வெள்ளி, 21 ஜனவரி, 2011

வீரத்தைப் போற்றிடுவோம் .



தென்றலோடு தேன்கலந்து
தேமதுரத் தமிழ்குழைந்து
மன்றத்திலே கவிபாடும்
மாமதுரைக் கவிஞரிவர்


குன்றிலிட்ட மணிவிளக்காய்
குரலினிலே இடிமுழங்க
நன்றமர்ந்த நாயகரே
நரைத்த இளஞ்சூரியரே


வீரபாண்டித் தென்னவரே
வணக்கமைய்யா முன்னவரே
சிரம்தாழ்த்தி வணங்குகிறேன்
செவிமடுக்க அவையோரை



வங்கமண் வளர்த்தெடுத்த
வரலாற்று நாயகனாம்
மங்காதப் புகழ்படைத்த
மாவீரர் நேதாஜி


அடிமையென விலங்குபூட்டி
ஆளவந்த கூட்டத்தின்
அடிமடியைக் கலங்கடித்த
ஆற்றல்மிகு வீரமகன்



தன்மானம் சுயவேட்கை
தளராத செயல்வேகம்
எந்நாளும் போற்றிடவே
எழுந்துவந்த மதியூகம்


வெட்டிபேச்சில் வீண்பேச்சில்
விடியாது என்றெண்ணி
பட்டதெல்லாம் போதுமென்று
பாய்ச்சல்கண்ட வங்கப்புலி


பக்கிங்காம் பளபளக்க
பாரதத்தாய் கண்ணீர்சிந்த
கொக்கரித்துக் கோபங்கொண்டு
கொதித்தெழுந்த கொள்கைவீரர்


பேச்சினிலே புயல்வேகம்
பெருங்கூட்டம் சேரக்கண்டு
மூச்சதனை நிறுத்திடவே
முயன்றவர்கள் தோல்வியுற்றார்


தாய்நாட்டின் விடுதலையை
நாய்களிடமா கேட்பதென்று
சாய்த்திடவே எண்ணியவர்
சரித்திரத்தை மாற்றிவிட்டார்

சிங்கைநகர் சீரமைத்த
சீற்றமிகு படையாலே
சங்கநாத ஒலிஎழுப்பி
சமுத்திரத்தைக் கலங்கடித்தார்

பொங்குதமிழ் மறவரெல்லாம்
புடைசூழ்ந்து பின்தொடர
மங்கையரும் பங்குபெற்ற
மகத்தான யுகப்புரட்சி


இளைஞரெல்லாம் எழுச்சியுற்று
எழுந்துவந்த எரிமலையாய்
அலைஅலையாய் திரண்டுவந்து
அணிவகுத்தப் பெருங்கூட்டம்


மிடுக்கான உடையமைப்பில்
மிரண்டுபோன பகைவரெல்லாம்
நடுக்கமுடன் எதிர்கொண்டு
நாளெல்லாம் போரிட்டார்


வஞ்சகங்கள் ஒன்றுசேர
வாய்ப்புக்காக பின்வாங்கி
துஞ்சாமல் துயிலாமல்
தூரதேசம் சென்றுவிட்டார்


விடியலாகப் பின்னாலே
விடுதலையைப் பெற்றபோதும்
விடிவெள்ளி வீரமதை
விதைநெல்லாய் தூவிச்சென்றார்


இறந்துவிட்டார் என்றெண்ணி
இறுமார்ந்த ஓநாய்கள்
பிறந்துவந்த பிள்ளைதனின்
பெயரதனை அறிவாரோ


வீரனுக்கு மரணமில்லை
வெகுண்டெழுவார் வேலுப்பிள்ளை
பிரபாவதி பெற்றெடுத்து
பேராண்மை பெற்றவரே


மறவாது இவ்வுலகம்
மகத்தான வீரமதை
இறவாத புகழ்வாழ்க
இலங்கையிலும் தமிழ்மீள்க


பஞ்சத்திற்கு அடிபணியும்
பரதேசிக் கூட்டம்போல
வ்ஞ்சகத்தில் வழிதவறி
வாக்களித்துச் சென்றிடாதீர்


கொள்ளையிட்ட பணம்கோடி
கொள்கையெல்லாம் தெருக்கோடி
வெள்ளையனே தேவலடா
விளங்கவில்லை லட்சங்கோடி


ஆட்டுமந்தைக் கூட்டமல்ல
அறிந்திடுவீர் தோழர்களே
நோட்டுவிந்தைக் காட்டினாலும்
நேர்மையுடன் நின்றிடுவீர்


உரிமைக்காக உயிர்நீத்த
உத்தமர்கள் பூமியிது
நரிகலெல்லாம் நாடாண்டால்
நாணிலமும் தாங்காது


அஞ்சாத நெஞ்சத்தின்
அருஞ்சொற்பொருள் அறிந்திடுவீர்
நெஞ்சார வீரத்தை
நேசித்துப் போற்றிடுவீர் .

கவிஞர் .மதுரா .வேள்பாரி