புதன், 18 நவம்பர், 2009

நீர்க் கூத்து.





பொன்னியவள் நடைபயின்று
பூமியெல்லாம் வளம்கொழிக்க
கன்னியவள் வலம்வந்தால்
கருணையுடன் நிலம்செழிக்க

பஞ்சமில்லை தமிழகத்தில்
பாவையவள் பாயும்வரை
கொஞ்சுமலை குடகதனின்
கொடுமுடியில் பிறந்தவளை

சினங்கொண்டு குறுமுனியும்
சிறைபடுத்திச் சென்றதாலே
மனமொடிந்து போனவளை
மாமருகன் அண்ணனவன்


தடம்மாறித் தவழவிட்டான்
தரணியிலே நீர்விரிய
குடமுனியின் கோபத்தாலா
கோட்டைவிட்டோம் காவிரியை


முன்னையொரு காலத்தில்
முகிழ்த்துவிட்ட தவறினாலா
பென்னிகுக் பிறப்பெடுத்து
பேறுபெற்றான் பூமியிலே


கொண்டபல செல்வமெலாம்
கொடுத்தானே அணைஎடுக்க
கண்டுமிவர் திருந்தவில்லை
காரணத்தை அறியவில்லை

இரக்கமில்லா இழிமனத்தார்
இயலாது என்றுரைக்க
மறத்தமிழன் என்றுசொல்லி
மாமாங்கம் இவர்நடிக்க


அடுக்கடுக்காய் ஆண்டுதோறும்
அரங்கேறும் நீர்க்கூத்து
தடுக்காமல் வந்திடுமா
தாகம்தீர்த்துச் சென்றிடுமா .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக