புதன், 6 நவம்பர், 2013

மங்கள்யான்









செவ்வாயால் தோசமென்று
செப்புகின்ற சோதிடமும்
அவ்வாயில் அமைத்ததன்று
அதற்குமொருப் பரிகாரம்

கொவ்வாயாய்ச் சிவந்துநிற்கும்
குமரிகளும் கோடியுண்டு
கொய்வதற்குக் குமரரில்லை
கொடுமையடா வகுத்தஎல்லை

இருவருக்கும் செவ்வாயா
இணைத்திடுவார் மங்களமாய்
இதுகாறும் ஒலித்தக்குரல்
இதயத்திலே வெங்கலமாய்

செவ்வாயில் நாள்குறித்துச்
செலுத்திவிட்டார் விண்கலத்தை
சேமமுறச் சென்றடையும்
செப்பிடுவார் நம்பலத்தை

செவ்வாயில் பொருள்வாங்கச்
செல்வமெல்லாம் பெருகிடுமாம்
செவ்வாயில் சென்றுவாங்கச்
சந்த‌திகள் மருகிடுமாம்

மங்களமாய்ப் பெயர்வைத்து
மண்ணுலகம் தாண்டிவிட்டோம்
மதுசூதனன் திருவடியில்
மண்டியிட்டு வேண்டிவிட்டோம்

நேசமென்று ஒன்றிருந்தால்
நெருங்கிடலாம் எவ்வாயும்
சுவாசம்வேண்டிக் காத்திருக்கு
சுத(ம)ந்திரமாய் செவ்வாயும்

வாசம்செய்யச் சென்றிடுவோம்
வான்வெளியில் தோழர்களே
தோசமென்று ஒன்றுமில்லை
துரத்திடுவோம் வீணர்களை

(செவ்வாய்க் கிழமை செவ்வாய் ஓரையில் செவ்வாய் கிரகத்திற்கு மங்கள்யான் என்ற செவ்வாய் விண்கலம் அனுப்பப்பட்டது வாழ்த்துகள் மெய்ஞான விஞ்ஞானிகளே)

வியாழன், 18 ஜூலை, 2013

நீவீர் வா(லி)ழி



தரைமேல் பிறக்கவைத்தான்
எனத் திரைத்துறை
நுழைந்தவரே

நரைகூடி நலமெய்தி
நற்புகழில் கரைந்தவரே

இளமை துள்ளும்
பாவரியால் இறுதிவரை
நீர் இனித்தாய்

முதுமையது வந்தபோதும்
முத்தமிழில் முக்குளித்தாய்

கண்ணனுக்குக் காப்பியமாய்
கவிபடைத்த ரெங்கராசர்

சொன்னவுடன் கவிவடிக்கும்
சொக்கநாதத் தமிழ்நேசர்

கவிஉலகில் துரோணராய்
களம்கண்ட வேங்கையே

செவிகுளிரச் செந்தமிழால்
சிவந்துநின்ற கங்கையே

வாய்நிறையத் தாம்பூலம்
நீர்தரிக்கும் வேளையிலே

பாய்விரிக்க ஓடிவரும்
பைந்தமிழும் உன்னிடமே

நோய்தொற்றிப் போனதாக‌
செய்தியினால் அறிந்துகொண்டேன்

நெஞ்சமது பொறுக்கவில்லை
நினைவஞ்சல் செலுத்திடவே

வஞ்சனானக் காலன்உன்னை
வழிஅனுப்பி வைத்தானோ

வானுலகம் கவிகேட்க‌
வாலிஉன்னை அழைத்தானோ

எதிர்பவரின் பலமெல்லாம்
எடுத்துக்கொள்ளும் பெயர்வைத்தாய்

எதிர்ப்பதற்கு ஆளில்லை
என்றிடவா உயிர்பி(ம‌)ரித்தாய்

உதித்துவரும் கதிரவனாய்
உன்புகழும் நிலைத்திருக்கும்

மதிப்பறிந்து போற்றுகிறேன்
மண்ணுலகில் நீவீர் வா(லி)ழி.


