புதன், 9 செப்டம்பர், 2009

யாதுமாகி நின்றாய் .


நீக்கமற எங்கெங்கும் வேதமாகி
நோக்குகின்ற திசையெல்லாம் கீதமாகி
காக்கின்ற தெய்வமென யாதுமாகி
பார்க்கின்றேன் பாரதியே பாரெங்கும் உன்வடிவை


கவியரங்கத் தலைமை யேற்றக் கறுப்புச் சூரியரவர்
கவிவரியில் மரபில் திளைத்து ஊறியரவர்
உணர்ச்சிக் கவிபடித்தால் ஒழுகுமையா கண்ணீரு
தளர்ச்சி வயதிலும் தமிழ் படைக்கும் எங்கள் கவிஞரேறு


உரம்படைத்த தெய்வத்தின் உண்மைக்கதை கேட்டிடுவீர்
கரம்கூப்பி வணங்குகிறேன் காத்திடுக என்தெய்வம்

கவியுலகில் கதிரவனாய் காண்கின்ற திசையாவும்
புவியாவும் நிறைந்தாயே புரட்சிக் கவிபாரதியே

ஆயிரம் கோடித் தெய்வமென அறிவிலிகள் தினம்தேடி
ஆலயம்தான் நாடுகிறார் அறிவுஎனும் மனம்மூடி

என்தெய்வம் நீயெனவே எடுத்திங்கே இயம்புகிறேன்
காத்திடுக காலமெல்லாம் கடவுளுனை நினைந்துருக

சாத்திரங்கள் படைத்திட்ட சாமியெல்லாம் சொன்னகதை
ஆத்திரம் கொண்டாயே அதிலொன்றும் உண்மையில்லை

சூத்திரம் சொல்லிடவே சூட்சுமமாய் ஒருசாதி
மூத்திரம் அள்ளிடவே முறைதவறி ஒருநீதி

ரவுத்திரம் கொண்டாயே கவிமகனே அதைச்சாடி
பவித்திரம் ஆனாயே பரம்பொருளின் வடிவாகி

நடமாடும் மனிதருக்கு நல்வினைகள் செய்தாலே
படமாடும் பரமனுக்கு படைத்ததுபோல் ஆகுமென்று

புடம்போட்டுச் சூடினாயே புலயனுக்கும் பூநூலை
வடம் பிடித்து இழுக்கவேண்டும் வாருமையா இவ்வேளை

புனிதமானச் சாமியெல்லாம் பூவுலகை மறந்தபோது
மனிதவுருச் சாமியாக மண்ணுலகில் அவதரித்தாய்

அப்பனுக்குப் பாடம்சொன்ன அழகுவேலன் சுப்பையா
அற்பனுக்கு பாடம்சொல்ல பாரதியாய் வந்தாயா

தமிழ்கேட்ட வேல்முருகன் தமிழ்காக்க வந்தானோ
தமிழ்காத்து தரணிக்கே தலைமகனாய் நின்றானோ

சூரனை வதம்செய்த சுப்ரமணிய வடிவாகி
பாரெனவே நடைபயின்றாய் பாங்குடனே மிடுக்காக

வேலெடுத்து வேலவனும் வியணுலகை வென்றதுபோல்
கோலெடுத்து வந்தாயோ கொடுமைகளை களைந்தெடுக்க
எழுதுகோலெடுத்து வந்தாயோ எரிமலையாய் கவிவடிக்க

உன்கவியுடுக்கை ஒலித்தபின்தான் புவிமிடுக்காய் நடந்ததையா
அருள்கிளர்ந்து எழுந்ததையா இருலொளிந்து போனதையா

நாமகளின் பட்டம்பெற்று நாணிலமும் பயனுறவே
பூமகளின் மேனியிலே புனிதனாக அவதரித்தாய்

கோளவிழிப் பார்வையிலே குளிர்ந்துவிடும் எரிமலையும்
ஞாலமொழிப் புலமையிலே எழுந்துவரும் பலகலையும்

பரம்பொருளின் படைப்பதனின் பக்குவத்தை நீயுணர்ந்து
வரம்புகளை உடைத்தெடுத்தாய் வல்லமையாய் கவிவடித்து

நரம்புகளும் புடைத்துவிடும் நாணமது ஓடிவிடும்
சுரந்துவரும் நின்கவியில் சுயவுணர்வு மரியாதை

இடர்பட்ட தேசமதை இருளிலே மீட்டெடுக்க
சுடர் விட்டாய் கவிவிளக்காய் பாரதத்தின் துயர்துடைக்க

மண்ணிலே தெய்வமெல்லாம் மலிந்துவிட்ட கணப்பொழுது
கண்ணிலே ஒளிபொங்க கருக்கொண்ட கவிமுகிலே

