செவ்வாய், 28 அக்டோபர், 2014

பால்விலை உயர்வு



பால் விலை உயர்வு
கட்டிப்போட்ட கொட்டகையில்
கால்நீட்டிப் படுத்திருந்தோம்
கன்னுக்குட்டி கயிற்றவிழ்க்க‌
கணப்பொழுதில் எழுந்துநின்றோம்
வாட்டமில்லாக் கொட்டகையில்
வால்நீட்ட முடியலையே
கூட்டமாகக் கிளப்புனீங்க‌
குதுகுலமா புறப்பட்டோம்
வயல்வரப்பக் காட்டூவீங்க‌
வக்கனையா மேயாலாமுனு
வாயில்லாச் சீவனுங்க
வரிசையாக வந்தோங்க‌
சாலையில போகையில
சத்தியமாத் தெரியாது
மறியல் செய்யப்போறோமுனு
மனுசப்பய சொல்லலையே
விலையேத்த வேணுமுனு
விண்ணதிரக் கத்துனீங்க‌
கலயத்துலக் கரந்தபால‌
சாலையில ஊத்துனீங்க‌
பசியால வந்தகன்னும்
பாலப்பாத்து ஏங்குது
பச்சப்பிள்ள பாதிபேரு
பாலில்லாம தூங்குது
பாலோடு தண்ணிசேத்து
பணங்காசு சேத்தீங்க
பாடையில போகும்வரை
பொருளாதாரம் பார்த்தீங்க‌
ஒரேஒரு கேள்விமட்டும்
உங்ககிட்ட கேட்கிறேன்
என்பால விலையேத்த
நீங்களெல்லாம் யாருடா
கட்டிலில படுத்தாலும்
கட்டையில போனாலும்
கடைவாயில் ஊத்துற‌து
கடைசியாகப் பாலுடா.






 இவர்களெல்லாம்.


வணிகக் கூட்டத்திற்கு
வாசல்களைத் திறந்துவைத்தார்
தனியே பிரித்தாண்டு
தாழ்பணிந்து விருந்துவைத்தார்

மானவீரர்களை காட்டிவித்து
மனம் மகிழ்ந்தார்
ஈனப்பிறவிகளாய் இழிபிறப்பாய்
தொடர்கின்றார்

கொட்டிவைத்தச் செல்வங்களை
கொள்ளையிட்டுச் சென்றவர்கள்
விட்டுவைத்த வித்துக்களே
இத்தரையின் சத்ருக்களே

ஊழலென்னும் கறைபிடித்து
உள்ளமெல்லாம் சீழ்பிடித்து
காலமெல்லாம் பதுக்கிவைத்தீர்
கருப்புப்பணம் வங்கியிலே

காய்ப்பதெல்லாம் கனியுமென்று
இளவமரக் கிளிபோல‌
மாற்றமதை வேண்டியிங்கு
மையதனை விரலிலிட்டோம்

வாய்ப்பந்தல் வீரர்களும்
வரலாற்றுச் சூரர்களாய்
வாய்ப்பதனைப் பயன்படுத்தி
அரியணையில் ஏறிவிட்டார்

வாக்குறுதி தந்தவர்கள்
வாய்மொழிந்த வார்த்தையென்ன
ஆக்கமெல்லாம் செய்திடவே
அகழ்ந்திடுவோம் கருப்புப்பணம்

ஆச்சர்யமாய் இருக்கிறது
ஆள்பவரின் ஆய்வறிக்கை
கூச்சமின்றிக் குழப்புகின்றார்
கோடிகளின் வரிவிலக்கை

காக்கின்ற பூதங்களின்
கிணறுகளை வெட்டினராம்
மூக்குமட்டும் தெரிந்ததினால்
முரசறிந்தார் மூன்றுபேரை

முக்கியமாய் புள்ளிகளை
முடிந்தவரை தேடினராம்
சிக்கியவர் சில்லரைதான்
சிகரங்களைக் காணலையாம்

பார்க்கும்வரை பதுக்கிவைக்க‌
பாலகரா அவர்கலளெல்லாம்
யார்க்குமிங்கே தெரியுமடா
அரசியல்வாதி இவர்களெல்லாம்.

செவ்வாய், 21 அக்டோபர், 2014








      ஒளிவிளக்கு


     இல்லாமை இருள்நீங்கி
     இல்லத்திலே பொருள்நிறைய‌
     கல்லாமைக் காரிருளில்
     கல்வியெனும் மழைபொழிய‌


     வெள்ளாமை வயல்நிறைய‌
     விஞ்ஞானம் வானுயர‌
     பொல்லாமை நீங்கிடவே
     பூமியெங்கும் செழித்திடட்டும்
    
    
     கொல்லாமை நன்றென்னும்
     கொள்கையினைப் பற்றிடவே
     வல்லானைக் கண்டிடலாம்
     வானுயரச் சென்றிடலாம்


     கள்ளாமை அரக்கனெனும்
     கசடுகளும் அழிந்திடவே
     இந்நாளில் ஏற்றிடுவோம்
     இன்பமெனும் திருவிளக்கு

     எந்நாளும் எரிந்திடட்டும்
     இதயமதில் ஒளிவிளக்கு 


    அனைவருக்கும் என் இதயங்கனிந்த‌
    தீபாவளித்திருநாள் நல்வாழ்த்துகள்
                      வாழ்க வளமுடன்.

