சனி, 18 அக்டோபர், 2014















சொந்தம்


கடலுக்குச் சொந்தமெனக்
கரைஅலையைச் சொல்லலாமா
படகுக்குச் சொந்தமெனப்
பாய்மரமும் எண்ணலாமா

புடலுக்குச் சொந்தமெனப்
புவியதனைச் சொல்லலாமா
படலுக்குச் சொந்தமெனப்
பாகற்காய் எண்ணலாமா

குடலுக்குச் சொந்தமெனக்
கொடும்பசியைச் சொல்லலாமா
திடலுக்குச் சொந்தமெனத்
திரள்வோரும் எண்ணலாமா

மடலுக்குச் சொந்தமென
மனமதனைச் சொல்லலாமா
குடமுழுக்குச் சொந்தமெனக்‌‌
கோபுரங்கள் எண்ணலாமா

கடவுக்குச் சொந்த‌மெனக்
காலமதைச் சொல்லலாமா
நடவுக்குச் சொந்தமென‌
நாற்றாங்கால் எண்ணலாமா

உடலுக்கு உயிர்கூட
ஒருநாளில் சொந்தமில்லை
உடனிருக்கும் உறவுகளே
உங்களுக்கு எந்தநிலை

கடனாக இவையாவும்
கடவுளவன் தந்தவினை
அடப்போடா காத்திருக்கு
அறுவடைக்கு இந்தத்தினை.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக