ஞாயிறு, 29 நவம்பர், 2009

தாய் முகம் .

கற்றைக்குழல் முடித்துக்
காலையிலே விழித்திடுவாள்
சற்றேனும் ஓய்வின்றி
சலசலத்து உழைத்திடுவாள்


பற்றவைத்த அடுப்பினிலே
பலகாரம் செய்திடுவாள்
விற்றஒற்றைப் பணத்திலே
விறகுகளை வாங்கிடுவாள்


கற்றவித்தை எதுவென்றால்
கண்ணீரைச் சொரிந்திடுவாள்
குற்றமற்றத் தாயுள்ளம்
குறையேதும் கண்டதில்லை


அற்றைத்திங்கள் வெண்ணிலவும்
ஆழகில்லை அந்நாளில்
ஒற்றை நிலவாகி
ஒளிவீசிச் சென்றாயே


நெற்றியில் நீர்வடிய
நெருப்பூட்டிச் சமைத்தாயே
வெற்றியைக் காணுமுன்னே
வெந்தணலில் வெந்தாயே


பட்டதுயர் கொஞ்சமல்ல
பட்டபாடு என்னசொல்ல
சுட்டெரிக்கும் அகல்விளக்கில்
சூடுபட்டு நின்றபோது


பட்டறிவு வேண்டுமென்று
பாடம்சொல்லிச் சென்றாயே
சட்டமிட்டு உன்வடிவை
சாமியென வணங்கும்போது



எரிகின்ற எள்விளக்கில்
என்தாயின் ஆழகுமுகம்
தெரிகின்ற தேவதையின்
தேன்சிந்தும் நிலவுமுகம்.

2 கருத்துகள்:

  1. //////////
    நெற்றியில் நீர்வடிய
    நெருப்பூட்டிச் சமைத்தாயே
    வெற்றியைக் காணுமுன்னே
    வெந்தணலில் வெந்தாயே
    ///////////
    உண்மை.

    அழுத்தமான கவிதை.

    பதிலளிநீக்கு
  2. தங்களின் கருத்துக்கு நன்றி அன்பரே.

    பதிலளிநீக்கு