சனி, 18 அக்டோபர், 2014




குழந்தையுடன் ஒருநாள்


புலருகின்ற நாளெல்லாம்
புன்னகையாய் கழிந்திருக்க‌
வளருகின்ற குழந்தையுடன்
ஒருநாளைக் களி(ழி)த்திருப்போம்

இயந்திரமாய் மனிதரெல்லாம்
இயங்குகின்ற வேளைதனில்
உறங்கிடவும் நேரமின்றி
ஓடிஓடி தினம்களைத்தோம்

இல்லறத்தின் மகிழ்சிக்காக
இயன்றளவு நாம்உழைத்தோம்
உள்ளத்திலே ஒருநாளும்
மகிழ்வுண்டா சொல்லிடுவீர்

கள்ளமில்லாக் கடவுளினைக்
கலியுகத்தில் கண்டிடலாம்
வெள்ளையுள்ளம் கொண்டதினால்
குழந்தைகளைச் சொல்லிடலாம்

பிள்ளைநிலா கண்திறக்கும்
பிரியமான வேளைதனில்
மழலையது வாய்திற‌ந்து
அம்மாவை அழைத்திருக்கும்

குவளையத்தில் கொடுமையதாம்
பொல்லாத அடிமையதாம்
அவல‌த்திலே பெருஅவலம்
அடிவயிற்றுப் பசியதுவாம்

அதையறிந்து அம்மாவும்
அன்புடனே அமுதளிப்பாள்

கும்பியது நிரம்பிவிடின்
குதூகளிக்கும் குழந்தையது
எம்பிஎம்பிக் குதித்திடுமாம்
எமனைக்கூட மிதித்திடுமாம்

கோகுலத்தில் கண்ணனவன்
கோமுகியைக் கொன்றதுபோல்
தன்பசியும் அடங்கியதும்
தானாகச் சிரித்துவிடும்

கடைவாயில் வழிந்திருக்கும்
கற்கண்டுப் பாலமுதை
அடடடடாக் கள்வனென‌
அன்போடு துடைத்திடுவாள்

படைதிரட்டும் மன்னவரும்
பால்முகத்தைக் கண்டுவிடின்
உடைவாளை உருவிடவே
ஒருகணமும் திகைத்திடுவார்

கடைக(ன்னி)ண்ணிப் பாவையரின்
கனிவாயின் இதழ்ச்சுவையும்
மழலையதன் சிரிப்பொலியில்
மன்றாடித் தோற்றுவிடும்

குழலிசையும் யாழிசையும்
இனிதில்லை இங்கேதான்
மழலையது வாய்திறந்தால்
மகிழ்ச்சியது அங்கேதான்

பொக்கைவாய் பூபூக்கும்
பொதிகை மலைச்சாரலெனெ
தக்கைவாய் தமிழ்பேசத்
தாயுள்ளம் களித்திருக்கும்

நண்பரென்றும் பகைவரென்றும்
நாள்கிழமை இதுவென்றும்
கண்திறந்த நாள்முதலாய்
கடவுளுக்குத் தெரியாது

உள்ளதனைக் காட்டுகின்றக்‌
கள்ளமில்லாக் கண்ணாடி
பிள்ளைகளே இவ்வுலகில்
கடவுளுக்கும் முன்னோடி

படைத்தவனும் காத்தவனும்
பாருலகை அழித்தவனும்
பட்டபாடு அறிவீரா
அனுசுயாவைத் தெரிவீரா

பதிவிரதைப் பத்தினியாம்
அனுசுயா தேவியரைப்
பரதேசிக் கோலங்கொண்டு
அனுகினர் மூவருமே

ஆடையின்றி அமுதூட்ட
அழைத்தஅந்த மூர்த்திகளைக்
கீர்த்தியினால் குழந்தகளாய்
மாற்றிவிட்டாள் தந்திரத்தால்

கண்கலங்கி தேவியர்கள்
மன்றாடிக் கேட்டதினால்
குழந்தைகளைக் கடவுள்களாய்
கனிவோடு மாற்றிவிட்டாள்

படைத்தவனும் தன்நிலையை
மறக்கவைத்த நிலையதுவே
பாருலகில் பெருமகிழ்ச்சி
மழலையெனும் பெருமகிழ்வே

