வெள்ளி, 20 நவம்பர், 2009

மொழியும் விழியும் .


கண்ணிருந்தும் குருடரென கல்லாதார் நிலைபோக்க
எண்ணிரெண்டு வயதினிலே ஏற்காத இளங்கல்வி
தமிழ்வழியே நாம்கற்றால் தன்மானம் வளருமென்று
தமிழவேந்தர் புரட்சிக்கவி தரணிக்கே முழங்கிட்டார்

விழிபோல எண்ணிடவே விழிப்புடன் மொழிகாத்தால்
பழிபோகும் நடைபோட பாதையிலே பூமலரும்
யாமறிந்த மொழிகளிலே யாரறிந்தார் இதுபோன்று
பாமரனும் அறிந்திடவே பாரதியும் இனிதென்றார்


முருகென்றால் அழகென்று முருகவேல் முன்னிறுத்தி
அருகிடவே அந்நாளில் அழகுதமிழ் செய்வித்தார்
கடைவிரித்து காசுஎண்ணும் கலிகால உலகத்தில்
குடைவிரித்து மறைத்தாலும் குலம்காத்துத் தமிழ்வளரும்


பொய்யாமல் போற்றுவித்த பொதுமறையாம் வள்ளுவத்தை
கொய்யாத மனங்களில் கொழுந்தாக துளிர்வித்தால்
மொழிவளரும் விழிபுலரும் மேன்மையுறும் தமிழினமே
மொழிதானே முகவரிகள் விழித்துக்கொள் தமிமனமே .