புதன், 18 நவம்பர், 2009

நீர்க் கூத்து.





பொன்னியவள் நடைபயின்று
பூமியெல்லாம் வளம்கொழிக்க
கன்னியவள் வலம்வந்தால்
கருணையுடன் நிலம்செழிக்க

பஞ்சமில்லை தமிழகத்தில்
பாவையவள் பாயும்வரை
கொஞ்சுமலை குடகதனின்
கொடுமுடியில் பிறந்தவளை

சினங்கொண்டு குறுமுனியும்
சிறைபடுத்திச் சென்றதாலே
மனமொடிந்து போனவளை
மாமருகன் அண்ணனவன்


தடம்மாறித் தவழவிட்டான்
தரணியிலே நீர்விரிய
குடமுனியின் கோபத்தாலா
கோட்டைவிட்டோம் காவிரியை


முன்னையொரு காலத்தில்
முகிழ்த்துவிட்ட தவறினாலா
பென்னிகுக் பிறப்பெடுத்து
பேறுபெற்றான் பூமியிலே


கொண்டபல செல்வமெலாம்
கொடுத்தானே அணைஎடுக்க
கண்டுமிவர் திருந்தவில்லை
காரணத்தை அறியவில்லை

இரக்கமில்லா இழிமனத்தார்
இயலாது என்றுரைக்க
மறத்தமிழன் என்றுசொல்லி
மாமாங்கம் இவர்நடிக்க


அடுக்கடுக்காய் ஆண்டுதோறும்
அரங்கேறும் நீர்க்கூத்து
தடுக்காமல் வந்திடுமா
தாகம்தீர்த்துச் சென்றிடுமா .

புயலான பூ.


கொடிகளில் பூத்து
கொய்து தொடுத்த
கொற்கை மலரல்ல


கொடியிடைக் கண்ணகி
கொற்றவை சூடிட
கோபமும் இதற்கில்லை


பணிந்த கால்களில்
அணிந்த போதும்
துணிந்திட மனமில்லை


நிலைகெட்ட போதிலும்
விலையிட்ட நிலையிலும்
வேதனை கொண்டதில்லை


உயிர்கொண்டு போனதால்
மயிர்கலைந்த மையினால்
ஏந்திய வேளையிலே


மகரந்தப் பரல்களாய்
மாணிக்கம் சிதறையில்
புயலான புரட்சிப் பூ

காப்பிய வடிவினில்
காலங்கள் போற்றிடும்
கண்ணகி காற்சிலம்பு .

மகாகவி பாரதியார் .




மகாகவி
பாரதியார்
பாரதி யார்?

பாலக வயதில் கலைமகள் பட்டம் பெற்றவர்
பார்ப்பன வீதியில் பகலவனாகிச் சுட்டவர்

எட்டைய புரத்திலே மொட்டாக மலர்ந்தவர்
எட்டாத உயரங்களை எட்டிவிட்டு உயர்ந்தவர்

பாக்களால் தேரோட்டிச் சாரதியானவர்
மாக்களாய் வாழ்ந்தவர்களுக்கு மனக்கிளர்ச்சி தந்தவர்

புலயனுக்கும் பூநூலை சூடிநின்ற தகையவர்
புரையோடியச் சாத்திரங்களை புனிதனாகிச் சாடியவர்

மண்ணடிமை பாரதத்தை மனம்காணா தகித்தவர்
பெண்ணடிமைச் சாக்காட்டைப் பெரிதாக வெறுத்தவர்

புதுமைப் பெண்களுக்கும் புதுவழியை வகுத்தவர்
புகழ்மாலைப் பூச்சூடி கவிமாலை தொகுத்தவர்

சுதந்திர வேள்விக்குச் சுடுகவிகள் புனைந்தவர்
சுயநலம் அல்லாது சூரியனில் நனைந்தவர்

சீட்டுக் கவிபாடி ஏட்டுக்கவி பாடியவர்
சிட்டுக் குருவிக்கும் வீறுநடை காட்டியவர்

காலனைப் சிறுபுல்லென நினைத்துத் துதித்தவர்
காலருகே வரச்சொல்லி அனைத்து மிதித்தவர்

நெருப்புக் கோலங்களை கண்களாகக் கொண்டவர்
மருப்பு வேழத்தையும் பண்களால் வென்றவர்

முறுக்கிய மீசையில் முகில்கருமை உண்டவர்
குறுக்கிய தேகத்திலும் சந்திரனாகி நின்றவர்

சண்டைக்காக கட்டாத முண்டாசு பிரியர்
சாதிகள் இரண்டென்ற சமத்துவ நெறியர்

சுட்டெரிக்கும் சூரியனையேத் திலகமாக இட்டவர்
சுதேச மித்திரனின் ஆசிரியப் பொறுப்பேற்றவர்

காதல் கவிதைகளும் கற்பனைகளும் பாடியவர்
கருப்பு அங்கியால் தேகத்தை மூடியவர்

காக்கைக் குருவிகள் எங்கள் சாதிஎன்றவர்
கண்ணனிடம் காதலாகிக் கசிந்துருகி நின்றவர்

நல்லதோர் வீணையாகிப் புழுதியில் கிடந்தவர்
நலிந்துவிட்ட சமுதாயத்தை புடம்போட வந்தவர்

