ஞாயிறு, 7 ஜூன், 2009

தமிழ்வேள் கோ .சாரங்கபாணி

பாடுபட்ட பைந்தமிழர் ஏடுபோற்ற வைத்தவர்
நாடுவிட்டு உழைக்கவந்து நம்தமிழைக் காத்தவர்

சிங்கை எங்கும் தமிழ்முழக்கம் முரசறிவித்தவர்
கங்கை பொங்கும் கணித்தமிழை சிரசில் ஏற்றிவித்தவர்

வீதிஎங்கும் தமிழ் முழக்கம் வேண்டுமென்று சொன்னவர்
சாதிமங்க தமிழ்செழிக்க தன்னைநீராய் விட்டவர்


அடிமையென்று வாழாதிருக்க அரும்பாடுபட்டவர்
குடியுரிமை வாங்கச்சொல்லி குலம்தழைக்க வைத்தவர்


முகில்கருத்த தலைமுடியை பிடரிவரைக் கொண்டவர்
அகில்மணக்கும் அழகுமுகம் சுடரொளியைப் போன்றவர்


தேரோடும் திருவாரூர் திருமகனாய் வளர்ந்தவர்
போராடும் குணத்தாலே தமிழ்தேரை இழுத்தவர்


யாரோடும் பகைமை இல்லை நட்பாகப் பழுத்தவர்
வேரோடும் நான்கினத்தில் உப்பாக நிலைத்தவர்



சிந்தனையால் செழுந்தமிழை வேர்பிடிக்கச் செய்தவர்
கந்தனைப்போல் தமிழ்வேளாய் பேர்கொடுத்துச் சென்றவர்



நான்முகத்தான் நாவினிலே வீற்றிருப்பாள் வாணி
நான்கினத்தின் நடுவினிலே சோதியானார் சாரங்கபாணி .

அழகின் சிரிப்பு

ஆகாயப் பந்தலிலே ஆதவனின் பொன்சிரிப்பு
அழகுநிலா பவனிவர வெள்ளிகளின் மின்மினுப்பு

கார்முகில்கள் தீண்டலினால் மின்னலென கண்திறப்பு
பார்மகளின் மேனியிலே பசுமையான புல்விரிப்பு

மழைத்துளிகள் மண்ணில்வீழ நிலமகளின் சூல்நிரைப்பு
தழைத்திடும் தளிராலே தரணியெங்கும் புதுவனப்பு

புலர்ந்துவரும் காலையிலே புல்நுனியில் பனிச்சிரிப்பு
மலர்ந்துவரும் மலர்களில் வண்டுகளின் தேனெடுப்பு

கழனியிலே குலவையிட்டு நாற்றுநாடும் பயிர்விளைப்பு
உளந்தனிலே உண்மையிலே இதைக்கண்டா நம்சிரிப்பு


நெகிழிகளின் வழிவந்த பூக்கள்இன்று கடைவிரிப்பு
நெகிழ்கிறது நெஞ்சமெல்லாம் இயற்க்கையது திரைமறைப்பு


காவிஉடை கொண்டவருக்கும் காசுஎன்றால் கனிச்சிரிப்பு
ஆவிவிட்டு போனபின்பு அடங்கிவிடும் அதன்சிரிப்பு


காகிதப் பணங்களில் காந்திகொண்ட கவின்சிரிப்பு
காண்கின்ற மனங்களில் சாந்திபூண்ட அழகின்சிரிப்பு .