கையசைத்துக் காலசைத்துக்
கொஞ்சும் மொழிபேசிவிடும்
கைபிசைந்த சாதமதை
சந்தனமாய் பூசிவிடும்

பிஞ்சுவிரல் அஞ்சுகமாய்
நெஞ்சத்திலே தீண்டிவிடும்
வஞ்சிகளின் மஞ்சமது
வாசல்படித் தாண்டிவிடும்

கொஞ்சமல்ல குழந்தையின்பம்
கோடியுண்டு சொல்வதற்கு
நெஞ்சம் விண்டுபோகுதிங்கே
நீதிஎங்கு சென்றிருக்கோ

பஞ்சமென்று குழந்தைகளைப்
பரிதவிக்க வைப்பவரும்
வஞ்சங்கொண்டு குழந்தைகளை
கொன்றொழிக்கும் பாவிகளும்

ஒன்றிணைந்த கொடுமையடா
ஈழத்து நிலமையடா
கருவறுக்க ஒன்றிணைந்த
கருங்காலிக் கூட்டங்களே

நீபெற்ற பிள்ளைகளை
ஒருநிமிடம் நினைப்பாயா

இசுரேலும் ஆப்கானும்
இதுகாறும் மட்டுமல்ல‌
புவியெங்கும் பூக்களென்னும்
குழந்தைகளைக் கொய்யாதீர்

தீச்சுடராய் திருவிளக்காய்
தழைத்துவரும் தலைமுறையை
தீக்குச்சி அடுக்குகின்ற‌
தவறிழைக்கச் செய்யாதிர்

குழந்தையென்னும் தெய்வங்களே
இவ்வுலகில் வெகுமானம்
குழந்தைகளின் சம்பளந்தான்
மறக்கவொண்ணா அவமானம்

மனஉளைச்சல் கொண்டவரும்
மருத்துவரைக் கண்டவரும்
பணம்பெருத்து உடல்கொழுத்து
பெரும்புள்ளியாய் நின்றவரும்

தினம்உழைத்து உடல்இளைத்து
துரும்பாகிப் போனவரும்
மனம்இனிக்க வேண்டுமென்றால்
மழலைகளைக் கொஞ்சிடுவீர்

புன்னகையாய் ஒருநாளைக்
குழந்தையுடன் நாம்களித்தோம்
உள்ளமதைக் குழந்தையாக்கி
வரும்நாளில் மகிழிந்திருப்போம். ‌‌

















சொந்தம்


கடலுக்குச் சொந்தமெனக்
கரைஅலையைச் சொல்லலாமா
படகுக்குச் சொந்தமெனப்
பாய்மரமும் எண்ணலாமா

புடலுக்குச் சொந்தமெனப்
புவியதனைச் சொல்லலாமா
படலுக்குச் சொந்தமெனப்
பாகற்காய் எண்ணலாமா

குடலுக்குச் சொந்தமெனக்
கொடும்பசியைச் சொல்லலாமா
திடலுக்குச் சொந்தமெனத்
திரள்வோரும் எண்ணலாமா

மடலுக்குச் சொந்தமென
மனமதனைச் சொல்லலாமா
குடமுழுக்குச் சொந்தமெனக்‌‌
கோபுரங்கள் எண்ணலாமா

கடவுக்குச் சொந்த‌மெனக்
காலமதைச் சொல்லலாமா
நடவுக்குச் சொந்தமென‌
நாற்றாங்கால் எண்ணலாமா

உடலுக்கு உயிர்கூட
ஒருநாளில் சொந்தமில்லை
உடனிருக்கும் உறவுகளே
உங்களுக்கு எந்தநிலை

கடனாக இவையாவும்
கடவுளவன் தந்தவினை
அடப்போடா காத்திருக்கு
அறுவடைக்கு இந்தத்தினை.











அடைகாத்தாய்


உடற்சூட்டை உள்ளிறக்கி
அடைகாக்கும் உயிர்கோழி
இடர்பாட்டை எதிர்கொண்டு...
எழுச்சிகண்டாய் நீ வாழி


இருபத்தியொரு நாளில்
குஞ்சுகளைப் பொரித்திடுமாம்
இருபத்தியொரு நாளில்
மீண்டுவந்தாய் சரித்திரமாய்

ஊழலென்னும் வழக்கிற்கா
உன்னையவர் அடைத்துவைத்தார்
உத்தமரா உண்மையிலே
உன்மேலே வழக்குரைத்தார்

காலமம்மா கலங்காதே
கலிகாலம் அப்படித்தான்
தங்கத்தையே தரம்பார்க்க‌
உரசிடுவார் இப்படித்தான்

புடம்போட்டத் தங்கமென‌
புதுப்பொழிவாய் வந்திடுவாய்
தடம்பதித்துத் தரணியிலே
தங்கத்தாரகையே மின்னிடுவாய்.