அதர்மங்கள் அதிகரிக்க அவதாரம் உண்மையென்றால்
அதனாலே அவதரித்த அருந்தெய்வம் நீயன்றோ

பலதெய்வம் இங்குண்டு பட்டியலும் கொஞ்சமல்ல
குலதெய்வம் நீயென்று வணங்குவதில் குறையுமில்லை

கூடிநின்ற பொருளனைத்தின் கூட்டமெல்லாம் தெய்வமென்று
வாடிநின்ற பயிர்களை வள்ளலாரும் கண்டதுபோல்

உயிர்களெல்லாம் ஒன்றென்று உணர்ந்து சொன்னாய் உள்ளொளியாய்
உயிர்களிலே நீக்கமற நிறைந்துவிட்டாய் நல்ளொளியாய்

யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழியே இனிமைஎன்றாய்
யாதுமாகி நீக்கமற கவிவரியால் உலகுவென்றாய்

முகில்யிடிக்கும் முகவரியாய் முடிதனிலே முண்டாசு
முறுக்கிவிட்ட மீசையினால் உன்குலமும் ரெண்டாச்சு

குறத்தியவளை மணமுடித்து குலமெல்லாம் ஒன்றென்று
துரத்தியன்று காதலித்தான் ஈசனவன் குமரனவன்

நிறத்திலொரு பிரிவில்லை யாவுமே ஒன்றென்று
துரத்தினாயே சாதிஎன்னும் சமுதாயப் பேய்தனை

கழுதைதனை பன்றிதனை தேளதனை தெய்வமென்று
அழுதகதை என்னவென்று நான்சொல்வேன் எஞ்சாமி

உயிர்களெல்லாம் ஒன்றென்று உணர்ந்துசொன்ன கவிவரியால்
உன்புகழை இன்றுவரை தொழுகிறது தமிழ்பூமி

அன்பே சிவமென்றால் அறிவேதெய்வமென்றாய்
அறிந்துகொண்டோம் ஐயமில்லை அறிவுதெய்வம் நீயன்றோ

தனிமனித பசிகண்டு தணலெனவே தகதகத்தாய்
இனியிருக்க வேண்டாமென்று கவிவரியால் உலகழித்தாய்

குருவிகளுக்கு உணவளித்து குழந்தைகளை மறந்துவிட்டாய்
அறிவிருக்கும் இடமெல்லாம் அகல்விளக்காய் நிறைந்துவிட்டாய்

காணிநிலம் கடன்கேட்டா காளியிடம் வரம்கேட்டாய்
நாணிடவே அழுதிருப்பாள் தன்மகனின் தமிழ்பாட்டால்

வரம்கொடுக்க வந்தவனே வரம் கேட்டால் என்னசெய்வாள்
உரம் போன்ற உன்நெஞ்சின் உள்நினைவை அவளறிவாள்

நிற்பதும் நடப்பதும் பறப்பதும் சொர்பனமெனே
அர்ப்பணமாய் உனைக்கொடுத்தாய் அவளுக்குத் தெரியாதா

சுப்பனவன் சூட்சுமமாய் காலனைவரச் சொல்லி
அப்பனைபோல் மிதித்த அந்தஆதிகதை அறியாததா

பூமியிலே சாமியெல்லாம் பிறந்துவந்த கதையெல்லாம்
படித்ததுண்டு பாடம் சொல்லி பக்குவமாய்க் கேட்டதுண்டு

லீலைசெய்யும் சாமியெல்லாம் இன்றுவரை இங்குண்டு
சேலைதனைக் கண்டுவிட்டால் மாலையிலே வேலையுண்டு

பல்லாக்கில் பவனிவரும் பங்காரு அம்மாசாமி
நல்வாக்கு சொல்லிடவே நாடெங்கும் பலசாமி
செல்வாக்கு பெற்றிருக்கு சேமமுடன் சாமியெல்லாம்

கொலைபுரிந்தச் சாமியெல்லாம் கோடியிலே புரளலையிலே
விலையில்லாச் சாமிநீயோ வறுமையிலே வாடிநின்றாய்

சிலைவடிவச் சாமியெல்லாம் கடல்தாண்டி விற்பணையில்
கலைவடிவச் சாமி நீயோ கவிஉலகில் விற்பனனாய்

காணக் கிறுக்கனென வருமையுனை உண்டபோதும்
ஞானச் செறுக்கினாலே வருமைதனை உண்டுவிட்டாய்

ஈழத்து ஓலமதனை மூலமாக நீயுணர்ந்து
பாலமிடச் சொன்னாயே பார்ரதனைக் கேட்கவில்லை

வேரற்றுப் போனதையா வேதனையே அங்குமிச்சம்
நீருற்ற வருவாயா நின்கவியால் அடைகஉச்சம்

வையகத்துள் வாழ்வாங்கு வாழ்ந்தாயே வணங்குகிறோம்
தெய்வத்துள் வைக்கப்பட்ட திருமகனே அருள்புரிக .