வியாழன், 18 ஜூலை, 2013

நீவீர் வா(லி)ழி



தரைமேல் பிறக்கவைத்தான்
எனத் திரைத்துறை
நுழைந்தவரே

நரைகூடி நலமெய்தி
நற்புகழில் கரைந்தவரே

இளமை துள்ளும்
பாவரியால் இறுதிவரை
நீர் இனித்தாய்

முதுமையது வந்தபோதும்
முத்தமிழில் முக்குளித்தாய்

கண்ணனுக்குக் காப்பியமாய்
கவிபடைத்த ரெங்கராசர்

சொன்னவுடன் கவிவடிக்கும்
சொக்கநாதத் தமிழ்நேசர்

கவிஉலகில் துரோணராய்
களம்கண்ட வேங்கையே

செவிகுளிரச் செந்தமிழால்
சிவந்துநின்ற கங்கையே

வாய்நிறையத் தாம்பூலம்
நீர்தரிக்கும் வேளையிலே

பாய்விரிக்க ஓடிவரும்
பைந்தமிழும் உன்னிடமே

நோய்தொற்றிப் போனதாக‌
செய்தியினால் அறிந்துகொண்டேன்

நெஞ்சமது பொறுக்கவில்லை
நினைவஞ்சல் செலுத்திடவே

வஞ்சனானக் காலன்உன்னை
வழிஅனுப்பி வைத்தானோ

வானுலகம் கவிகேட்க‌
வாலிஉன்னை அழைத்தானோ

எதிர்பவரின் பலமெல்லாம்
எடுத்துக்கொள்ளும் பெயர்வைத்தாய்

எதிர்ப்பதற்கு ஆளில்லை
என்றிடவா உயிர்பி(ம‌)ரித்தாய்

உதித்துவரும் கதிரவனாய்
உன்புகழும் நிலைத்திருக்கும்

மதிப்பறிந்து போற்றுகிறேன்
மண்ணுலகில் நீவீர் வா(லி)ழி.


      

வெள்ளி, 12 ஜூலை, 2013

வி(அ)ழித்துவிடு.



ஆதியிலே ஆடையின்றி
ஆடுமாடாய் திரிந்த‌வனே
அன்னையவள் ஈன்றபோதும்
அம்மணமாய் பிறந்தவனே

பாதைபல கடந்துவந்து
பகுத்தறிவு உற்றவனே
பாவங்களைச் சுமந்துநின்று
பலி(ழி)பாவம் பெற்றவனே

சாதியென்ற பெயரைச்சொல்லி
சண்டைபல புரிபவனே
நீதியதை அறியாமல்
நேசம்கெட்டுத் திரிபவனே

ஈன்றெடுக்கும் பெண்சாதி
இடுப்பொடிக்கும் ஆண்சாதி
சான்றெடுத்தால் சாதியிலே
சாட்சிசொல்லும் இருசாதி

இட்டவனோ உயர்சாதி
இடாதவனே இழிசாதி
குற்றமற்றக் குணத்தினாலும்
குறிப்பெடுப்பார் சாதியினை

உழைப்பினிலே சாதிவைத்து
உண்மைதனை மறைத்தாயே
பிழைப்பதுவாய் ஆனதினால்
பெருங்கொடுமை செய்தாயே

தொட்டதற்கும் தீட்டுயென்று
துயரக்கதை சொன்னவனே
கூட்டமாக சாதியினை
குழப்பம்செய்ய வளர்த்தவனே

திட்டமிட்டுத் தீட்டிவைத்த
தீமையான சாதியினை
ஏட்டினிலே எடுத்துவிடு
ஏற்றம்பெறெ வி(அ)ழித்துவிடு.