புதன், 6 நவம்பர், 2013

மங்கள்யான்









செவ்வாயால் தோசமென்று
செப்புகின்ற சோதிடமும்
அவ்வாயில் அமைத்ததன்று
அதற்குமொருப் பரிகாரம்

கொவ்வாயாய்ச் சிவந்துநிற்கும்
குமரிகளும் கோடியுண்டு
கொய்வதற்குக் குமரரில்லை
கொடுமையடா வகுத்தஎல்லை

இருவருக்கும் செவ்வாயா
இணைத்திடுவார் மங்களமாய்
இதுகாறும் ஒலித்தக்குரல்
இதயத்திலே வெங்கலமாய்

செவ்வாயில் நாள்குறித்துச்
செலுத்திவிட்டார் விண்கலத்தை
சேமமுறச் சென்றடையும்
செப்பிடுவார் நம்பலத்தை

செவ்வாயில் பொருள்வாங்கச்
செல்வமெல்லாம் பெருகிடுமாம்
செவ்வாயில் சென்றுவாங்கச்
சந்த‌திகள் மருகிடுமாம்

மங்களமாய்ப் பெயர்வைத்து
மண்ணுலகம் தாண்டிவிட்டோம்
மதுசூதனன் திருவடியில்
மண்டியிட்டு வேண்டிவிட்டோம்

நேசமென்று ஒன்றிருந்தால்
நெருங்கிடலாம் எவ்வாயும்
சுவாசம்வேண்டிக் காத்திருக்கு
சுத(ம)ந்திரமாய் செவ்வாயும்

வாசம்செய்யச் சென்றிடுவோம்
வான்வெளியில் தோழர்களே
தோசமென்று ஒன்றுமில்லை
துரத்திடுவோம் வீணர்களை

(செவ்வாய்க் கிழமை செவ்வாய் ஓரையில் செவ்வாய் கிரகத்திற்கு மங்கள்யான் என்ற செவ்வாய் விண்கலம் அனுப்பப்பட்டது வாழ்த்துகள் மெய்ஞான விஞ்ஞானிகளே)

வியாழன், 18 ஜூலை, 2013

நீவீர் வா(லி)ழி



தரைமேல் பிறக்கவைத்தான்
எனத் திரைத்துறை
நுழைந்தவரே

நரைகூடி நலமெய்தி
நற்புகழில் கரைந்தவரே

இளமை துள்ளும்
பாவரியால் இறுதிவரை
நீர் இனித்தாய்

முதுமையது வந்தபோதும்
முத்தமிழில் முக்குளித்தாய்

கண்ணனுக்குக் காப்பியமாய்
கவிபடைத்த ரெங்கராசர்

சொன்னவுடன் கவிவடிக்கும்
சொக்கநாதத் தமிழ்நேசர்

கவிஉலகில் துரோணராய்
களம்கண்ட வேங்கையே

செவிகுளிரச் செந்தமிழால்
சிவந்துநின்ற கங்கையே

வாய்நிறையத் தாம்பூலம்
நீர்தரிக்கும் வேளையிலே

பாய்விரிக்க ஓடிவரும்
பைந்தமிழும் உன்னிடமே

நோய்தொற்றிப் போனதாக‌
செய்தியினால் அறிந்துகொண்டேன்

நெஞ்சமது பொறுக்கவில்லை
நினைவஞ்சல் செலுத்திடவே

வஞ்சனானக் காலன்உன்னை
வழிஅனுப்பி வைத்தானோ

வானுலகம் கவிகேட்க‌
வாலிஉன்னை அழைத்தானோ

எதிர்பவரின் பலமெல்லாம்
எடுத்துக்கொள்ளும் பெயர்வைத்தாய்

எதிர்ப்பதற்கு ஆளில்லை
என்றிடவா உயிர்பி(ம‌)ரித்தாய்

உதித்துவரும் கதிரவனாய்
உன்புகழும் நிலைத்திருக்கும்

மதிப்பறிந்து போற்றுகிறேன்
மண்ணுலகில் நீவீர் வா(லி)ழி.


      

வெள்ளி, 12 ஜூலை, 2013

வி(அ)ழித்துவிடு.



