செவ்வாய், 28 அக்டோபர், 2014





 இவர்களெல்லாம்.


வணிகக் கூட்டத்திற்கு
வாசல்களைத் திறந்துவைத்தார்
தனியே பிரித்தாண்டு
தாழ்பணிந்து விருந்துவைத்தார்

மானவீரர்களை காட்டிவித்து
மனம் மகிழ்ந்தார்
ஈனப்பிறவிகளாய் இழிபிறப்பாய்
தொடர்கின்றார்

கொட்டிவைத்தச் செல்வங்களை
கொள்ளையிட்டுச் சென்றவர்கள்
விட்டுவைத்த வித்துக்களே
இத்தரையின் சத்ருக்களே

ஊழலென்னும் கறைபிடித்து
உள்ளமெல்லாம் சீழ்பிடித்து
காலமெல்லாம் பதுக்கிவைத்தீர்
கருப்புப்பணம் வங்கியிலே

காய்ப்பதெல்லாம் கனியுமென்று
இளவமரக் கிளிபோல‌
மாற்றமதை வேண்டியிங்கு
மையதனை விரலிலிட்டோம்

வாய்ப்பந்தல் வீரர்களும்
வரலாற்றுச் சூரர்களாய்
வாய்ப்பதனைப் பயன்படுத்தி
அரியணையில் ஏறிவிட்டார்

வாக்குறுதி தந்தவர்கள்
வாய்மொழிந்த வார்த்தையென்ன
ஆக்கமெல்லாம் செய்திடவே
அகழ்ந்திடுவோம் கருப்புப்பணம்

ஆச்சர்யமாய் இருக்கிறது
ஆள்பவரின் ஆய்வறிக்கை
கூச்சமின்றிக் குழப்புகின்றார்
கோடிகளின் வரிவிலக்கை

காக்கின்ற பூதங்களின்
கிணறுகளை வெட்டினராம்
மூக்குமட்டும் தெரிந்ததினால்
முரசறிந்தார் மூன்றுபேரை

முக்கியமாய் புள்ளிகளை
முடிந்தவரை தேடினராம்
சிக்கியவர் சில்லரைதான்
சிகரங்களைக் காணலையாம்

பார்க்கும்வரை பதுக்கிவைக்க‌
பாலகரா அவர்கலளெல்லாம்
யார்க்குமிங்கே தெரியுமடா
அரசியல்வாதி இவர்களெல்லாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக