வெள்ளி, 27 நவம்பர், 2009

தொலைந்த நாட்கள் .


நிலவொளியின் முற்றத்தில்
நீலவானம் பார்த்திடவே
பலகதைகள் பேசிவந்த
பசுமையான காலமது


இருள்வந்து மூடிவிடும்
இனிமையான பொழுதினிலே
அருள்பொங்க அந்தரத்தில்
அழகுநிலா பவனிவரும்


ஒளிவீசும் அம்புலியை
ஒப்பனைகள் செய்திடவே
வெளியெங்கும் வீதியிலே
வெள்ளிகளும் ஊர்வலமாய்


கருமைபூண்ட இரவதுவும்
காண்பதற்கே ஆவல்தூண்டும்
வருமைகொண்ட மண்வீட்டில்
வாய்க்கவில்லை மின்சாரம்

மண்ணெண்ணை விளக்கொளியில்
மகிழ்வோடு கதைபடிப்போம்
தன்னொளியைக் குறைக்குமட்டும்
தளராமல் விழித்திருப்போம்


துன்பமில்லை அந்நாளில்
தொலைதிருந்தோம் கவலையெல்லாம்
இன்பமான அனுபவத்தை
இதயத்தில் சுமந்திடவே


பொருள்தேடி புறப்பட்ட
புதுயுக வாழ்வினிலே
இருள்தந்த அவ்வெளிச்சம்
இன்னாளில் கிடைத்திடுமா .