புதன், 16 செப்டம்பர், 2009

அது மட்டும் வேண்டாம் .

ஏர்பின் நின்றது உலகமென்று
பார்புகழும் வள்ளுவத்தை
படித்ததோடு சரி .

போர் ஒன்றே போதுமென
வேர் அறுக்கும் உலகில்
வேதனைக்குப் பஞ்சமில்லை

உயிர் காத்த உழவரெல்லாம்
பயிர் செய்ய வழியின்றி
பத்தினியை விற்கும் அவலம்

தொடர்ந்திடும் துயரத்திற்கு உலகே
இடம் தருவாய் என்றால்
அது மட்டும் வேண்டாம் .

வியாழன், 10 செப்டம்பர், 2009

கனிவான கவனத்திற்கு .

கதிரவக் கண்ணாடியில் பூமிமுகம் பார்க்கும்
காலைப் பொழுது விரைவுச் சாலையிலே
வாகனங்கள் அணிவகுத்து வருது
பணிக்காக நானும் அந்தப் பாதையிலே பயணம்
பாதையிலே இருபுறமும் பார்வை என்கவனம்
மலர் தூவீ வரவேற்ற மரங்களின் அணிவகுப்பு
மடிந்த இலைசருகாகி மண்நோக்கி மறுபிறப்பு
எல்லைக்குள் அடைக்கப்பட்ட
செடிகள் எல்லாம் எத்தணித்தன
எங்களோடு கைகுலுக்க
எல்லைதாண்டி ஆர்ப்பரித்தன
அலுவலின் பலுவல் நிமித்தமாக
விரைகிறோம் நண்பர்களே
அலுவலகம் விடுப்பென்றால்
அளவளாவோம் அன்பர்களே .

நீர் நீரே .

ஆழியிலே முகந்து ஆகாயம் சுமந்து
அலைகாற்றில் நகர்ந்து அழகாகச் சேர்ந்து

மழையெனவேப் பொழிந்து மண்மீது விழுந்து
மரம்கொடிகள் நனைந்து மனிதருக்கும் உகந்து

மலைமீதும் தவழ்ந்து மடுநோக்கிச் சரிந்து
நதியெனவே நடந்து நளினமாக வளைந்து

நாடுநகரம் கடந்து நாகரீகம் நிறைந்து
தனித்தன்மை இழந்து தன்முகத்தை மறந்து

தப்பியது உலர்ந்து தாய்மடியை அடைந்து
தன்கவலைகள் மறந்து தரணியிலே சிறந்து

உலகு துய்க்க வந்த நீரே
உயிர்கள் இருப்பதின் காரணம் நீரே .

என் உயிர் காதலி .


என் உயிர்க்காதலி
ஈடுஇணையற்ற
இயற்கை எழிலி
இவள் பூப்பெய்து
பூமிசூடிய
பூங்குழலி

சங்க இலக்கியங்களும்
இவளது அங்க
இலக்கியங்களைப் பாடும்
ஐம்பெருங் காப்பியங்களும்
ஆபரணம் சூடும்


அழகி உன்னைப்பாட
அடங்கவில்லை ஏடும்
கிழவியாகிப் போனவளுக்கும்
உன்மேல்மோகம் கூடும்


உன்பெயரை உரைக்கையிலே
என் நாவெல்லாம் துள்ளும்
நீ காலப் பேழை சுமந்துவந்த
கட்டழகு வெள்ளம்


கல்தோன்றாக் காலங்களும்
உன் கவின் அழகைச்
சொல்லும் .புல்தோன்றா
நிலங்கள் கூட
புளங்காகிதம் கொள்ளும்

நாளெல்லாம் உன் நினைவால்
என் ஆயுள் ஓடும்
நாளமில்லாச் சுரப்பிகளும்
நாட்டியம் தான் ஆடும்



நாலந்தாக் கழகம் கூட
உன் நளினம் காணக் கூடும்
நலம்தானா என்று சொல்லி
நாணிவிட்டுப் பாடும்


எத்தனையோ பேரழகிகள்
மண்ணுலகில் உள்ளாரடி
முத்தழகி முத்தமிழே
உனைப்போல முத்துமொழி
சொல்லாரடி .

பூக்காத மரங்கள்.