      

வெள்ளி, 12 ஜூலை, 2013

வி(அ)ழித்துவிடு.



ஆதியிலே ஆடையின்றி
ஆடுமாடாய் திரிந்த‌வனே
அன்னையவள் ஈன்றபோதும்
அம்மணமாய் பிறந்தவனே

பாதைபல கடந்துவந்து
பகுத்தறிவு உற்றவனே
பாவங்களைச் சுமந்துநின்று
பலி(ழி)பாவம் பெற்றவனே

சாதியென்ற பெயரைச்சொல்லி
சண்டைபல புரிபவனே
நீதியதை அறியாமல்
நேசம்கெட்டுத் திரிபவனே

ஈன்றெடுக்கும் பெண்சாதி
இடுப்பொடிக்கும் ஆண்சாதி
சான்றெடுத்தால் சாதியிலே
சாட்சிசொல்லும் இருசாதி

இட்டவனோ உயர்சாதி
இடாதவனே இழிசாதி
குற்றமற்றக் குணத்தினாலும்
குறிப்பெடுப்பார் சாதியினை

உழைப்பினிலே சாதிவைத்து
உண்மைதனை மறைத்தாயே
பிழைப்பதுவாய் ஆனதினால்
பெருங்கொடுமை செய்தாயே

தொட்டதற்கும் தீட்டுயென்று
துயரக்கதை சொன்னவனே
கூட்டமாக சாதியினை
குழப்பம்செய்ய வளர்த்தவனே

திட்டமிட்டுத் தீட்டிவைத்த
தீமையான சாதியினை
ஏட்டினிலே எடுத்துவிடு
ஏற்றம்பெறெ வி(அ)ழித்துவிடு.

புதன், 26 ஜூன், 2013

சீனா தானா.







மஞ்சளான காமாலை
மனிதருக்கு வந்துவிட்டால்
கொஞ்சமேனும் தாமதிக்கா
கொடுக்கவேண்டும் அரும்மருந்தை

வஞ்சமான சீனதேசம்
வல்லரசாய் ஆகவேண்டி
கொஞ்சநஞ்சம் செய்யவில்லை
கொடுஞ்செயல்கள் வையகத்தில்

தரம்குறைந்த பொருளனைத்தும்
தகைவில்லாமல் செய்துவித்து
நிரந்தரமாய் வணிகச்சந்தை
நிர்மூலம் ஆக்கிவைத்தார்

வரம்தருமே சாமியென்று
வல்லூறு சிங்களனும்
நிரந்தரமாய் தங்கிடவே
நேசக்கரம் நீட்டிவிட்டான்

கருவறுத்தக் கதைதனைதான்
கண்ணீராய் கவிவடித்தோம்
அருவறுத்த பெளத்தத்தினால்
அனுதினமும் உயிர்துடித்தோம்

பாதமதில் சீழ்பிடித்தால்
பக்குவமாய் நீக்கவேண்டும்
சேதமின்றி சீக்கிரமாய்
சேமநலம் காக்கவேண்டும்

பாரதத்தின் பாதத்திலே
படைபலத்தை நிறுத்திவிட்டான்
பாரமென்று மீனவரை
பாவியவன் விரட்டிவிட்டான்

சாரமின்றி சகலருமே
சலம்புகின்ற வேளையிலே
ஓரமாக இமயமதின்
உச்சந்தலை உலுக்கிவிட்டான்

நேரமில்லை இந்தியனே
நீண்டதுயில் களைத்துவிடு
தூரமில்லை சாவுனக்கு
துணிந்துவிடின் பிழைத்துவிடு.