ஆதியிலே ஆடையின்றி
ஆடுமாடாய் திரிந்த‌வனே
அன்னையவள் ஈன்றபோதும்
அம்மணமாய் பிறந்தவனே

பாதைபல கடந்துவந்து
பகுத்தறிவு உற்றவனே
பாவங்களைச் சுமந்துநின்று
பலி(ழி)பாவம் பெற்றவனே

சாதியென்ற பெயரைச்சொல்லி
சண்டைபல புரிபவனே
நீதியதை அறியாமல்
நேசம்கெட்டுத் திரிபவனே

ஈன்றெடுக்கும் பெண்சாதி
இடுப்பொடிக்கும் ஆண்சாதி
சான்றெடுத்தால் சாதியிலே
சாட்சிசொல்லும் இருசாதி

இட்டவனோ உயர்சாதி
இடாதவனே இழிசாதி
குற்றமற்றக் குணத்தினாலும்
குறிப்பெடுப்பார் சாதியினை

உழைப்பினிலே சாதிவைத்து
உண்மைதனை மறைத்தாயே
பிழைப்பதுவாய் ஆனதினால்
பெருங்கொடுமை செய்தாயே

தொட்டதற்கும் தீட்டுயென்று
துயரக்கதை சொன்னவனே
கூட்டமாக சாதியினை
குழப்பம்செய்ய வளர்த்தவனே

திட்டமிட்டுத் தீட்டிவைத்த
தீமையான சாதியினை
ஏட்டினிலே எடுத்துவிடு
ஏற்றம்பெறெ வி(அ)ழித்துவிடு.

புதன், 26 ஜூன், 2013

சீனா தானா.







மஞ்சளான காமாலை
மனிதருக்கு வந்துவிட்டால்
கொஞ்சமேனும் தாமதிக்கா
கொடுக்கவேண்டும் அரும்மருந்தை

வஞ்சமான சீனதேசம்
வல்லரசாய் ஆகவேண்டி
கொஞ்சநஞ்சம் செய்யவில்லை
கொடுஞ்செயல்கள் வையகத்தில்

தரம்குறைந்த பொருளனைத்தும்
தகைவில்லாமல் செய்துவித்து
நிரந்தரமாய் வணிகச்சந்தை
நிர்மூலம் ஆக்கிவைத்தார்

வரம்தருமே சாமியென்று
வல்லூறு சிங்களனும்
நிரந்தரமாய் தங்கிடவே
நேசக்கரம் நீட்டிவிட்டான்

கருவறுத்தக் கதைதனைதான்
கண்ணீராய் கவிவடித்தோம்
அருவறுத்த பெளத்தத்தினால்
அனுதினமும் உயிர்துடித்தோம்

பாதமதில் சீழ்பிடித்தால்
பக்குவமாய் நீக்கவேண்டும்
சேதமின்றி சீக்கிரமாய்
சேமநலம் காக்கவேண்டும்

பாரதத்தின் பாதத்திலே
படைபலத்தை நிறுத்திவிட்டான்
பாரமென்று மீனவரை
பாவியவன் விரட்டிவிட்டான்

சாரமின்றி சகலருமே
சலம்புகின்ற வேளையிலே
ஓரமாக இமயமதின்
உச்சந்தலை உலுக்கிவிட்டான்

நேரமில்லை இந்தியனே
நீண்டதுயில் களைத்துவிடு
தூரமில்லை சாவுனக்கு
துணிந்துவிடின் பிழைத்துவிடு.

(லடாக் பகுதியை சீனராணுவம் கைப்பற்றியபொழுது என்னுள் பற்றியது)

செவ்வாய், 25 ஜூன், 2013

பெரும்பி(ம)ழை








 பெரும்பி(ம)ழை


மேகமது வெடிப்புண்டு
மேவியதோ மாமழையும்
தாகமதைத் தீர்த்திடவே
தரணியிலே மழைபொழியும்

தேகமதில் மூன்றுபங்காய்
தேக்கிவைத்த நீரதனை
யாகமது  வளர்த்திங்கு
யாசகமும் செய்கின்றோம்

மோகமது கொண்டிடவே
கருக்கொண்ட முகில்கூட்டம்
யூகமது இல்லாமல்
உதிர்த்த‌தன்றோ உத்ரகாண்டில்

வேகமாகப் பாய்ந்துவந்த
வேங்கையான வெள்ளத்தினால்
வேதனையாய் மக்களெல்லாம்
வியனுலகை எய்துவிட்டார்

விதியிதுவா எண்ணிடுவீர்
வாழுகின்ற மானிடமே
நதிகளெல்லாம் ஒன்றிணைத்து
நாடெங்கும் பாய்ச்சிவிட்டால்


சதிஇதுபோல் நடந்திடுமா
சங்கரனைப் பழித்திடுமா
மதியுகமாய் மண்ணுலகில்
நதிகளெல்லாம் ஒன்றிணைப்போம்

மறுபடியும் மழைபொழிந்தால்
மரணமதின் நடையடைப்போம்.



