள்ளி, 27 நவம்பர், 2009

தொலைந்த நாட்கள் .


நிலவொளியின் முற்றத்தில்
நீலவானம் பார்த்திடவே
பலகதைகள் பேசிவந்த
பசுமையான காலமது


இருள்வந்து மூடிவிடும்
இனிமையான பொழுதினிலே
அருள்பொங்க அந்தரத்தில்
அழகுநிலா பவனிவரும்


ஒளிவீசும் அம்புலியை
ஒப்பனைகள் செய்திடவே
வெளியெங்கும் வீதியிலே
வெள்ளிகளும் ஊர்வலமாய்


கருமைபூண்ட இரவதுவும்
காண்பதற்கே ஆவல்தூண்டும்
வருமைகொண்ட மண்வீட்டில்
வாய்க்கவில்லை மின்சாரம்

மண்ணெண்ணை விளக்கொளியில்
மகிழ்வோடு கதைபடிப்போம்
தன்னொளியைக் குறைக்குமட்டும்
தளராமல் விழித்திருப்போம்


துன்பமில்லை அந்நாளில்
தொலைதிருந்தோம் கவலையெல்லாம்
இன்பமான அனுபவத்தை
இதயத்தில் சுமந்திடவே


பொருள்தேடி புறப்பட்ட
புதுயுக வாழ்வினிலே
இருள்தந்த அவ்வெளிச்சம்
இன்னாளில் கிடைத்திடுமா .

வியாழன், 26 நவம்பர், 2009

மாவீரர் நாள் .




அகிம்சை வழிகண்ட
அண்ணலின் வழிநின்று
உண்ணாமல் விரதமிருந்து
உயிர்நீத்த உத்தமனாம்


திலீபனின் நினைவாக
ஏற்றிவைத்த தீபமிது
கொழுந்துவிட்ட சுடரதுவும்
குளிரவில்லை இன்றுவரை


உரிமையென்ற உணர்விற்காக
தியாகமாகத் தன்னுயிரை
தாரைவார்த்த வேங்கைகளின்
நினைவுபோற்றும் நாளிதுவே



அண்ணனவர் உரையாற்ற
ஆண்டாண்டு எழுச்சியுற்று
மாண்டவர்கள் புகழ்பாடும்
மாண்புமிகு பெருநாளாம்


புதைக்கப்பட்ட மனிதரெல்லாம்
புகழோடு மறைவதில்லை
விதைக்கப்பட்ட இவர்தியாகம்
வீணாகப் போவதில்லை


வரலாற்றுப் பக்கங்களும்
வன்னிநிலப் புகழ்பாடும்
வணங்கிடுவோம் இன்னாளில்
எழுந்துவரும் எம்மினமே

துடைத்தொழிக்கத் துணிந்துவிட்ட
துன்மார்க்கக் குணம்படைத்த
தருக்கர்களின் தலைநெரித்துத்
தளைத்திடுவோம் ஓர்நாளில்

பொறுத்திருப்போம் புலிசீரும்
பொய்யாகப் போவதில்லை
போற்றிடுவோம் வீரர்களை
மாவீரர் திருநாளில்.

வெள்ளி, 20 நவம்பர், 2009

மொழியும் விழியும் .


கண்ணிருந்தும் குருடரென கல்லாதார் நிலைபோக்க
எண்ணிரெண்டு வயதினிலே ஏற்காத இளங்கல்வி
தமிழ்வழியே நாம்கற்றால் தன்மானம் வளருமென்று
தமிழவேந்தர் புரட்சிக்கவி தரணிக்கே முழங்கிட்டார்

விழிபோல எண்ணிடவே விழிப்புடன் மொழிகாத்தால்
பழிபோகும் நடைபோட பாதையிலே பூமலரும்
யாமறிந்த மொழிகளிலே யாரறிந்தார் இதுபோன்று
பாமரனும் அறிந்திடவே பாரதியும் இனிதென்றார்


முருகென்றால் அழகென்று முருகவேல் முன்னிறுத்தி
அருகிடவே அந்நாளில் அழகுதமிழ் செய்வித்தார்
கடைவிரித்து காசுஎண்ணும் கலிகால உலகத்தில்
குடைவிரித்து மறைத்தாலும் குலம்காத்துத் தமிழ்வளரும்


பொய்யாமல் போற்றுவித்த பொதுமறையாம் வள்ளுவத்தை
கொய்யாத மனங்களில் கொழுந்தாக துளிர்வித்தால்
மொழிவளரும் விழிபுலரும் மேன்மையுறும் தமிழினமே
மொழிதானே முகவரிகள் விழித்துக்கொள் தமிமனமே .