(லடாக் பகுதியை சீனராணுவம் கைப்பற்றியபொழுது என்னுள் பற்றியது)

செவ்வாய், 25 ஜூன், 2013

பெரும்பி(ம)ழை








 பெரும்பி(ம)ழை


மேகமது வெடிப்புண்டு
மேவியதோ மாமழையும்
தாகமதைத் தீர்த்திடவே
தரணியிலே மழைபொழியும்

தேகமதில் மூன்றுபங்காய்
தேக்கிவைத்த நீரதனை
யாகமது  வளர்த்திங்கு
யாசகமும் செய்கின்றோம்

மோகமது கொண்டிடவே
கருக்கொண்ட முகில்கூட்டம்
யூகமது இல்லாமல்
உதிர்த்த‌தன்றோ உத்ரகாண்டில்

வேகமாகப் பாய்ந்துவந்த
வேங்கையான வெள்ளத்தினால்
வேதனையாய் மக்களெல்லாம்
வியனுலகை எய்துவிட்டார்

விதியிதுவா எண்ணிடுவீர்
வாழுகின்ற மானிடமே
நதிகளெல்லாம் ஒன்றிணைத்து
நாடெங்கும் பாய்ச்சிவிட்டால்


சதிஇதுபோல் நடந்திடுமா
சங்கரனைப் பழித்திடுமா
மதியுகமாய் மண்ணுலகில்
நதிகளெல்லாம் ஒன்றிணைப்போம்

மறுபடியும் மழைபொழிந்தால்
மரணமதின் நடையடைப்போம்.



ஞாயிறு, 26 மே, 2013

காதலெனப்படுவது










பார்வையின் பரிமாற்றத்தில்
பதியமிடப்பட்ட உணர்வு

எனக்காகவும் உனக்காகவுமான‌
எதிர்பார்ப்புகளுக்கான உறவுகளின்
காத்திருப்புகளுக்கிடையே

நான் உனக்காகவும்
நீ எனக்காகவும்
காத்திருப்பதற்கான‌
காரணப் பெயர்

திரவியத் தேடலுக்கும்
திமிலோகப்பட்ட வாழ்க்கையின்
தீராத ஓட்டத்தினூடேயும்
ஏற்படும் திட்டமிடாத்திருப்பம்

இரவோடு பகலதும்
இமயமாய் தோன்றிடும்
உறவோடு பகைவந்து
ஊமையாய் நின்றிடும்

பருவத்தின் வாசலில்
பசலையும் படர்ந்திடும்
பார்ப்பவை யாவுமே
பாரமாய் தொடர்ந்திடும்

உயிரதன் எடைதனை
உணர்ந்திடக் கூடலாம்
ஒவ்வொரு நாளதும்
உடலது வாடலாம்

நான்கறை இதயமும்
நான்மறை ஆகலாம்
நாணமும் வெட்கமும்
நலிந்தே போகலாம்

ஏக்கமும் தாக்கமும்
இருவருக்கும் உண்டெனில்
இதுதான் காதலாம்
இதயத்தால் மோதலாம்.       

அஞ்சலி



அஞ்சலி

சிங்கநாதக் குரலொலியில்
சங்கநாதத் தமிழ்முழங்கும்
வெங்கலத்துச் சுடராகி
வேணுகானம் இசைத்தமகன்

பொங்கிவரும் புணல்அழகாய்
பொதிகைமலைத் தமிழழகாய்
எங்கெங்கினும் ஏழிசையால்
இசைத்தமிழை வளர்த்தமகன்

சுந்தரமாய் தமிழ்புழங்கி
மந்திரமாய் அதில்விளங்கி
சந்ததிகள் கடந்திடினும்
சரித்திரத்தை விதைத்தமகன்

பரமனுக்கும் குரல்கொடுத்தாய்
பாமரனின் துயர்படித்தாய்
வாமனனாய் உருவெடுத்து
வையகத்தில் இடம்பிடித்தாய்

எந்திரமாய் போனவரையும்
இளக்கிவிடும் குரலழகா
இங்கிருந்து போனதேனோ
இசைத்தமிழும் உரு(அழு)குதய்யா.


இறைவனடி சேர்ந்தவருக்கு 
இதயம் கனிந்த அஞ்சலி.