ஞாயிறு, 26 மே, 2013

காதலெனப்படுவது










பார்வையின் பரிமாற்றத்தில்
பதியமிடப்பட்ட உணர்வு

எனக்காகவும் உனக்காகவுமான‌
எதிர்பார்ப்புகளுக்கான உறவுகளின்
காத்திருப்புகளுக்கிடையே

நான் உனக்காகவும்
நீ எனக்காகவும்
காத்திருப்பதற்கான‌
காரணப் பெயர்

திரவியத் தேடலுக்கும்
திமிலோகப்பட்ட வாழ்க்கையின்
தீராத ஓட்டத்தினூடேயும்
ஏற்படும் திட்டமிடாத்திருப்பம்

இரவோடு பகலதும்
இமயமாய் தோன்றிடும்
உறவோடு பகைவந்து
ஊமையாய் நின்றிடும்

பருவத்தின் வாசலில்
பசலையும் படர்ந்திடும்
பார்ப்பவை யாவுமே
பாரமாய் தொடர்ந்திடும்

உயிரதன் எடைதனை
உணர்ந்திடக் கூடலாம்
ஒவ்வொரு நாளதும்
உடலது வாடலாம்

நான்கறை இதயமும்
நான்மறை ஆகலாம்
நாணமும் வெட்கமும்
நலிந்தே போகலாம்

ஏக்கமும் தாக்கமும்
இருவருக்கும் உண்டெனில்
இதுதான் காதலாம்
இதயத்தால் மோதலாம்.       

அஞ்சலி



அஞ்சலி

சிங்கநாதக் குரலொலியில்
சங்கநாதத் தமிழ்முழங்கும்
வெங்கலத்துச் சுடராகி
வேணுகானம் இசைத்தமகன்

பொங்கிவரும் புணல்அழகாய்
பொதிகைமலைத் தமிழழகாய்
எங்கெங்கினும் ஏழிசையால்
இசைத்தமிழை வளர்த்தமகன்

சுந்தரமாய் தமிழ்புழங்கி
மந்திரமாய் அதில்விளங்கி
சந்ததிகள் கடந்திடினும்
சரித்திரத்தை விதைத்தமகன்

பரமனுக்கும் குரல்கொடுத்தாய்
பாமரனின் துயர்படித்தாய்
வாமனனாய் உருவெடுத்து
வையகத்தில் இடம்பிடித்தாய்

எந்திரமாய் போனவரையும்
இளக்கிவிடும் குரலழகா
இங்கிருந்து போனதேனோ
இசைத்தமிழும் உரு(அழு)குதய்யா.


இறைவனடி சேர்ந்தவருக்கு 
இதயம் கனிந்த அஞ்சலி.

சனி, 29 டிசம்பர், 2012

அம்மா









பூப்பெய்து  நீராடி 
பூரித்து  நின்றபோது  
புனிதவதி  என்றழைத்துப் 
புன்னகையாய்  சொன்னார்கள் 

மாப்பிள்ளை  எனைப்பார்த்து
மணக்கோலம் கொண்டபோது
மாங்கல்யம் சூடிடவே 
மனைவி  ஆகிப்போனேன் 

புகுந்தவீட்டில்   மருமகளாய்
சீர்கொடுத்தத்  திருமகளாய் 
பலபெயர்கள்  எனக்குண்டு 
பட்டியலும்  கொஞ்சம்நீளும்

பள்ளியறைப்  படுக்கையிலே 
கணவனுக்குத்   தாசியாக 
பகல்பொழுதில்  வீட்டினிலே
பணிபுரியும்  வாசுகியாய் 


பேர்பெற்ற  போதிலும் 
பெரிதுவக்கவில்லை  நானும் 
யார்கொடுத்த  சாபமோ 
நீர்வடித்துச்  சொல்கின்றேன் 


ஊர்கொடுத்த  பெயர்என்ன
உண்மையிலே  தெரியுமா 
வேர்அறுந்த  சிறுக்கிக்கு 
வேறுபெயர்   மலடியாம்

என்சுரங்கண்ட  மார்பிரண்டும் 
பால்சுரக்க  வேண்டுமடா 
உன்விரல்தீண்டி   என்உயிரும்
பூப்பூக்க  வேண்டுமடா 


நான்எருக்குழியில்  போகுமுன்னே 
கருக்குழியை   நிறைப்பாயா 
என்அவப்பெயரைத்   துடைத்திடவே 
அம்மா  என்றழைப்பாயா.  
                          
                  

    

வியாழன், 12 ஜூலை, 2012

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு .



