திங்கள், 10 ஜனவரி, 2011

தை மகளே .


கலப்பைதனை கையில்ஏந்தி
கனவுகளை நெஞ்சில்தாங்கி
நிலப்பைதனின் நெஞ்சைக்கீறி
நீரிடுவர் விதையைத்தூவீ


பகலவனின் ஒளியைவாங்கி
பசுந்தழைகள் மண்ணைநீவி
பகலிரவாய் வளர்ந்துவரும்
பாரெங்கும் பஞ்சம்தீர


வியர்வைதனை நித்தம்சிந்தி
விடியுமென்றே சித்தம்எண்ணி
உயர்வுதனை அறியாமல்
உழைக்கின்ற உழவர்மக்கள்


நிலமகளை வணங்குகின்ற
நிறைவான பெருநாளாம்
குலம்வாழ குடிவாழ
குளிர்ந்துவரும் தைநாளாம்


பழமைகளை தீயிலிட்டு
பாதையிலே கோலமிட்டு
வளமைமிகு வசந்தத்தை
வரவேற்று வாழ்த்திடுவர்


மாவிலைத் தோரணமும்
மஞ்சள்கொத்து சூடிடவே
பூஇலை வாழைகட்டி
புடம்போட்ட பானையிலே


பச்சரிசி பனைவெல்லம்
பசும்பாலும் சேர்ந்திடவே
உச்சிவெயில் வரும்முன்னே
உவகையுடன் பொங்கல்வைப்பர்


பொங்கிவரும் வேளையிலே
பெண்மணிகள் குலவையிட
தங்கிடவே செல்வமெல்லாம்
தரணிக்கே சொல்லிடுவார்


பொங்கலோ பொங்கலென்று
பூரித்துக் கும்பிடுவார்
அங்கமெல்லாம் சிலிர்த்துவிடும்
அருந்தமிழ்ப் பண்டிகையாம்

காய்கனிகள் தேங்காயும்
கறும்போடு தேனினையும்
பாய்போல வாழையையும்
படையலுக்கு வைத்திடுவர்


கதிரவனைத் துதிபாடி
காணிக்கை செலுத்திடுவர்
புதிதாக நூலாடை
பூமிக்கும் சூடிடுவர்


காடுகழனி உழைக்கின்ற
கால்நடைக்கும் நன்றிசொல்லி
சூடிடுவார் குங்குமமும்
சூரணமும் சந்தனமும்


ஆநிரைக்கும் அழகுசேர்த்து
அமுதுபொங்கல் விருந்தளித்து
வாய்நிறைய வாழ்த்துச்சொல்லி
வணங்கிடும் பொ(ந)ன்னாளே

ஆண்டாண்டு வருவாயே
அகம்யாவும் மகிழ்ந்திடவே
வேண்டிடுவோம் தைமகளே
வேதனைகள் களைந்திடுவாய் .