பூக்காத மரங்கள்
பூமியில் அன்புபூக்காத மனங்கள்
மரம் என்றால் பூக்க வேண்டும்
மனம் என்றால் அன்பு பூக்கவேண்டும்
அண்ணல் என்ற அகிம்சைப்பூ
அறவழி கண்ட அதிசயப்பூ
பாரதி என்ற புரட்சிப்பூ
பார்நிகரட்ற புதுமைப்பூ
தொண்டுகள் செய்து பூத்த பூ
வெண்தாடி பூத்த வெண்கலப்பூ
சேவைகளில் பூத்த தேவதைப் பூ
தெரசா என்ற சேவைப் பூ
மரங்களில் பூத்த பூ உதிர்ந்துவிடும்
மனங்களில் பூத்த பூ உயர்ந்துவிடும்
பூக்காத மரங்கள் என்று கோடியுண்டு
பூக்காத மனங்களில்
அன்பு பூத்தால் நன்று
பூக்காத மரங்கள்
பூமியில் அன்பு பூக்காத மனங்கள்.

புதன், 9 செப்டம்பர், 2009

யாதுமாகி நின்றாய் .


நீக்கமற எங்கெங்கும் வேதமாகி
நோக்குகின்ற திசையெல்லாம் கீதமாகி
காக்கின்ற தெய்வமென யாதுமாகி
பார்க்கின்றேன் பாரதியே பாரெங்கும் உன்வடிவை


கவியரங்கத் தலைமை யேற்றக் கறுப்புச் சூரியரவர்
கவிவரியில் மரபில் திளைத்து ஊறியரவர்
உணர்ச்சிக் கவிபடித்தால் ஒழுகுமையா கண்ணீரு
தளர்ச்சி வயதிலும் தமிழ் படைக்கும் எங்கள் கவிஞரேறு


உரம்படைத்த தெய்வத்தின் உண்மைக்கதை கேட்டிடுவீர்
கரம்கூப்பி வணங்குகிறேன் காத்திடுக என்தெய்வம்

கவியுலகில் கதிரவனாய் காண்கின்ற திசையாவும்
புவியாவும் நிறைந்தாயே புரட்சிக் கவிபாரதியே

ஆயிரம் கோடித் தெய்வமென அறிவிலிகள் தினம்தேடி
ஆலயம்தான் நாடுகிறார் அறிவுஎனும் மனம்மூடி

என்தெய்வம் நீயெனவே எடுத்திங்கே இயம்புகிறேன்
காத்திடுக காலமெல்லாம் கடவுளுனை நினைந்துருக

சாத்திரங்கள் படைத்திட்ட சாமியெல்லாம் சொன்னகதை
ஆத்திரம் கொண்டாயே அதிலொன்றும் உண்மையில்லை

சூத்திரம் சொல்லிடவே சூட்சுமமாய் ஒருசாதி
மூத்திரம் அள்ளிடவே முறைதவறி ஒருநீதி

ரவுத்திரம் கொண்டாயே கவிமகனே அதைச்சாடி
பவித்திரம் ஆனாயே பரம்பொருளின் வடிவாகி

நடமாடும் மனிதருக்கு நல்வினைகள் செய்தாலே
படமாடும் பரமனுக்கு படைத்ததுபோல் ஆகுமென்று

புடம்போட்டுச் சூடினாயே புலயனுக்கும் பூநூலை
வடம் பிடித்து இழுக்கவேண்டும் வாருமையா இவ்வேளை

புனிதமானச் சாமியெல்லாம் பூவுலகை மறந்தபோது
மனிதவுருச் சாமியாக மண்ணுலகில் அவதரித்தாய்

அப்பனுக்குப் பாடம்சொன்ன அழகுவேலன் சுப்பையா
அற்பனுக்கு பாடம்சொல்ல பாரதியாய் வந்தாயா

தமிழ்கேட்ட வேல்முருகன் தமிழ்காக்க வந்தானோ
தமிழ்காத்து தரணிக்கே தலைமகனாய் நின்றானோ

சூரனை வதம்செய்த சுப்ரமணிய வடிவாகி
பாரெனவே நடைபயின்றாய் பாங்குடனே மிடுக்காக

வேலெடுத்து வேலவனும் வியணுலகை வென்றதுபோல்
கோலெடுத்து வந்தாயோ கொடுமைகளை களைந்தெடுக்க
எழுதுகோலெடுத்து வந்தாயோ எரிமலையாய் கவிவடிக்க