 

 

 

 

 

 

  ஊசிமுனை  இடம்கூட    

கிடையாது  என்றுசொல்லி 

வேசிமகன்  சிங்களனும்  

விரட்டுகிறான்  நம்மினத்தை 

 

வெந்தபுண்ணும்  ஆரும்முன்னே 

வேல்வந்து  பாய்ந்ததுபோல் 

சொந்தநாட்டில்  அகதிகளா 

சோதனைதான்  சாமிகளா 

 

வந்தவரை  வாழவைக்கும் 

வரலாறு  போதுமடா 

கந்தையாகப்   போகுமுன்னே 

கண்விழிக்க   வேணுமாடா 

 

 நிலமழித்து  நம்மினத்தை 

நிர்மூலமாய்  செய்ததுபோல் 

வளமழிக்க  அணையெடுத்து 

வன்முறைகள்   புரிகின்றார் 

 

காவிரியும்  கானல்நீராய் 

காணாமல்  போனதுபோல் 

நீர்விரியும்  பாதையெல்லாம் 

நெடுஅணைகள்   எழுந்திடுமோ 

 

கேரளமும்  வஞ்சனையால் 

கேடுகளைச்  செய்திடுமோ 

கேடுகெட்ட  காங்கிரசு 

கேள்விகளைக்  கேட்டிடுமா 

 

பாடுபட்ட   எம்மினமே 

பட்டதெல்லாம்  போதுமடா 

சூடுபட்ட  தமிழினமே 

சுரந்துயெழ வேணுமடா 

 

இத்தாலி   அறுந்ததிற்கு 

இத்தனை  தாலிகளா

அத்தாலி  ஆட்சியிலே 

அணைகளெல்லாம்  வேலிகளா 

 

விழித்திடுவாய்  தமிழினமே 

வாய்க்கரிசி  போடுமுன்னே 

ஒழித்திடுவீர்  ஒன்றிணைந்து 

உதவாக்(கறை)கரை  காங்கிரசை .    

                          

ஞாயிறு, 27 நவம்பர், 2011

பைந்தமிழில் நுழைந்துள்ள பார்த்தீனியத்தை ஒழிப்போம் .

நெல்லுக்கு இறைத்தநீர்
வாய்க்கால் வழிஓடிப்
புல்லுக்கும் ஆங்கே
புசியுமாம் . தொல்லுலகில் ,


புல்லானப் பலமொழியை
பூந்தமிழில் புகுத்தலாமோ
நெல்லான நம்மொழியின்
நெஞ்சத்தை உறுத்தலாமோ

விழிகளிலே பழுதென்றால்
வேறுவிழி பொருத்திடலாம்
தமிழ்மொழியில் பழுதென்றால்
எவ்வாறு தடுத்திடலாம்

ஒண்டவந்த பிடாரியெல்லாம்
ஊர்பிடாரியை விரட்டிடுமாம்
ஒண்டமிழின் புகழைக்கூட
அதுபோலக் கெடுத்திடுமாம்

அண்டவிட வேண்டாமே
அருந்தமிழைக் காத்திடுவோம்
வண்டமிழின் சோலைதனில்
வண்ணமாகப் பூத்திடுவோம்

தாய்மொழியும் நாய்மொழியும்
தரத்தினிலே ஒன்றிடுமா
வாய்மொழியாய் வந்ததெல்லாம்
வள்ளுவத்தை வென்றிடுமா

கற்றிடலாம் பலமொழிகள்
கற்பதிலே குறையுமில்லை
நற்றமிழில் நடவுசெய்தல்
நியாயமென்ன சொல்லிடுவீர்

உண்டிதனில் கலப்படங்கள்
உண்டவர்க்கு நஞ்சாகும்
அண்டிவரும் அயல்மொழியால்
அனைத்தமிழ் அழகுகெடும்

செங்குருதி ஓட்டத்திலும்
சிலவேறு பிரிவுஉண்டு
அங்கேனும் கலப்படத்தால்
அப்பொழுதே உயிர்பிரியும்


பைந்தமிழில் நுழைந்துள்ள
பார்த்தீனியக் களையெடுப்போம்
நைந்துவிடா நம்தமிழை
நாள்தோறும் நாம்வளர்ப்போம் .

ஞாயிறு, 13 நவம்பர், 2011

நூலகம் ஓர் ஆலயம் .

நூலகமும் ஆலயமும்
ஒன்றிணைந்த திருவடிவாய்
வேலனவன் தமிழ்மொழியை
வேய்ந்துவைத்த மன்னவராம்

ஞாலமெலாம் போற்றுகின்ற
ஞானமொழி சொன்னவராம்
காலமெல்லாம் கவிவடிக்கும்
வீரபாண்டித் தென்னவராம்

தலைமைக்கு முதல்வணக்கம்
தகையோர்க்கும் தலைவணக்கம்
கலைபடிக்கும் நூலகத்தின்
கதவுகளைத் திறப்போமா

ஆறில்லா ஊருக்கு
அழகதுவும் பாழென்று
அறிவுருத்திச் சென்றாளே
ஔவையவள் மூதாட்டி

ஊருக்கு அழகென்றால்
ஒருஆறு போதுமங்கே
தேருக்கு அழகென்றால்
தெய்வமது வேண்டுமங்கே

தெய்வங்கள் உறைந்திருக்கும்
திருவிடங்கள் பலவும்உண்டு
மெய்யதுவும் கோவிலாகும்
மேன்மையினை அறிந்திடுவீர்

