வியாழன், 10 செப்டம்பர், 2009

கனிவான கவனத்திற்கு .

கதிரவக் கண்ணாடியில் பூமிமுகம் பார்க்கும்
காலைப் பொழுது விரைவுச் சாலையிலே
வாகனங்கள் அணிவகுத்து வருது
பணிக்காக நானும் அந்தப் பாதையிலே பயணம்
பாதையிலே இருபுறமும் பார்வை என்கவனம்
மலர் தூவீ வரவேற்ற மரங்களின் அணிவகுப்பு
மடிந்த இலைசருகாகி மண்நோக்கி மறுபிறப்பு
எல்லைக்குள் அடைக்கப்பட்ட
செடிகள் எல்லாம் எத்தணித்தன
எங்களோடு கைகுலுக்க
எல்லைதாண்டி ஆர்ப்பரித்தன
அலுவலின் பலுவல் நிமித்தமாக
விரைகிறோம் நண்பர்களே
அலுவலகம் விடுப்பென்றால்
அளவளாவோம் அன்பர்களே .

நீர் நீரே .

ஆழியிலே முகந்து ஆகாயம் சுமந்து
அலைகாற்றில் நகர்ந்து அழகாகச் சேர்ந்து

மழையெனவேப் பொழிந்து மண்மீது விழுந்து
மரம்கொடிகள் நனைந்து மனிதருக்கும் உகந்து

மலைமீதும் தவழ்ந்து மடுநோக்கிச் சரிந்து
நதியெனவே நடந்து நளினமாக வளைந்து

நாடுநகரம் கடந்து நாகரீகம் நிறைந்து
தனித்தன்மை இழந்து தன்முகத்தை மறந்து

தப்பியது உலர்ந்து தாய்மடியை அடைந்து
தன்கவலைகள் மறந்து தரணியிலே சிறந்து

உலகு துய்க்க வந்த நீரே
உயிர்கள் இருப்பதின் காரணம் நீரே .

என் உயிர் காதலி .


என் உயிர்க்காதலி
ஈடுஇணையற்ற
இயற்கை எழிலி
இவள் பூப்பெய்து
பூமிசூடிய
பூங்குழலி

சங்க இலக்கியங்களும்
இவளது அங்க
இலக்கியங்களைப் பாடும்
ஐம்பெருங் காப்பியங்களும்
ஆபரணம் சூடும்


அழகி உன்னைப்பாட
அடங்கவில்லை ஏடும்
கிழவியாகிப் போனவளுக்கும்
உன்மேல்மோகம் கூடும்


உன்பெயரை உரைக்கையிலே
என் நாவெல்லாம் துள்ளும்
நீ காலப் பேழை சுமந்துவந்த
கட்டழகு வெள்ளம்


கல்தோன்றாக் காலங்களும்
உன் கவின் அழகைச்
சொல்லும் .புல்தோன்றா
நிலங்கள் கூட
புளங்காகிதம் கொள்ளும்

நாளெல்லாம் உன் நினைவால்
என் ஆயுள் ஓடும்
நாளமில்லாச் சுரப்பிகளும்
நாட்டியம் தான் ஆடும்



நாலந்தாக் கழகம் கூட
உன் நளினம் காணக் கூடும்
நலம்தானா என்று சொல்லி
நாணிவிட்டுப் பாடும்


எத்தனையோ பேரழகிகள்
மண்ணுலகில் உள்ளாரடி
முத்தழகி முத்தமிழே
உனைப்போல முத்துமொழி
சொல்லாரடி .

பூக்காத மரங்கள்.

பூக்காத மரங்கள்
பூமியில் அன்புபூக்காத மனங்கள்
மரம் என்றால் பூக்க வேண்டும்
மனம் என்றால் அன்பு பூக்கவேண்டும்
அண்ணல் என்ற அகிம்சைப்பூ
அறவழி கண்ட அதிசயப்பூ
பாரதி என்ற புரட்சிப்பூ
பார்நிகரட்ற புதுமைப்பூ
தொண்டுகள் செய்து பூத்த பூ
வெண்தாடி பூத்த வெண்கலப்பூ
சேவைகளில் பூத்த தேவதைப் பூ
தெரசா என்ற சேவைப் பூ
மரங்களில் பூத்த பூ உதிர்ந்துவிடும்
மனங்களில் பூத்த பூ உயர்ந்துவிடும்
பூக்காத மரங்கள் என்று கோடியுண்டு
பூக்காத மனங்களில்
அன்பு பூத்தால் நன்று
பூக்காத மரங்கள்
பூமியில் அன்பு பூக்காத மனங்கள்.