உன்கவியுடுக்கை ஒலித்தபின்தான் புவிமிடுக்காய் நடந்ததையா
அருள்கிளர்ந்து எழுந்ததையா இருலொளிந்து போனதையா

நாமகளின் பட்டம்பெற்று நாணிலமும் பயனுறவே
பூமகளின் மேனியிலே புனிதனாக அவதரித்தாய்

கோளவிழிப் பார்வையிலே குளிர்ந்துவிடும் எரிமலையும்
ஞாலமொழிப் புலமையிலே எழுந்துவரும் பலகலையும்

பரம்பொருளின் படைப்பதனின் பக்குவத்தை நீயுணர்ந்து
வரம்புகளை உடைத்தெடுத்தாய் வல்லமையாய் கவிவடித்து

நரம்புகளும் புடைத்துவிடும் நாணமது ஓடிவிடும்
சுரந்துவரும் நின்கவியில் சுயவுணர்வு மரியாதை

இடர்பட்ட தேசமதை இருளிலே மீட்டெடுக்க
சுடர் விட்டாய் கவிவிளக்காய் பாரதத்தின் துயர்துடைக்க

மண்ணிலே தெய்வமெல்லாம் மலிந்துவிட்ட கணப்பொழுது
கண்ணிலே ஒளிபொங்க கருக்கொண்ட கவிமுகிலே

அதர்மங்கள் அதிகரிக்க அவதாரம் உண்மையென்றால்
அதனாலே அவதரித்த அருந்தெய்வம் நீயன்றோ

பலதெய்வம் இங்குண்டு பட்டியலும் கொஞ்சமல்ல
குலதெய்வம் நீயென்று வணங்குவதில் குறையுமில்லை

கூடிநின்ற பொருளனைத்தின் கூட்டமெல்லாம் தெய்வமென்று
வாடிநின்ற பயிர்களை வள்ளலாரும் கண்டதுபோல்

உயிர்களெல்லாம் ஒன்றென்று உணர்ந்து சொன்னாய் உள்ளொளியாய்
உயிர்களிலே நீக்கமற நிறைந்துவிட்டாய் நல்ளொளியாய்

யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழியே இனிமைஎன்றாய்
யாதுமாகி நீக்கமற கவிவரியால் உலகுவென்றாய்

முகில்யிடிக்கும் முகவரியாய் முடிதனிலே முண்டாசு
முறுக்கிவிட்ட மீசையினால் உன்குலமும் ரெண்டாச்சு

குறத்தியவளை மணமுடித்து குலமெல்லாம் ஒன்றென்று
துரத்தியன்று காதலித்தான் ஈசனவன் குமரனவன்

நிறத்திலொரு பிரிவில்லை யாவுமே ஒன்றென்று
துரத்தினாயே சாதிஎன்னும் சமுதாயப் பேய்தனை

கழுதைதனை பன்றிதனை தேளதனை தெய்வமென்று
அழுதகதை என்னவென்று நான்சொல்வேன் எஞ்சாமி

உயிர்களெல்லாம் ஒன்றென்று உணர்ந்துசொன்ன கவிவரியால்
உன்புகழை இன்றுவரை தொழுகிறது தமிழ்பூமி

அன்பே சிவமென்றால் அறிவேதெய்வமென்றாய்
அறிந்துகொண்டோம் ஐயமில்லை அறிவுதெய்வம் நீயன்றோ

தனிமனித பசிகண்டு தணலெனவே தகதகத்தாய்
இனியிருக்க வேண்டாமென்று கவிவரியால் உலகழித்தாய்

குருவிகளுக்கு உணவளித்து குழந்தைகளை மறந்துவிட்டாய்
அறிவிருக்கும் இடமெல்லாம் அகல்விளக்காய் நிறைந்துவிட்டாய்

காணிநிலம் கடன்கேட்டா காளியிடம் வரம்கேட்டாய்
நாணிடவே அழுதிருப்பாள் தன்மகனின் தமிழ்பாட்டால்