சுதந்திரம் பெற்று விட்டோமென்று ஆனந்தக் கூத்தாடியவர்
நிரந்தரம் வெல்வது உறுதியென்று ஆணையிட்டுச் சொன்னவர்

வறுமையிலும் பெருமைகளைத் தொலைக்காதவர்
அருமைகளைச் சொல்லி யாசகம் கேட்டுப் பிழைக்காதவர்

புதுக்கவிதை பாதைகளுக்கு புதுவிதைகள் இட்டவர்
எமக்குத் தொழில் கவிதை என்று கவிநாற்று நட்டவர்

தலைவணங்கும் பழக்கமில்லை தன்மானம் மிக்கவரவர்
தமிழ் மொழிபோல் கண்டதில்லையென்ற சொக்கரவர்

பழமொழிகள் கற்றுணர்ந்த விர்ப்பணரவர்
பாடங்கள் பலசொன்ன சுப்பனரவர்

தூரத்து தேசங்களுக்கும் கவிமடல்கள் வரைந்தவர்
பாரதத்துத் தோசம்நீங்கப் படைத்தவனிடம் இறைஞ்சியவர்

தன்மனைவி தன்குழந்தை நலன்களை மறந்தவர்
தமிழனாகப் பிறந்தவர்களில் தலையாயச் சிறந்தவர்


காணிநிலமும் கேணியும் கேட்ட ஞானியவர்
காலங்களைக் கடந்து நிற்கும் தோணியவர்

வெள்ளைக் கூட்டத்தை விரட்டவந்த வேங்கையவர்
சொல்லை வில்லாக்கிச் சொற்ப்போர் புரிந்தவர்


தாயின்மணிக் கொடியை பாரீர்ரென்று புகழ்ந்துரைத்தவர்
தரணியிலே பிறப்பாரா அவர்போல இனியொருவர்


காலச் சோலையிலே கூவுகின்ற குயில்அவர்
ஞாலக் கவியாலே நடைபயின்ற மயில்அவர்

தொலைநோக்குப் பார்வையிலே தொல்நோக்கியவர்
கலைநோக்கு சாத்திரங்களில் கல்நீக்கியவர்

தனிமனிதப் பசிக்காக உலகழிப்போம் என்றவர்
தன்பசியைத் தான்போக்கத் தன்உடலைத் தின்றவர்


பாப்பாவி்ற்கும் சொன்ன பிள்ளை மொழிக்காரரவர்
பாதகம் செய்பவரை முகத்தில் உமிழ்ந்துவிடச் சொன்னவரவர்


சக்திபுகழ் பாடிநின்ற பித்தரவர்
முக்திபெற்று முழுநிலவான சித்தரவர்


சொன்னபடி வாழ்ந்து நிறைந்த நெறியரவர்
சொன்னபடி வாழ்கின்ற கவிஞர் இன்றுஎவர்



குறைந்த வயதில் காலமான நிறைகுடம் அவர்
நிறைந்த கவிகளிலே மணிமகுடமாகத் திகழ்பவர்

இறக்கின்ற போதிலும் இல்லாத வறியரவர்
சுடுகாடு சென்றவர்கள் இருபதிலும் குறைவர்


தாசனுக்கு ஆசானான நேசனவர்
நீக்கமற நிறைந்திருப்பதில் ஈசனவர்

மான்கவிகள் வான்கவிகள் பிறப்பார் இறப்பார்
மகாகவி என்று சொன்னால் பாரதி மட்டுமே நிலைப்பார் .

கோழிக் குஞ்சு



தாய்க்கோழி இறகுகளின் தகதகக்கும் வெப்பத்தில்
போய்ஒளிந்து மூடிகொண்டு போர்வையென அணிந்தாயே

உடற்சூட்டை உள்ளிறக்கி உனக்காக தனைஉருக்கி
இடர்பட்டக் கதையெல்லாம் இதுவென்று அறிவாயா

இருபத்தி யொருநாளும் இளைத்தகதை உணர்வாயா
இனவிருத்தி இதுவென்று இடர்பாட்டை மறவாயா


பருந்தோடு சண்டையிட்டு புண்பட்ட உன்தாயும்
பிரிந்தோடு என்றுசொல்லி பிரிக்கும்கதை தெரிவாயா

விரைந்தோடும் இவ்வுலகில் வேதனைக்குப் பஞ்சமில்லை
மறைந்தோடும் மண்ணுலகின் மகத்துவம் இதுவென்று

மனதார ஏற்றுநீயும் மகிழ்வுடன் வளர்வாயா
மனம்தளரா இளநெஞ்சே மரணத்திற்கும் இனியஞ்சேல்

கொத்திவிரட்டும் தாய்க்கோழி கோபமல்ல சிறுகுஞ்சே
புத்திபுகட்டும் உனக்காக புத்தனைப்போல் தாய்நெஞ்சு .