ஞாயிறு, 6 செப்டம்பர், 2009

காஞ்சித் தலைவன்


சொல்லாற்றல் வன்மையிலே சுரந்துவரும் கவிநடையில்
கள்ளுண்ட போதையென கிறங்கிடுவர் உரைநடையில்

பெரியாரின் பாதைபற்றி பவனிவந்த அறிஞரவர்
தறிநெய்யும் காஞ்சிநகர் தென்னகத்து பெர்னாட்சா

கரகரத்த இவர்குரலின் கனிந்துவரும் பேச்சழகில்
கரமொலிக்கக் கேட்டிருப்பர் கனமழையில் நனைந்திடவே

இடியிடித்த மேகமென இளகிவரும் உரையிடையில்
போடிபோடும் வேகமது பொதிந்திருக்கும் விரலிடையில்

உருவத்திலே பார்ப்பதற்கு உன்மேனி குள்ளமென
உருவகித்தால் உன்புலமை மடைதிறந்த வெள்ளமென

நாடகத் துறையினிலே நடைபயின்றாய் ஞானியென
ஊடகங்கள் போற்றிடுமே எழுத்துலகின் தோணியென

துப்பாக்கி விரல்காட்டித் துரிதமாகச் சொன்னாலே
தப்பாமல் செய்திடுவர் தம்பியர்கள் பின்னாலே

நம்பியவர் உன்பின்னே நாடெங்கும் சேர்ந்திடவே
தம்பியவர் துணைகொண்டு உன்னாட்சி மலர்ந்ததன்று

பற்றில்லா வாழ்வினிலே பகுத்தறிவைக் கடைபிடித்தாய்
புற்றுநோய் வந்ததினால் பூமித்தாயின் மடிபுகுந்தாய்

தமிழுலகம் இன்றுவரை தவமிருக்குத் தலைவா
தமிழ் படைக்கத் தரணியிலே தளிர்த்து மீண்டும் வா வா ..