வரம்கொடுக்க வந்தவனே வரம் கேட்டால் என்னசெய்வாள்
உரம் போன்ற உன்நெஞ்சின் உள்நினைவை அவளறிவாள்

நிற்பதும் நடப்பதும் பறப்பதும் சொர்பனமெனே
அர்ப்பணமாய் உனைக்கொடுத்தாய் அவளுக்குத் தெரியாதா

சுப்பனவன் சூட்சுமமாய் காலனைவரச் சொல்லி
அப்பனைபோல் மிதித்த அந்தஆதிகதை அறியாததா

பூமியிலே சாமியெல்லாம் பிறந்துவந்த கதையெல்லாம்
படித்ததுண்டு பாடம் சொல்லி பக்குவமாய்க் கேட்டதுண்டு

லீலைசெய்யும் சாமியெல்லாம் இன்றுவரை இங்குண்டு
சேலைதனைக் கண்டுவிட்டால் மாலையிலே வேலையுண்டு

பல்லாக்கில் பவனிவரும் பங்காரு அம்மாசாமி
நல்வாக்கு சொல்லிடவே நாடெங்கும் பலசாமி
செல்வாக்கு பெற்றிருக்கு சேமமுடன் சாமியெல்லாம்

கொலைபுரிந்தச் சாமியெல்லாம் கோடியிலே புரளலையிலே
விலையில்லாச் சாமிநீயோ வறுமையிலே வாடிநின்றாய்

சிலைவடிவச் சாமியெல்லாம் கடல்தாண்டி விற்பணையில்
கலைவடிவச் சாமி நீயோ கவிஉலகில் விற்பனனாய்

காணக் கிறுக்கனென வருமையுனை உண்டபோதும்
ஞானச் செறுக்கினாலே வருமைதனை உண்டுவிட்டாய்

ஈழத்து ஓலமதனை மூலமாக நீயுணர்ந்து
பாலமிடச் சொன்னாயே பார்ரதனைக் கேட்கவில்லை

வேரற்றுப் போனதையா வேதனையே அங்குமிச்சம்
நீருற்ற வருவாயா நின்கவியால் அடைகஉச்சம்

வையகத்துள் வாழ்வாங்கு வாழ்ந்தாயே வணங்குகிறோம்
தெய்வத்துள் வைக்கப்பட்ட திருமகனே அருள்புரிக .

ஞாயிறு, 6 செப்டம்பர், 2009

காஞ்சித் தலைவன்


சொல்லாற்றல் வன்மையிலே சுரந்துவரும் கவிநடையில்
கள்ளுண்ட போதையென கிறங்கிடுவர் உரைநடையில்

பெரியாரின் பாதைபற்றி பவனிவந்த அறிஞரவர்
தறிநெய்யும் காஞ்சிநகர் தென்னகத்து பெர்னாட்சா

கரகரத்த இவர்குரலின் கனிந்துவரும் பேச்சழகில்
கரமொலிக்கக் கேட்டிருப்பர் கனமழையில் நனைந்திடவே

இடியிடித்த மேகமென இளகிவரும் உரையிடையில்
போடிபோடும் வேகமது பொதிந்திருக்கும் விரலிடையில்

உருவத்திலே பார்ப்பதற்கு உன்மேனி குள்ளமென
உருவகித்தால் உன்புலமை மடைதிறந்த வெள்ளமென

நாடகத் துறையினிலே நடைபயின்றாய் ஞானியென
ஊடகங்கள் போற்றிடுமே எழுத்துலகின் தோணியென

துப்பாக்கி விரல்காட்டித் துரிதமாகச் சொன்னாலே
தப்பாமல் செய்திடுவர் தம்பியர்கள் பின்னாலே

நம்பியவர் உன்பின்னே நாடெங்கும் சேர்ந்திடவே
தம்பியவர் துணைகொண்டு உன்னாட்சி மலர்ந்ததன்று

பற்றில்லா வாழ்வினிலே பகுத்தறிவைக் கடைபிடித்தாய்
புற்றுநோய் வந்ததினால் பூமித்தாயின் மடிபுகுந்தாய்

தமிழுலகம் இன்றுவரை தவமிருக்குத் தலைவா
தமிழ் படைக்கத் தரணியிலே தளிர்த்து மீண்டும் வா வா ..