பொய்மைதனை நீக்கிடவே
பொறையின்றி கற்றிடுவீர்
உய்வதற்கு முன்னாலே
உயர்வுநிலை எட்டிடுவீர்

கண்ணிற்குத் தெரியாத
கடவுளர்கள் கற்சிலையில்
மண்ணிலே உலவிவரும்
மகத்துவத்தை அறிவீரோ

அன்பே சிவமென்றால்
அறிவன்றோ தெய்வமாகும்
முன்பதனை வழிமொழிந்து
மூத்தவர்கள் சொல்லிவைத்தார்

அன்பினாலே அனுதினமும்
ஆலயங்கள் செல்வோரே
பண்பதனை அறிந்திடவே
பாடசாலை சென்றிடுவீர்

மலர்விட்டு மலர்தாவி
மகரந்தம் தனைநீவி
உலர்வதற்கு முன்னாலே
உள்கூட்டில் சேர்த்திடுமாம்

சிறுதேனி ஆனாலும்
சிந்தையெல்லாம் தினந்தேடல்
ஒருநாளும் சோர்வுயில்லை
ஒலித்திடுமே குறும்பாடல்

ஈயாத தேட்டையெல்லாம்
தீயவர்கள் கொள்வாராம்
ஈவதற்கு இங்குண்டு
இயன்றவர்கள் எடுத்திடுவீர்

திரட்டிவைத்த தேன்கூடாய்
திரவியங்கள் பலவுமுண்டு
புரட்சிகளின் வரலாறும்
புதையலாக இங்குண்டு

அறிவையெல்லாம் அடைகாக்கும்
ஆலயத்தைக் கண்டிடுவீர்
அறிந்தவர்கள் அதன்சிறப்பை
அனைவருக்கும் சொல்லிடுவீர்

புறமெல்லாம் நூற்பதற்கு
பூவுலகில் கோடியுண்டு
அகமதனை நூற்பதற்கு
நூலகமே தேவைஇன்று

அர்சனைகள் இங்குஇல்லை
அபிசேகம் தேவையில்லை
அனுமதியாய் சிறப்புச்சீட்டு
அலுவலர்கள் தருவதில்லை

சாதிமத பேதமில்லை
சடங்குகளும் நடப்பதில்லை
நீதிஒன்றே சாமிஇங்கு
நிந்தனைகள் ஏதுமில்லை

மதங்கள்கூட தடையுமில்லை
மனிதநேயம் சுடவுமில்லை
உதயமதை வேண்டுவோர்கள்
உளமுடனே சென்றிடலாம்

ஆலயமும் தொழுவதென்றால்
அதுவன்றோ சாலமாகும்
நூலகமும் ஆலயமே
நூல்படிக்கச் செல்லலாமா .

தீக்குச்சி .


அழிவி்ற்காகவே அடைக்கப்பட்ட
ஆச்சர்யக்குறிகள்

ஒற்றைக்காலில் படுத்துறங்கும்
ஒசாமா பின்லேடன்கள்

சிரசுகள் உரசப்படும்போதெல்லாம்
தீக்குளிக்கும் பே(சீ )தைகள்

கந்தகச்சுமை தலைக்கேறியதால்
கரியாகிப்போகும் கடன்காரன்கள்

க(இ)ல்லாத குழந்தைகளின்
களவாடப்பட்ட விரல்கள்

வரங்கள் சாபங்களானதால்
நிறங்கள் மாறிய மரங்கள்.

குப்பைத்தொட்டி .


கழிவுகளை மட்டுமே
கையேந்தும் கருணைஇல்லம்

கழிப்பறைக் கருவறைகளால்
கண்ணியமான காப்பகம்

பிச்சைக்காரர்களுக்கும் உணவளிக்கும்
அட்சயப் பாத்திரம்

பிறர்செய்த பாவங்களைச்
சுமந்துநிற்க தே(வை )வ
இந்த தூதன்.

பார்வை .


கொங்கை வனப்பதனில்
கோடிஇன்பம் கண்டிருந்தேன்

முல்லை இவளல்லோ
மோகத்தீ மூட்டினாளே

கள்ளைக் குடித்ததுபோல்
கலவிடவே ஆவல்கொண்டேன்

தொல்லை கொடுத்தாளே
தொலைவில் அவள் இருந்தாலும்

நெல்லைத் தூற்றியதால்
பறந்துவந்த பதரதுவும்

வெள்ளை விழியதனை
வேதனையில் ஆழ்தியதே

பிள்ளைப் பாலூற்ற
பிரிந்திடுமாம் வலியெல்லாம்

பல்லை இளித்துநானும்
பார்த்த அந்தப்பார்வையெல்லாம்

எல்லை தாண்டிடவே
எதார்த்தம் விளங்கியது .